கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். அவர் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில் வெடிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், அஃப்சர் கான், முகமது தவ்ஃபிக், உமர்பாரூக், பெரோஸ்கான் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
வழக்கு காவல்துறையிடமிருந்து என்.ஐ.ஏ-விடம் மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பெராஸ்கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், ஃபிரோஸ், அஃப்சர் கான் ஆகியோரை என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

கோவை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கைதுசெய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்று என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், வழக்கில் மேலும் இருவரை என்.ஐ.ஏ கைதுசெய்துள்ளது.
அதன்படி, ``கோவை அல் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த ஷேக் இதயதுல்லா மற்றும் வின்சென்ட் சாலையைச் சேர்ந்த சனாபர் அலி கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர், கடம்பூர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு வைத்து ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை உமர் ஃபரூக் செய்துள்ளார். அதில் முகமது அசாருதீன் மற்றும் உயிரிழந்த ஜமேசா முபின் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். அங்கு வைத்துதான் தீவிரவாத தாக்குதலுக்கான திட்டங்களை தீட்டினர்.” என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள ஷேக் இதயத்துல்லா கரும்புக்கடை பகுதியில் உலர் பழங்கள் கடை நடத்தி வருகிறார். இவருடைய தந்தை அல் யாகூப் 1997-ம் ஆண்டு நடைபெற்ற கோவை தொடர் குண்டுவெடிப்பில் 48-வது குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு நடந்த இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, இதயதுல்லாவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் அப்போதே விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு நபரான சனாபர் அலி டி.கே மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.