துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் டாரஸ் (Taurus) மலையை ஒட்டி இருக்கும் ஊர் காயகோய் (Kayakoy). பண்டைய கிரேக்க காலத்தில் இருந்தே இந்த ஊரின் பெயர் மாற்றமடைந்துக் கொண்டேயிருந்தாலும், இறுதியாக, கிரேக்கர்கள் இந்த நகரத்தை லிவிசி ( Livissi ) என்கிற பெயரால் அழைத்தார்கள்.
காயகோய் நகரின் வரலாறை அறிய, உலகின் பல முக்கிய வரலாறுகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது நமக்கு அவசியாகிறது.
அது கி.பி.1054 காலகட்டம். கிறித்துவ மதத்தில் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் ( Catholic Church ) , கிழக்கு ஆர்த்தோடக்ஸ் தேவாலயங்களுக்கும் ( Eastern Orthodox Church ) இடையில் அரசியல் மற்றும் கருத்தியல் காரணங்களால் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. இதை East-West Schism என்று வரலாற்றில் குறிப்பிடுவார்கள்.

வரலாற்றில் ஏற்பட்ட இந்த கிறித்துவப் பிளவுக்குப் பிறகு, காயகோயில் ( Kayakoy ) வாழ்ந்து வந்தவர்களை ”கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள்” ( Greek Orthodox Christian) குறிப்பிடுவார்கள்.
இந்த நகரம் அழிவதற்கு முன்னால் இங்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பெரும்பாலானவர்கள் கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள். மற்றவர்கள், துருக்கிய இஸ்லாமியர்கள்.
டாரஸ் மலையின் சிறு குன்றுகளில் வசித்து வந்த கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள் பல கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தார்கள். குறிப்பாக, கைவினைப் பொருட்கள் செய்யவதில் வல்லவர்களாக இருந்தார்கள்.

கீழே பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்த துருக்கிய இஸ்லாமியர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.
இந்த இரு மதத்தவர்களுமே ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி, சகோதரத்துவ உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் மகிழ்ச்சியான ஒற்றுமை வாழ்வை கலைத்துப் போட்டது முதலாம் உலகப் போர்.
13ம் நூற்றாண்டில் இன்றைக்கு இருக்கும் துருக்கியை உள்ளடக்கிய ஒட்டாமன் ( Ottoman ) சாம்ராஜ்யம் தோன்றியது. துருக்கி, தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய உலகின் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யமாக ஒட்டாமன் ( Ottoman ) சாம்ராஜ்யம் இருந்தது. இது இஸ்லாமிய அரசர்களால் ஆளப்பட்ட சாம்ராஜ்யம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. ஒட்டாமன் சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ், கிரேக்கம் போன்ற உலக நாடுகள் ஒன்றிணைந்து யுத்தம் புரிந்தன. முதலாம் உலகப் போரின் இறுதியில் ஒட்டாமன் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. 1922 -ம் ஆண்டு அங்கு அரசாட்சி முடிவுக்கு வந்தது.
இந்த முதலாம் உலகப் போரின் ஒரு பகுதியாக 1919-ம் ஆண்டு, மே 15-ம் தேதி, அனடோலியா ( Anatolia ) என்கிற தீபகற்பத்தில் காலடி வைத்த கிரேக்கப் படைகள் துருக்கிக்கு எதிராக கடும் யுத்தம் புரிந்தன. ஆரம்பத்திலேயே, ஸ்மிர்னா ( Smyrna ) என்கிற ஒரு துறைமுக நகரை கைப்பற்றி முன்னேறிப் போனது கிரேக்கப் படை. ஆனால், அந்தப் படையால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோல்வியுற்று திரும்பியது… இந்தக் குறிப்பிட்ட கிரேக்க-துருக்கிய (Greco-Turkish) போரில்… துருக்கிப் படை ஸ்மிர்னா ( Smyrna ) நகருக்கு தீ வைத்தது. பற்ற வைக்கப்பட்ட அந்த நெருப்பு கிட்டத்தட்ட 10 நாட்கள் விடாமல் கொழுந்துவிட்டு எரிந்து அந்த நகரத்தையே மொத்தமாக அழித்து ஒழித்தது. இதை வரலாற்றில் “ Great Fire of Smyrna” என்று குறிப்பிடுவார்கள்.
முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவா கிரேக்கம் உடன் நின்றதற்கு கைமாறாக, முன்னொரு காலத்தில் தங்களின் கட்டுப்பாட்டிலிருந்த அனடோலியா நகரைச் சார்ந்து இருக்கும் நிலப்பகுதியை தங்களுக்கு ஒட்டாமன் சாம்ராஜ்யத்திடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை, பிரிட்டனிடம் வைத்திருந்தது கிரேக்க அரசு.
அதைச் செய்து தருவதாக அன்றைய பிரிட்டன் பிரதமர் டேவிட் லாய்ட் ஜார்ஜும் வாக்குக் கொடுத்திருந்தார்.

முதலாம் உலகப்போரில் ஒட்டாமன் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் “ Treaty of Lausanne “ என்கிற ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல விஷயங்களை உள்ளடக்கியிருந்த இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சங்களில் ஒன்றாக “ The Population Exchange Between Greece & Turkey” என்பதும் இருந்தது.
இதன் அடிப்படையில் துருக்கியில் வாழ்ந்து வந்த கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள் கிரேக்கத்திற்கும், கிரேக்கத்தில் வாழ்ந்து வந்த துருக்கிய இஸ்லாமியர்கள் துருக்கிக்கும் இடம் மாற்றாப்பட்டார்கள்
அந்தந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களுடைய எந்த கருத்துக்களும், சம்மதங்களும் கேட்கப்படாமல், அந்த மக்கள் அகதிகளாக தங்களின் நிலத்தை விட்டு அடுத்த நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டனர்.

கிட்டத்தட்ட 16 லட்சம் மக்கள் இப்படி அகதிகளாக துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கும், கிரேக்கத்திலிருந்து துருக்கிக்கும் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நிகழ்வில், காயகோய் மக்களும் துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டார்கள்.
1924-யில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த வந்த நகரத்தை விட்டு, ஒற்றுமையாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்த தங்கள் நண்பர்களை விட்டு, மெடிட்டரேனியன் ( Mediterranean) கடலில் அகதிகளாக கிரேக்கத்தை நோக்கி பயணப்பட்டார்கள் காயகோய் மக்கள்.
காயகோய் நகரிலிருந்து கிறித்துவ சகோதரர்கள் வெளியேற்றப்பட்டதும், அங்கிருந்த இஸ்லாமியர்களும் இடம்பெயர்ந்து செல்ல, நகரமே காலியானது.

மனிதர்கள் அற்ற வெறும் நகரமாய் நின்ற காயகோயில் 1957 அன்று மிகப்பெரிய பூகம்பம் ஒன்று நிகழ்ந்தது. பல கட்டடங்களும் இடிந்து, சிதிலமடைந்தன.
பல நூற்றாண்டு கால வரலாறைக் கொண்ட அந்த நகரம் இன்று மனிதர்களற்று சோகமாய் சிதிலங்களாகக் காட்சி தருகின்றது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் ஏதோ ஒரு தூரதேசத்தில் வேர் அறுந்து அகதிகளாய் நிற்கின்றனர்
பகுதி 2க்கு செல்ல...