
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
ஆதாருக்கு எதிராக முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளைக்கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து, 2018-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆதார் வழக்குகளை ஒன்றிணைத்து வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது?

ஏழை, எளிய, பாமர மக்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும், அரசு வழங்கும் உதவித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது. `வங்கிகளில் கணக்குத் தொடங்குகையில் இருப்பிடத்தை உறுதி செய்ய ஆதார் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படும்' என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆதார் அடையாள அட்டை இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சட்டத்துக்குப் புறம்பாக இங்கு குடியேறியவர்கள் ஆதார் கார்டு பெற முடியாது.
`குடிமக்களிடம் பெறப்பட்ட டேட்டாவை ஐந்து வருடங் களுக்குச் சேமித்து வைக்கலாம்' என்ற வரைமுறை நீக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் சேமித்துவைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
சி.பி.எஸ்.இ, யூ.ஜி.சி, நீட் தேர்வு ஆகியவற்றில் ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது.
மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பது சட்ட விரோதமானது. அதனால், `ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்' என்பது நீக்கப்படுகிறது.
வருமானவரிச் சட்டம் 1961 பிரிவு 139AA-ன்படி பான் கார்டு பெறுவதற்கும், வருமான வரி கட்டுவதற்கும் ஆதார் கார்டு இணைக்க வேண்டியது அவசியம்.
வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை.
தனியார் நிறுவனங்கள் கே.ஒய்.சி வாங்கும்போது அடையாள அட்டையாக ஆதாரைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அதனால் ஆதார் சட்டத்தில் பிரிவு 57 நீக்கப்பட்டுள்ளது.
கேஸ் இணைப்பு பெறுவதற்கும் ஆதார் கொடுக்க வேண்டியதில்லை.

புதிய சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம்.
`ஆதார் இருந்தால்தான் நலத்திட்டங்களின் பயனை பயனாளிகளுக்குக் கொடுக்க முடியும்' என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்த முடியாது. ஏனென்றால், இந்தத் தீர்ப்பின்படி ஆதார் வைத்திருந்தாலும் இல்லையென்றாலும், அரசாங்கம் வழங்கும் நலத் திட்டத்தின் பயன்களை அனுபவிக்க அல்லது பெற்றுக்கொள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆதாரில் கேட்கப்படும் தகவல்கள் சாதாரணத் தகவல்கள்தாம்... அவை பாதுகாப்பாக வைக்கப்படும்.
2019-ல் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டம்
ஆதார் அடையாள அட்டையை அரசிடம் பெற்றிருக்கும் சிறார்கள், அவர்களுக்கு 18 வயதானதும், அவர்கள் விரும்பினால் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்து கொள்ளலாம்.
ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் தனிநபர் அடையாளமாகக் கொடுக்கப் பட்டிருக்கும் 12 இலக்க எண்ணை யாருக்கும் தெரிவிக்க விரும்பாதவர்கள் விர்ச்சுவல் முறையைப் பின்பற்றலாம்.
விர்ச்சுவல் ஐ.டி
UIDAI அரசின் வலைதளத்தில் விர்ச்சுவல் ஐ.டி-யை உருவாக்கிக்கொள்ளும் வசதி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் 12 இலக்கமாக இருக்கும் என்பதும், அது ஒருவரின் நிரந்தரமான எண் என்பதும் நாம் அறிந்ததே, இந்த எண்ணை யாராவது தெரிந்துகொண்டால் அல்லது களவு போனால் அதிலிருந்து உரிமையாளரின் தனிநபர் விவரங்கள் அத்தனையையும் தெரிந்துகொள்ள முடியும். இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கவே விர்ச்சுவல் ஐ.டி உருவாக்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
`ஆதார் எண் கொடுக்க வேண்டும்' என்று கேட்கப்படும் இடங்களில் 16 இலக்கங்கள் கொண்ட விர்ச்சுவல் ஐ.டி-யைக் கொடுக்கலாம். UIDAI என்ற அரசின் இணையப் பக்கத்தில் விர்ச்சுவல் ஐ.டி உருவாக்கிக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் இந்த விர்ச்சுவல் ஐ.டி எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு விர்ச்சுவல் ஐ.டி எண் ஒரு நாளைக்குள் காலாவதி ஆகிவிடும் அதன் பிறகு இன்னொரு எண்ணைப் புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம். அதனால் விர்ச்சுவல் ஐ.டி எண்ணை யாரும் சேமித்துவைக்கவோ, தனிநபர் அடையாளத்தை அபகரிக்கவோ கூடிய சாத்தியங்கள் குறைவே.
`விரைவாக பான்கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என்று சமீபத்திய 2020 பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வாயிலாக இந்திய அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்.