உள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா?... வாசகரின் கேள்விக்குப் பதில்!#DoubtOfCommonMan

உள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா? அப்படி ஏலம் விடுபவர்களின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கமுடியும்.
மூன்று வருடங்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு குளறுபடிகளுக்கும் பிரச்னைகளுக்கும் அதிரடியான மாற்றங்களுக்கும் இடையே வரும் டிசம்பர் 27 அன்று நடக்கவிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான, மிக முக்கியமான தேர்தல். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சித் தேர்தல் நம் தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் மக்கள் அனைவரும் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் ஏராளம். அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சித் தேர்தல், தற்போது நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் ஆங்காங்கே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம், கவுன்சிலர் பதவி ஏலம் என்ற செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா? அப்படி ஏலம் விடுபவர்கள் மேல் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கமுடியும் என விகடனின் doubt of commonman பக்கத்தில் சரவணக்குமார் என்ற வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கான பதில் இங்கே...

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
``உள்ளாட்சித் தேர்தல் மட்டும் அல்ல எந்த தேர்தலிலும் ஏலம், பேரம் போன்ற நடவடிக்கைகள் எல்லாம் சட்டத்திற்குப் புறம்பான செயல். மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல்களில்தான் இதுபோன்ற பேரங்கள் அதிகமாக நடக்கின்றன. நமது அரசியல் சாசனம், தேர்தல் ஆணையம் போன்றவற்றால் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களைச் செய்யவோர் இந்தியத் தண்டனைச் சட்டம் 171E படி ஒரு வருடச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் இல்லையென்றால் இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
மேலும் தேர்தலில் தகாத வகையில் செல்வாக்கைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு இந்தியத் தண்டனைச் சட்டம் 171F மூலம் ஒரு வருடச் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம். மேலும் சிறப்பு அனுமதியின்றி, ஏதாவதொரு பொதுக்கூட்டம் நடத்துவதற்காகச் செலவு செய்தால், வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை மேம்படுத்தும் விளம்பரம், சுற்றறிக்கை, பிரசுரம் ஆகியவற்றைச் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்

இதற்கு இந்திய தண்டனைச் சட்டம் மூலமாக அபராதம் விதிக்கப்படலாம் என்றார். இது மட்டும் அல்லாது உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்களுக்கான தேவைகளை அருகே இருந்து அதைக் களையும் வகையிலான பிரதிநிதிகளை நியமிப்பதாகும், அவ்வாறான சூழ்நிலையில் பேரம் அல்லது ஏலம் எடுப்பதன் மூலமாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனில் அது ஜனநாயகத்திற்கு எதிரானதும், தண்டனைக்குரியதாகும்'' என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!