இந்தியச் சீன வீரர்களுக்கு இடையில் அடிக்கடி மோதல்கள் நடைபெறும் நிகழ்வுகளைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம். இந்த மோதல் சம்பவங்கள் எல்லைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதில் இருந்து தடுக்க நடைபெறும். ஆனால், பல முறை சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதற்கான காரணம், மருத்துவ குணம் நிறைந்த கார்டிசெப்ஸை (Cordyceps) எடுத்துச் செல்வதற்காக என டிசம்பர் 25-ல் இந்தோ - பசிபிக் தகவல்தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

இதென்ன புதுசா இருக்கே என நினைக்கலாம். கார்டிசெப்ஸ் என்பது கம்பளிப்பூச்சி பூஞ்சை அல்லது இமாலய தங்கம் என்று அழைக்கப்படுகிறது. கார்டிசெப்ஸின் வித்துகள் பூச்சிகளைப் பாதித்துக் கொல்லும். இறந்த பூச்சிகளின் சதையில் இருந்து கார்டிசெப்ஸ் பூஞ்சை முளைக்கும். இதிலுள்ள பயோ ஆக்டிவ் மூலக்கூறு சிறந்த சிகிச்சை ஆற்றலைக் கொண்டுள்ளதால், என்றேனும் ஒரு நாள் புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், ``சீனாவில் இவை தங்கத்தைவிட விலை மதிப்பு மிக்கவை. இது ஹிமாலய பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவின் கிங்காய் - திபெத் பகுதிகளிலும் அதிக அளவில் காணப்படுகிறது. உலக அளவில் இந்த கார்டிசெப்ஸ் பூஞ்சையின் மதிப்பு 1072.50 மில்லியன் டாலர். எனவே, கார்டிசெப்ஸை சீனா அதிக அளவில் சேகரித்து, ஏற்றுமதி செய்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பூஞ்சையின் பற்றாக்குறை காரணமாக சீனாவில் கார்டிசெப்ஸின் அறுவடைக் குறைந்தது. அதேசமயம் கடந்த பத்தாண்டுகளில் கார்டிசெப்ஸின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. சீனாவின் நடுத்தர வர்க்கத்தில் இந்த பூஞ்சை சிறுநீரகக் கோளாறு முதல் ஆண்மைக் குறைவு வரை அனைத்தையும் குணப்படுத்துவதாக நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை.

இமயமலையில் உள்ள சில நகரங்களில் இந்த பூஞ்சையைச் சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இதுவே இவர்களின் வாழ்வாதாரம். திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலையில் உள்ள குடும்ப வருமானத்தில் 80 சதவிகிதம் வரை கம்பளிப்பூச்சி பூஞ்சை விற்பதன் மூலம் கிடைக்கிறது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதை ஆய்வகத்தில் ஆரோக்கியமாக வளர்க்க முடியாது, இவை காடுகளில் மட்டுமே அரிதாகக் காணப்படும். ஆனால், சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மி கியோங் லீ , டாக்டர் அய்மன் துர்க் மற்றும் அவர்களின் குழுவினர், ``பூஞ்சைகளை அதன் வீரியம் குறையாமல் இங்குள்ள சூழலில் வளர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.