ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர்.
இந்த நிலையில், இந்த அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் வழங்கப்படவிருந்த, முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. இதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, அழுகிய முட்டைகளைச் சமைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கவிருந்த சத்துணவுப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் பள்ளிப் பணியாளர்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் குழந்தைகளுக்கு அந்த முட்டைகளை வழங்குவதற்கான பணிகளைத் தொடர்ந்தனர்.
இதைத் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தும்விதமாக தங்கள் செல்போனில் அரசுப் பள்ளியில் சத்துணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவிருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

மாணவர்கள் அழுகிய முட்டைகளைச் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கக்கூடும் எனக் கூறி பொதுமக்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த அழுகிய முட்டைகளை சத்துணவுப் பணியாளர்களிடமிருந்து பறிமுதல் செய்து கீழே கொட்டியதாகக் கூறப்படுகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவிருந்ததை அறிந்த அந்தப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவுப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும், அந்தப் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை அதிகாரி பாலுமுத்துவிடம் கேட்டபோது, ``இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும்” என்றார்.