ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோரே - தாரா தோர்ன் தம்பதி, சிட்னி கடற்கறையில் வீடு வாங்க வேண்டும் என விரும்பினர். அதற்காக அந்தப் பகுதி தரகர் ஆடம் மாக்ரோ என்பவரிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தின்படி ஒரு வீடும் விலைக்கு வந்திருக்கிறது. இமெயில் மூலம் தரகர் ஆடம் மாக்ரோவுடன் தொடர்புகொள்வதாகத் தம்பதி நினைத்து, ரூ. 4.26 கோடி (420,000 பவுண்ட் ஸ்டெர்லிங் ) பணத்தையும் அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் பணத்தைத் தவறான வங்கிக் கணக்குக்கு அனுப்பிருக்கின்றனர். மேலும் ஆடம் மாக்ரோவின் இமெயில் ஐடி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தரகரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை எனத் தெரிகிறது.
உடனே தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த தம்பதி, காவல்துறையில் தரகர் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், தரகரின் வங்கிக் கணக்குக்கு பணம் வரவில்லை என்பது உறுதியானது. மேலும், தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேந்த அப்தெல் காடியா (24) என்ற இளைஞரின் வங்கிக் கணக்குக்குப் பணம் சென்றிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, "காலை எழுந்து பார்த்தேன். எனது வங்கிக் கணக்கில் பணம் வரவுவைக்கப்பட்டிருந்தது. அதை என் விருப்பத்துக்குரியவர்களுக்குத் தங்கம் வாங்க செலவழித்தேன். இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, அந்தத் தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுப்பப்பட்ட பணம் தங்கக்கட்டிகள், மேக்கப் பொருள்கள், ஆடைகள் வாங்க செலவு செய்யப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், "குற்றம்சாட்டப்பட்டவர் தரகரின் மின்னஞ்சலை ஹேக் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால், தவறுதலாக வந்த பணத்தை செலவழித்த குற்றத்துக்காக 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கிறோம்" எனத் தீர்ப்பளித்திருக்கின்றனர்.