கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். ஜமேஷா முபின் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையின்போது, வெடிப் பொருள்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடா்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், அஃப்சா் கான் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இது கோவை சுற்றுவட்டாரங்களில் திட்டமிடப்பட்ட சதித்திட்டத்துக்கான முன்னோட்டம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு முகமது தவ்ஃபிக், உமர்பாரூக், பெரோஸ்கான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ கைதுசெய்தது.

இந்த நிலையில் பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், ஃபிரோஸ், அப்சர் கான் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ-வுக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி 5 பேரும் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து கோவை அழைத்து வரப்பட்டனர். நேற்று அந்த 5 பேரையும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். பின்னர் புல்லுக்காடு, கோட்டைமேடு, உக்கடம், லாரி பேட்டை, அல் அமீன் காலனி, பிலால் எஸ்டேட், ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர்.

இன்று இரண்டாவது நாளாக புல்லுக்காடு, அன்பு நகர் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கை தேவாலயம் தாக்குதல் சம்பவத்தில் கைதாகி கேரள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முகமது அசாருதீன் வீடு இருக்கும் பகுதியிலும் விசாரணை நடத்தினர்.
அப்போது அசாருதீனுடன், இவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டது. பின்னர், ஐந்து பேரில் ஜமேஷா முபீனின் உறவினரான முகமது அசாருதீன் என்பவரை மட்டும் கோவையில் பிரபலமான புரூக் ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலின் கார் பார்க்கிங்கில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பிறகு காட்டூர் பகுதியிலுள்ள கூரியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.