தமிழ்நாட்டின் 17-வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓசூர் அருகே 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை 'காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்' என்று அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இப்பகுதி யானைகளின் முக்கியமான வாழ்விடமாக விளங்குகிறது. 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவையினங்கள், மென்மையான ஓடுகள் கொண்ட ஆமைகள், சாம்பல் நிற அணில்கள், நீர் நாய்கள், சதுப்பு முதலைகள், மான்கள், கழுகுகள், புலிகள் போன்ற காட்டுயிர்களுக்கு உகந்த வாழ்விடமாக விளங்குகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குட்பட்ட ஒசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி, உரிகம், மற்றும் ஜவளகிரி சரகங்களில் உள்ள காட்டுப்பகுதியை “காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்” ஆக அறிவிக்கப்படும் என்று 25.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது.
``இந்த சரணாலயத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த வனப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழ்விடத்தை உருவாக்க முடியும். இந்த சரணாலயம் நந்திமங்கலம் - உளிபண்டா மற்றும் கோவைபள்ளம் -அனேபித்தஹல்லா ஆகிய இரண்டு முக்கியமான யானை வழித்தடங்களை உள்ளடக்கியது.

இப்பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் இரு கரைகளும் காவிரி ஆறு சார்ந்த சூழலியலும் பாதுகாக்கப்படும்” என வனத்துறை தெரிவித்துள்ளது.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலரின் வரைவு திட்டத்தை பரிசீலித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தற்போது காவிரி தெற்கு சரணாலயத்தை அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சுப்ரியா சாகு தமது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழ்நாடு வனபாதுகாப்பின் புதிய சகாப்தத்தில் 68,640 ஹெக்டேர் பரப்பளவில் புதிய 'காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை' தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 35 வகையான பாலூட்டிகளின் தாயகம், 238 வகையான பறவைகள், மென்மையான ஓடுகள் கொண்ட ஆமைகள், மென்மையான நீர்நாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மிருகங்கள் என வனவிலங்குகளின் சொர்க்கமாக விளங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், "காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.