உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் (26) என்பவர், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவருகிறார். வாடிக்கையாக லுடோ கேம் விளையாடும் இவருக்கு, கடந்த ஆண்டு அந்த கேமின் மூலமாக இக்ரா ஜீவானி (19) என்ற பாகிஸ்தானியப் பெண் அறிமுகமாகியிருக்கிறார். இருவரின் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இக்ரா ஜீவானி நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில் இருவரும் திருமணம் செய்துகொண்டு, பெல்லந்தூரிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்துவந்திருக்கின்றனர். இந்த நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இக்ரா ஜீவானி ஆதார் அட்டை, இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். இதற்கிடையில், அந்தப் பெண் பாகிஸ்தானிலுள்ள தன்னுடைய உறவினரை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். அப்போது, அவர் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார். அதையடுத்து, தம்பதி கைதுசெய்யப்பட்டனர்.

தம்பதியைக் கைதுசெய்த போலீஸார், அந்தப் பெண்ணை வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக (FRRO) அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இக்ரா ஜீவானி அங்கிருந்து பின்னர் அரசு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானியப் பெண் உளவாளியா என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.