சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மாமன்ற உறுப்பினர் இந்திரா தேவி, ``பொதுமக்களுக்கு தீர்வைமாற்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகள் மனு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு எதற்காக லஞ்சம் தர வேண்டும். ஒருவேளை லஞ்சம் கொடுத்தால்தான் மாநகராட்சியில் பணி நடக்கும் என்றால், எனது வார்டைச் சேர்ந்த 11 பேரின் தீர்வை மாற்றத்துக்காகக் கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கான மொத்த லஞ்சப் பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் நானே கொடுத்துவிடுகிறேன்" என 500 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து மேசை மீது வைத்தார். அதோடு மட்டுமல்லாமல், ``லஞ்சப் பணம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயையும் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் கொடுத்துவிடுகிறேன்" என அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கருப்பசாமியிடம் கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, ``எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஆறு பேரின் மனுக்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதலுக்காக அதிகாரிகளின் மேசைக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன. அதேசமயம், எனது கவனத்துக்கு வராத மனுக்களின் நிலை பற்றி எனக்குத் தெரியாது" எனக் கூறினார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் இந்திரா தேவி வாதத்தைக் கைவிட்டுவிட்டு அமர்ந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் செய்தி தொலைக்காட்சிகளிலும், தினசரி நாளிதழ்களிலும் செய்தியாக வெளியானது.

இந்த நிலையில், திருத்தங்கலிலுள்ள மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகத்தில் வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று பிற்பகலில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, மாநகராட்சி வணிகக் கட்டடத்தில் அலுவலகம் நடத்திவந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வைத்தியலிங்கத்தின் மீது தாக்குதல் நடத்தி, அவருடைய லேப்டாப் மற்றும் உடமைகளை அதிகாரிகள் தூக்கிவீசியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செய்தியாளர் வைத்தியலிங்கம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரி கருப்பசாமி மற்றும் குழுவினரின் அத்துமீறல்கள் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சித் தரப்பினரும், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பா.ம.க சார்பில் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர் வைத்தியலிங்கம் தரப்பில், 'தீர்வை மாற்றத்துக்காக மாநகராட்சி அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை நான் செய்தியாக வெளியிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் என்மீது தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்துக்குள் அத்துமீறிப் புகுந்து லேப்டாப் உள்ளிட்ட உடைமைகளைத் தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி தரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதில், 'மாநகராட்சிக்குட்பட்ட வணிகக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் குழுவுடன் சென்றோம். அப்போது மாநகராட்சிக் கட்டடத்தில் செய்தியாளர் வைத்தியலிங்கம் முறைகேடாக அலுவலகம் நடத்திவந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்துகையில் எங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்துத் தாக்கினார். எனவே செய்தியாளர் வைத்தியலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு புகார்களின் மீதும் தனித்தனியே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.