
தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!
’நமது முதல்வர் விஜயகாந்த்’ - எல்.கே.சுதீஷ் பதிவு!
அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பங்கீடு இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், தாங்கள் கேட்கும் எண்ணிக்கைகளை வழங்க மறுப்பதால், தே.மு.தி.க அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், ஃபேஸ்புக் பக்கத்தில் செய்த பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், ‘ நமது முதல்வர் விஜயகாந்த். நமது சின்னம் முரசு’ என பதிவிட்டுள்ளார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தனித்து போட்டியிட தே.மு.தி.க முடிவு செய்துவிட்டதா, என்ற சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டாம் கட்ட ஆலோசனை
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக, நேற்று அமித் ஷாவுடன், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று இரு கட்சியினரிடையே இரண்டாம் கட்ட ஆலோசனை சென்னை நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்து வருகிறது.
தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடங்கியது!
தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்று தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
அடுத்ததாக மனித நேய மக்கள் கட்சிக்கு தி.மு.க கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக, அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்-இ.பி.ஸ்!
அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் பா.ம.க-வுக்கான இடம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க 23 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விழுப்புரம் கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து நேற்று இரவு அமித் ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது பா.ஜ.க தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப்பட்டது. நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் பா.ஜ.க தரப்பில் சுமார் 30 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் அ.தி.மு.க தரப்பில் 20 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடும் இடங்கள் இன்று உறுதிசெய்யப்படலாம் என்ற தகவல் வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று முன்தினம் அ.தி.மு.க அமைச்சர்கள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினார்கள். தொடர்ந்து நேற்று இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது தே.மு.தி.க நிர்வாகிகள் பா.ம.க-வுக்கு நிகராகத் தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது. முன்னதாக 2011 தேர்தலில் வெற்றிபெற்ற 29 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், தே.மு.தி.க-வுக்கு அத்தனை இடங்களை ஒதுக்க அ.தி.மு.க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைவது தொடர்ந்து இழுபறியாகவே காணப்படுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்திய நிலையில், தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டணி: கட்சிகள் தீவிரம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதாக டெல்லியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் விவகாரங்களை இறுதி செய்யும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றன.
தி.மு.க தரப்பில் இதுவரை எந்தக் கூட்டணிக் கட்சிகளின் இடமும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், காங்கிரஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. அதே போன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உடனான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கிறது.