பெங்களூரூவில் மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாயும் இரண்டு வயது மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு நாகவாரா பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் சாலையில் லோஹித் என்பவர் தன் மனைவி தேஜஸ்வினி, மகள் மற்றும் இரண்டு வயது மகனோடு இருசக்கர வாகனத்தில் ஜனவரி 10-ம் தேதி காலை பயணித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக 40 அடி உயர இரும்புக் கம்பி தூண் சரிந்துள்ளது. இவ்விபத்தினால் பலத்த காயம் அடைந்த அந்தக் குடும்பத்தை அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தேஜஸ்வினி மற்றும் மகன் விஹான் உயிரிழந்தனர். லோஹித் மற்றும் அவரின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பெங்களூரு கிழக்கு காவல் துணை ஆணையர் பீமாசங்கர் எஸ் குலேத் கூறுகையில், ``மெட்ரோ ரயில் தூண் இடிந்து நான்கு பேர் பயணித்த பைக் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த தேஜஸ்வினி மற்றும் அவரின் மகன் விஹான் இருவரும் உடனடியாக அல்டியஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அங்கேயே இறந்துவிட்டனர். வெளிச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து இழப்பீடு வழங்குவோம். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்'' என உறுதி அளித்துள்ளார்.
எதிர்பாராத இந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், ``எங்கள் பொறியாளர் அறிக்கையின்படி, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே நாங்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும். பணியாளர்களின் அலட்சியம் அல்லது தொழில்நுட்ப சிக்கல் உள்ளதா என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம். காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரூவில் மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாயும் இரண்டு வயது மகனும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.