பழநி கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய தினம் ஆகம விதிகளை மீறி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கோயிலின் கருவறைக்குள் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கருவறைக்குள் செல்வது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைராலாகிவருகிறது. இந்த நிலையில் ஆகம விதிகளை மீறிப் பலர் கருவறைக்குள் சென்றதற்கு பழநி ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பழநி ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை அமைப்பாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 -ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, `மூலவர் உள்ளிட்ட உபதெய்வக் கோயில்களின் கருவறை மூடப்பட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெறும். இதற்காக 23-ம் தேதி கருவறை சாத்தப்படும். கும்பாபிஷேகம் முடிந்தவுடன்தான் கருவறை திறக்கப்பட்டு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்’ எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடபட்டடது.
ஆனால், கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாள் வியாழக்கிழமை மதியம் முதல் இரவுவரை கருவறை திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அவருடைய மனைவி மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் என 400-க்கும் மேற்பட்டவர்கள் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர். அங்கிருந்த பக்தர்கள் அப்போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சொர்ணபந்தனம் செய்வதாக இருந்தாலும் குருக்களே செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் நிர்வாக அதிகாரி நடராஜன்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அவர் கோயிலில் பணி செய்யும் காவலாளி, தூய்மைப் பணியாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி 23 பேரை சஸ்பெண்ட் செய்தவர். மேலும் 25 பேருக்கு அபராதம் விதித்திருக்கிறார். அப்படியெல்லாம் செய்தவர், இந்த விஷயத்திலும் அப்படி நடந்திருக்க வேண்டுமல்லவா... ஆனால் அவர் தனக்கு உயர்பதவி கிடைக்க வேண்டும் என ஆகம விதியை மீறிச் செயல்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

``தொழிலதிபர்கள், ஆளுங்கட்சினர், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பழநி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய சாமானிய பக்தர் ஒருவர்கூட கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. அனுமதிச்சீட்டு என்ற பெயரில் பெரும் மோசடி நடைபெற்றிருக்கிறது” எனக் கோயில் நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டமும் நடைபெற்றது. அர்ச்சகர்கள் போராடி மூலவருக்கு மருந்து சாற்றுவதற்கு கோயில் நிர்வாகம ஒப்புக்கொண்டது.

கோயில் புனரமைப்புப் பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில், அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது எனவும், இதில் ஆகம விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும் பழநி புலிப்பாணி ஆதீனம் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கோயில் கருவறைக்குள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சென்றது பக்தர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் பேசினோம். ``ஆகம விதிகளை மீறி எதையும் செய்யவில்லை. அர்ச்சகர்கள் கூறியதன் அடிப்படையில் உரிய ஏற்பாடுகளை மட்டும் செய்து கொடுத்தோம். நிறைய பேர் கருவறைக்குள் செல்ல விரும்பம் தெரிவித்தனர். ஆனால், நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அமைச்சர் உள்ளிட்டோரைக் கருவறைக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறுவது தவறான தகவல். கருவறைக்குள் நடக்கும் பணிகளை அதிகாரி என்ற முறையில் ஆய்வுக்குழுவினர் அர்த்தமண்டபம் வரை சென்று பார்வையிட்டோம். அவ்ளவுதான்” என்றார்.