நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், தன்னுடன் பயணம் செய்த சக பெண் பயணிமீது சிறுநீர் கழித்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். கடந்த நவம்பர் மாதம் இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும். சமீபத்தில்தான் இது குறித்து ஏர் இந்தியா கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து டெல்லி போலீஸார் சங்கர் மிஸ்ராவை தேடிவந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

அவரைத் தேடி நாடு முழுவதும் டெல்லி போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அவர் வேலை செய்த வெல்ஸ் பார்கோ என்ற அமெரிக்க நிறுவனம் அவரை நேற்று வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிடக் கூடாது என்பதற்காக விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. சங்கர் மிஸ்ரா தன் மொபைல் போனை ஆஃப் செய்துவைத்திருந்தார். இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்துவந்தது. ஆனால், அவர் தன்னுடைய சோஷியல் மீடியாவைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தார்.
டெல்லி போலீஸார் அவருடைய மொபைல் போன், சோஷியல் மீடியாவைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். அவர் தொடர்ந்து, சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தி தன் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். இதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதோடு அவர் ஒரு முறை தன்னுடைய கிரெடிட் கார்டையும் பயன்படுத்தினார். இதனால் அவர் பெங்களூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

டெல்லி போலீஸின் தனிப்படை அவரைத் தொடர்ந்து கண்காணித்துவந்தது. நேற்று இரவு அவரை பெங்களூரில் கைதுசெய்தனர். உடனே அவர் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் முன்பு சங்கர் மிஸ்ரா அழைத்துவரப்பட்டபோது அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டார். `சங்கர் மிஸ்ராவின் முகத்தை நான் பார்க்கவே விரும்பவில்லை’ என்று அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.
சங்கரின் வழக்கறிஞர் இது குறித்துக் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு அவருடைய உடைமைகளும் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மாதம் கழித்து அந்தப் பெண்ணின் மகள் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்'' என்று தெரிவித்தார்.