இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் கடும் விலைவாசி உயர்வால், அங்கிருக்கும் மக்கள் வாழ வழியின்றி தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குக் கடல்மார்க்கமாக சட்டவிரோதமாகச் சென்றுவருகின்றனர். அதன்படி ராமேஸ்வரம் கடல்மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை 90 பேர் அகதிகளாக வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலருகே உள்ள மணல் திட்டையில் இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதி இருவர் கள்ளப் படகு மூலம் வந்திறங்கியிருப்பதாக மீனவர்கள் மூலம் மரைன் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 7 மணிக்கு அங்கு சென்ற மரைன் போலீஸார், கடற்கரையில் படுத்திருந்த முதிய தம்பதியை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருவரும் உணவு, தண்ணீரின்றி மயக்கநிலையில் இருந்தனர். அதையடுத்து போலீஸார் அவர்கள் கொண்டுவந்த பொருள்களைச் சோதனை செய்தபோது அதில் மயங்கிக்கிடந்த பெண்ணின் பாஸ்போர்ட் கிடைத்தது. அதில் அவர் இலங்கையைச் சேர்ந்த பரமேஸ்வரி எனத் தெரியவந்தது. இதையடுத்து மரைன் போலீஸார் கடலோர காவல் படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். கடும் வெயிலில் மயங்கிக்கிடந்த அகதிகளைப் பாதுகாக்க அங்கிருந்த மீனவப் பெண்களின் புடவையை வாங்கி போலீஸார் நிழற்குடைபோல் அமைத்தனர். மரைன் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மூன்று மணி நேரம் ஆகியும், அகதிகள் மீட்கப்படாமல் கடற்கரையில் மயங்கியநிலையில் உயிருக்குப் போராடிவந்தனர்.

மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஹோவர் கிராஃப்ட் கப்பல் வரவழைக்கப்பட்டு, போலீஸார் இருவரையும் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இது குறித்து மரைன் போலீஸார், ``அகதிகளாக வந்திருக்கும் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே தெரியவந்திருக்கிறது. அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரம் அவர்கள் சுயநினைவுக்கு வந்த பிறகே தெரியவரும்" என்று தெரிவித்தனர்.