மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம், சென்னை வடபழனி மருத்துவமனை சார்பில் இதய மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொண்டனர். இந்த மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுவரும் சம்பா தாளடி பயிர்களைக் கொள்முதல் செய்ய 150 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, 85 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் அனைத்துக் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ``மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு கண்டிப்பாக, புறவழிச்சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் மக்களின் ஆதரவு பெற்று மாபெரும் தலைவராக இருப்பதால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என தெரிவித்தார்.