கட்டுரைகள்
Published:Updated:

அறப்பணி தொடர்வோம்!

நிவாரண உதவி
பிரீமியம் ஸ்டோரி
News
நிவாரண உதவி

கொரோனாப் பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஆனந்த விகடன் 10 லட்ச ரூபாய் ஒதுக்கியிருந்தது.

கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு நம்மைக் காப்பதற்கே என்றாலும், அன்றாடக்கூலிகளான உழைக்கும் வர்க்கத்தை அது நேரடியாகவே பாதித்திருக்கிறது. நாடோடிகளையும் பழங்குடிகளையும்கூட இந்த பாதிப்பு விட்டுவைக்கவில்லை.

அரசுகள் அறிவித்த எந்த நிவாரண உதவியும் வானமே கூரையென வாழும் இந்த வீடற்ற நாடோடிகளைச் சென்றடையவில்லை. ரேஷன் கார்டுகளோ ஆதார்கார்டுகளோ இல்லாத இந்த அடையாளமற்ற மனிதர்கள் அன்றாட உணவுக்கே திண்டாடும் சூழல். இன்றைய சூழலில் தன்னார்வலர்களின் உதவியால் மட்டும்தான் இத்தகையோர் தமிழகமெங்கும் தப்பிப்பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ‘உதவிகள் மேலும் தேவை’ என்கிற குரல்கள் நம் காதுகளை எட்ட, களத்தில் இறங்கியது விகடன்.

கொரோனாப் பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஆனந்த விகடன் 10 லட்ச ரூபாய் ஒதுக்கியிருந்தது.

மேலும், தவித்து நிற்கும் மக்களுக்கு எப்போதும் முன்வந்து உதவும் விகடன் வாசகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கிவருகிறார்கள். இப்படிச் சேர்க்கப்பட்ட தொகையை நேரடியாக வாழ் வாதாரம் இழந்து தவிப்போரை அடையாளங் கண்டு உதவ முடிவெடுக்கப்பட்டது.

நிவாரண உதவி
நிவாரண உதவி

நிவாரண உதவித் திட்டத்தின் முதல் முன்னெடுப்பாக, கடந்த 17ஆம் தேதி சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த சுமார் 65 நாடோடிக் குடும்பங்களுக்கு விகடன் குழுமத்தின் சார்பில் இரண்டு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

அந்தப் பகுதியில் வசிக்கும் 65 குடும்பங்களில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே குடும்ப அட்டைகள் உள்ளன. மற்ற 40 குடும்பங்களுக்குக் குடும்ப அட்டைகள் கிடையாது, குறிப்பாக, அங்கு வசிப்பவர்களில் பலருக்கு ஆதார் அட்டைகூடக் கிடையாது. அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதியில் மணிமாலைகள், பொம்மைகள், சவுரி முடி விற்றுப் பிழைப்பவர்கள் இவர்கள்.

நிவாரண உதவி
நிவாரண உதவி

ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்துவந்தனர். அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி முன்னிலையில் விகடன் குழுவினர், இந்த 65 குடும்பத்தினருக்கும், முறையான சமூக விலகலைக் கடைப்பிடித்து அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட, 1,20,000 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வழங்கினோம். இந்தப் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர் ராஜ்குமார் உதவினார்.

நிவாரண உதவி
நிவாரண உதவி

“தினமும் காலையில இருந்து ராத்திரி வரைக்கும் கஷ்டப்பட்டாலும் 200 ரூபா தான் கிடைக்கும். அத வெச்சு புள்ள குட்டிகளுக்குப் பால் வாங்கிக் கொடுத்துட்டு மிச்சம் இருக்கறதுல பசியாத்திக்குவோம். எங்கள வேற வேலைக்கும் சேத்துக்க மாட்டாங்க. கிடைக்குற 200 ரூபாயும் இந்த ஊரடங்கால இல்லாமப்போயிடுச்சு. எங்களோடு சேந்து பிள்ளைகளும் பட்டினி கிடக்குதுக. அம்மா உணவகத்துல இருந்து தான் அப்பப்போ சாப்பாடு கொடுப்பாங்க. இப்போ இந்தப் பொருள்களைப் பார்த்தவுடனேதான் நம்பிக்கை வருது” என்று நெகிழ்ந்தார் பென்சிலய்யா. அவர் மட்டுமல்ல, அங்கிருந்த அத்தனை பேருக்குமே நாம் கொடுத்தது வெறும் மளிகைப்பொருள்கள் அல்ல; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற சிறிய நம்பிக்கையை.

வாசகர்கள் பங்களிப்போடு விகடனின் இந்த அறப்பணி மேலும் தொடரும்!

வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - #HelpFightCOVID19

பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.

அறப்பணி தொடர்வோம்!

நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.