
ரஜினி கோடம்பாக்கம் கேட்டைத்திறந்து சினிமாவுக்குள் வந்து 45 வருடங்கள் ஆகிவிட்டதாம்!

சில மாதங்களுக்கு முன் தஞ்சை மருத்துவமனைக்கு ஷூட்டிங் போயிருந்த ஜோதிகா, ‘கோயில்களைப் போலவே மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும்!’ என்று சொல்லியிருந்தார். அது அப்போது சர்ச்சையானது. சர்ச்சையைக் கிளப்பியவர்களே அடுத்தடுத்து வேறு சர்ச்சைகளைத் தேடிப்போய்விட்டார்கள். ஆனால் ஜோதிகாவோ தான் பேசியதை மறக்காமல் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார். ‘ஜோ’ர்!

ரஜினி கோடம்பாக்கம் கேட்டைத்திறந்து சினிமாவுக்குள் வந்து 45 வருடங்கள் ஆகிவிட்டதாம்! அதையொட்டி 45YearsOfRajinism கொண்டாடினார்கள். யுவராஜ் என்ற ஓவியர் ரஜினியின் திரை வாழ்க்கைப் பயணத்தைச் சுருக்கமாக மினியேச்சர் போல வெவ்வேறு சம்பவங்களின் தொகுப்பாக Common Dp-யாக வரைந்தார். பா.இரஞ்சித் தொடங்கிப் பலரும் இதை ஷேர் செய்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க, லோகேஷ் கனகராஜ் ட்வீட்டியதுதான் அல்டிமேட்! ‘தலைவரை வாழ்த்தி ட்வீட் செய்யுங்கள்’ என்று விழாக்கமிட்டி அனுப்பியதை ஏதோ ஞாபகத்தில் அப்படியே போஸ்ட் செய்ய, அது பற்றிக் கொண்டது. சும்மா விடவே கூடாது கண்ணா!

நேற்றுவரை ‘இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா!’ என்று பாட்டுப் பாடி சில்லறையைச் சிதறவிட்ட ஹிப்ஹாப் ஆதி சமீபத்தில் ஒரு பாடலை ரிலீஸ் செய்திருக்கிறார். ‘நான் தமிழனும் இல்லை... கன்னடனும் இல்லை...தெலுங்கனும் இல்லை...’ என்றுபோகும் அந்தப் பாடல் இடம்பெறப்போகும் ஆல்பத்தின் டைட்டிலும் ‘நான் ஒரு ஏலியன்!’ தான். நேத்துவரை தமிழ், தமிழன்னு மீசையை முறுக்கினீங்களே குட்டி பாரதி?

‘எம்.சி.சி சூப்பர் ஸ்டார்!’ - அப்படித்தான் அழைக்கிறார்கள் சென்னை கிறித்தவக் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லோரும் ஒருவரை. அவர் பெயர் ரஜினி! முன்னாள் ஆங்கில இலக்கியப் பேராசிரியர். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தல், தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடை நாடகங்களை இயக்குதல் என எப்போதும் பிஸியாகவே இருந்தவர். 1998ஆம் ஆண்டு வரை எம்.சி.சி ஹாஸ்டல் ரூம் நம்பர் 178-ல் புத்தகங்களோடு வசித்தவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரின் அறை எப்போதும் திறந்திருக்கும். வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். ரோல்மாடல் மாஸ்டர்!

அண்மையில் கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றைப் புனரமைக்க 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. சமீபத்திய மழையால் தடுப்பணைக் கட்டுமானங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 230 கோடியும் ஸ்வாஹாவாகியிருக்கிறது. ‘மழையை சேமிக்க தடுப்பணைகள் கட்டுங்க சாமிகளா... ஆனா, அதை மழைக்காலத்துல கட்டி மக்கள் பணத்தைத் தண்ணியில கரைக்காதீங்க!’ எனப் புலம்புகின்றனர் நொய்யல் ஆற்றங்கரையோர மக்கள். இப்போ மறுபடி அணை கட்டுறேன்னு கான்ட்ராக்ட், கமிஷன்னு தூள்கிளப்புவாங்களே!

‘புள்ளப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னா நினைச்சேன்?’ - இதுதான் ஸ்டாலினின் தற்போதைய மைண்ட் வாய்ஸ். அந்தப் புள்ளப்பூச்சியின் பெயர் கு.க.செல்வம். ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பிறகு தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு, கிடைத்தது என்னவோ அல்வாதான். உடனடியாக டெல்லி போய் பா.ஜ.க மேலிடத் தலைவர்களைப் பார்ப்பது, கமலாலயத்தில் ராமர் பூஜையில் கலந்துகொள்வது என்று கடுப்ஸ் காட்டினார். ‘தி.மு.க-வின் வாரிசு அரசியல்’ என்று திடீர் குபீர் பேட்டி கொடுத்து சிரிப்பைக் கூட்டினார். ஆன்லைனிலேயே ஆட்சியைப் பிடிக்கும் அஸ்திவாரத்தை தி.மு.க போட்டுக்கொண்டிருக்க, ‘எப்போதோ பரபரப்பாக’ இருந்த பெருந்தலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிக் கொண்டிருக்கிறது எதிர்முகாம்.

தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்தது சாத்தான்குளம் துயரச் சம்பவம். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரணத்துக்குக் காரணமான வர்கள் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் உதவி ஆய்வாளர் பால்துரை. சிறையிலேயே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட பால்துரை, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்புதான் பால்துறை தட்டார்மடம் காவல்நிலையத்திலிருந்து சாத்தான்குளம் காவல்நிலையத்துக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தார். எல்லா மரணங்களும் துக்கம்தருபவையே!