
அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு ஆனைமுத்து அறிவுரை
பெரியாரியப் பெருந்தொண்டரும் ‘மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி’யின் நிறுவனருமான வே.ஆனைமுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்னர் தன் 96-வது வயதில் அடியெடுத்து வைத்தார். மிக நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
“தீவிர ஆத்திகராகவும், வள்ளலார் வழியையும் பின்பற்றிவந்த நீங்கள் நாத்திகராக, பெரியாரியவாதியாக மாறியது எப்படி?’’
“நீதிக்கட்சி தலைவர், ஏ.டி.பன்னீர் செல்வம், 01-03-1940-ல் லண்டனுக்குப் பயணமானபோது விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போது என் தாயார் பிறந்த ஊரில் வசித்த உயர் வகுப்பைச் சேர்ந்த ஓர் இளைஞர், என் கண் முன்னாலேயே, ‘ஒழிஞ்சாண்டா பாவி...’, என்று சொன்னது என்னை மிகவும் பாதித்தது. அதற்குப் பிறகே என் சிந்தனையும் பார்வையும் பெரியாரின் பக்கமும், நாத்திகத்தின் பக்கமும் திரும்பின.’’
“வள்ளலாரும் வேத எதிர்ப்பு, சாதி - மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளைப் பேசிவந்தவர்தான். அப்படி ஆத்திகராக இருந்தே சமூக அவலங்களை எதிர்த்திருக்கலாமே?’’

“ஆத்திகராக இருந்துகொண்டே இவற்றை எதிர்த்திருக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.’’
“பெரியாருடனான உங்களின் பயணம் பற்றி?’’
“பெரியாருடனான எனது பயணம் 1964-ம் ஆண்டு முதல் தொடங்கியது. அது அவரது இறப்புவரை தொடர்ந்தது. 27-11-1973 அன்று சேலம் கோட்டைத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், நான் ஒன்றரை மணி நேரம் சட்ட ஆதாரங்களுடன் பெரியாரின் கருத்துகளைப் பற்றிப் பேசினேன். அதை கவனித்தவர், அடுத்து அவர் பேச தொடங்கியபோது, ‘பேரறிஞர் ஆனைமுத்து அவர்களே...’ என என்னை விளித்துப் பேசினார்.
திருச்சியில் அவர் தங்கியிருந்த நாள்களில் நானும் நோபிள் கோவிந்தராஜன் அவர்களும் பல மணி நேரம் பெரியாருடன் மாலையில் உரையாடுவோம்.’’
“நீங்கள் பெரியாருடன் நேரடியாகவே பல கருத்துகளில் முரண்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?’’
“நான் அவரிடம், ‘சமூகக் கட்டமைப்புகள் மற்றும் சட்டங்களாலுமே மதரீதியான, சாதிரீதியான ஒடுக்குமுறை பலமாக உள்ளது; இந்துவாக ஒரு சாதிக்குள் பிறந்தால், இறக்கும்வரை இந்து மதத்திலிருந்து வெளியேற முடியாது’ என்பேன். ஆரம்பத்தில் அவர் இதில் முரண்பட்டாலும், பின்பு ஏற்றுக்கொண்டார்.’’
“பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்திலிருந்து விலகியது ஏன்?’’

“கழகத்தின் நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் எழுப்பினார்கள். அப்போது ஏற்பட்ட முரண்பாடுகளால் திராவிடர் கழகத்திலிருந்து விலக்கப்பட்டேன்.’’
“உங்கள் கட்சியின் பெயரில் பெரியாருடன் மார்க்சியமும் இருக்கிறது. பெரியாரியத்துடன் மார்க்சியமும் தேவை என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?’’
“1950 முதல் மார்க்சியமும் பெரியாரியமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொண்டேன். 1957-ல் நான் நடத்திய `குறள் முரசு’ எனும் வார ஏட்டில், ‘மார்க்ஸ் பேசுகிறார்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளியிட்டேன். நானும் பெரியாரும் மற்ற மார்க்சிய தோழர்களுடன் இணைந்து தி.க தோழர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துவோம். தி.க-விலிருந்து விலகிய பிறகு சீர்காழியில் 08-08-1976 அன்று, ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ தொடங்கினோம். பின்னர் 1984 முதல் 1988 வரை விவாதித்து அரியலூர் பொதுக்குழுவில் ‘மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி’ எனும் பெயர் ஏற்கப்பட்டது.’’
“தற்போது பெரியாரிய இயக்கங்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“அவை பெரியாரின் கொள்கைகளில் சிலவற்றை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றன. இன்னும் பெரிய அளவில் இயங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துதலில் தொடங்கி மாநில தன்னாட்சி, அதிகாரப் பரவலாக்கல் என்று கூட்டாட்சியை நோக்கிய பார்வை, வருணாசிரம எதிர்ப்பு, வர்ண வர்க்கங்களில் மேம்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ள இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பு, சாதி மறுப்பு ஆகியவற்றைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து செயல்பட எங்கள் கட்சியும் முழு உடன்பாட்டுடன் உள்ளது. அதைத்தான் நாங்கள் இப்போதும் செய்கிறோம். கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணி ஆகியவை சமீபத்திய சான்றுகள்.’’
“சாதி ஒழிப்பு சாத்தியமா, நீங்கள் முன்வைக்கும் செயல்திட்டம் என்ன?’’
“சாத்தியம்தான், அதற்கு இந்திய அளவில் வலிமையான இயக்கம் தேவை.’’
“கலப்பு திருமணங்களுக்கு இன்றளவும் பல சிக்கல்கள் இருக்கின்றன... அது குறித்து உங்கள் பார்வை?’’
“அரசு, சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை போன்ற பாதுகாப்பு முறைகளை உருவாக்க வேண்டும்.’’
“தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளிடையே என்ன மாற்றங்கள் வேண்டும்?’’
“இரண்டு கட்சிகளுமே, அதிகார குவிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். மாநில உரிமைகளை மீட்பது, தன்னாட்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.’’
“இன்று, பெரியாரிய இயக்கங்கள் தி.மு.க-வைத்தான் மாற்றாக முன்வைக் கின்றன... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“தமிழுணர்வு, பகுத்தறிவு, மாநில சுயாட்சி போன்றவற்றில் தி.மு.க-வின் பங்களிப்பு அதிகம். கலைஞர் கருணாநிதி தலைமையில் மாநில உரிமைகளுக்கான குரல் இருந்தது. அதுவே அதன் பலம். அதனால்தான் தி.மு.க-வைப் பலரும் மாற்றாக வைக்கிறார்கள்.’’
“ஜெயலலிதாவுக்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ பட்டம் கொடுத்ததற்காக, கி.வீரமணி அதிகமாக விமர்சிக்கப்பட்டார்... அது குறித்த உங்கள் பார்வை?’’
“எனக்கும் அதில் உடன்பாடு கிடையாது. அப்போதே, தோழர் வீரமணியின் செயலைக் கண்டித்து, நான் நடத்திவரும் `சிந்தனையாளன்’ இதழில் கட்டுரை எழுதினேன். 69 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசுக்கு வீரமணி வழங்கியது சரியான வழிகாட்டல் இல்லை. அதனால்தான் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையில் புகுத்தப்பட்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது’’
“ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கான உங்களின் முயற்சிகள், பங்களிப்புகள் மிக முக்கியமானவை. அவை பற்றி?’’
“அகில இந்திய அளவில், ஓ.பி.சி இட ஒதுக்கீடு பற்றி யாரும் சிந்திக்காத நேரத்தில், எங்கள் இயக்கம் சிந்தித்தது. 1977-ல் இந்திய அரசிடம் கோரிக்கைவைக்க டெல்லிக்குச் சென்றோம். பல வட இந்தியத் தலைவர்களிடம் பேசியபோது, அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆகையால், எனக்கு அதில் நம்பிக்கை உண்டாயிற்று. ஆங்கிலம் மற்றும் இந்தியில் துண்டறிக்கைகள் தயாரித்து கட்சித் தோழர்களுடன் பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் (நாக்பூர்), கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொதுக்கூட்டம், பேரணி, மாநாடுகள் நடத்தினோம். அதன் வழியாகப் பிறந்ததுதான், மண்டல் கமிஷன்... பின்னர் அதையொட்டி வந்த ஓ.பி.சி-க்கான இட ஒதுக்கீடு.’’
“உங்களுடைய 70 ஆண்டுக்காலப் பொது வாழ்வில் நீங்கள் சாதித்தவை, இழந்தவை என்னென்ன?’’
“பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகளைத் தொகுத்து 1974-ல் முதல் பதிப்பு கொண்டுவந்தது, ஓ.பி.சி-க்கான இட ஒதுக்கீடு பெற்றது, பொருளாதார நெருக்கடியிலும் `சிந்தனையாளன்’ இதழை நடத்திவருவது, பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பை 2010-ல் கொண்டுவந்தது ஆகியவை நான் சாதித்தவை.
உற்ற நண்பர்களான நோபிள் கோவிந்தராஜன், உறையூர் முத்துக்கிருஷ்ணன், கு.ம.சுப்பிரமணியம், என் குடும்பத்துக்கு அரணாக விளங்கிய என் மாமியார் சு.தையல்நாயகி அம்மையார் மற்றும் என்னால் உருவாக்கப்பட்ட சுமைகளையும் துன்பங்களையும் ஏற்று எனது செயல்களுக்குப் பின்புலமாக விளங்கிய என் மனைவி சுசீலா ஆகியோரின் இறப்பு நான் இழந்தவை.’’