Published:Updated:

மணக்குள விநாயகர் கோயில் யானை: நடைப்பயிற்சியின்போது பலியான சோகம்! - மருத்துவர்கள் சொல்வதென்ன?

உயிரிழந்ந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி
News
உயிரிழந்ந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

Published:Updated:

மணக்குள விநாயகர் கோயில் யானை: நடைப்பயிற்சியின்போது பலியான சோகம்! - மருத்துவர்கள் சொல்வதென்ன?

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்ந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி
News
உயிரிழந்ந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி
புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான மணக்குள விநாயகர் கோயிலுக்கு, கடந்த 1996-ம் ஆண்டு தனது 5 வயதில் வந்து சேர்ந்தது யானை லட்சுமி.

அன்றிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில், மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் காலில் கொலுசு அணிந்திருக்கும் யானை லட்சுமியை தரிசித்து செல்வது வழக்கம். கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலை போக்கி, அவை ஓய்வெடுக்கவும், மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும் இந்து அற நிலையத்துறையால் ஆண்டு தோறும் முதுமலையில் 48 நாட்கள் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாமில் புதுச்சேரி லட்சுமியும் கலந்துகொள்ளும்.

சடலமாக லட்சுமி யானை
சடலமாக லட்சுமி யானை

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடக்கவில்லை. அதனால் யானை லட்சுமி 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியது வனத்துறை. அதனடிப்படையில் யானை லட்சுமி தங்கியிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயத்திலேயே அதை ஓய்வெடுக்க வைத்தது கோயில் நிர்வாகம். அதனால் கடந்த ஒரு மாதமாக யானை லட்சுமி கோயிலுக்கு வருவதில்லை. பக்தர்கள் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. லட்சுமியின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், களி, தென்னை மட்டை, பனை, அரசமர இலை போன்றவற்றுடன், மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தன.

தமிழகத்திலிருந்து வனத்துறை மருத்துவர்கள் வந்து சோதனை செய்தபிறகு லட்சுமி மீண்டும் கோயிலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தது மணக்குள விநாயகர் கோயில் நிர்வாகம். அதேபோல மருத்துவர்களின் ஆலோசனைப்படி லட்சுமியை நடைப்பயிற்சிக்கும் அழைத்து செல்லப்பட்டு வந்தது. அதனடிப்படையில் இன்று காலை லட்சுமி தங்கியிருந்த வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அப்போது மிஷன் வீதியில் உள்ள கல்வே கல்லூரியை கடந்தபோது திடீரென சுருண்டு விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது. சமீபகாலமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த லட்சுமிக்கு, நீரிழிவு நோய் காரணமாக அடிக்கடி காலில் புண் ஏற்பட்டு வந்தது.

ஆனந்த குளியலில் யானை லட்சுமி | கோப்பு படம்
ஆனந்த குளியலில் யானை லட்சுமி | கோப்பு படம்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கிய மருந்துகளால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் இன்று காலை திடீரென மயங்கி விழுந்த யானையை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதில், மாரடைப்பு காரணாமாக லட்சுமி இறந்திருக்கலாம் என்று முதல்கட்ட சோதனையில் தெரிய வந்திருக்கிறது.

இந்தநிலையில், இது தொடர்பாக கோயில் நிர்வாகம்,`` உடற்கூராய்வு சோதனைக்காக தமிழக வனத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் புதுச்சேரிக்கு வந்துகொண்டிக்கிறார்கள். மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர், உடற்கூராய்வு செய்யப்பட்டு மாலையில் அடக்கம் செய்யப்படும்.'' எனத் தெரிவித்தது.

தற்போது கோயிலின் நடை சாத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அஞ்சலிக்காக யானை லட்சுமி வைக்கப்பட்டிருக்கிறது.