குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழகத்தின் ஊர்தியை மத்திய அரசு ஏற்க மறுத்தது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழகத்தின் ஊர்தியையும் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தன. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் தேசிய அளவில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி நிராகரித்ததாகவும், மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக இன்று காலை ஒரு தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. வேலு நாச்சியாரின் பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்!" என்று பதிவிட்டிருதார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு மட்டும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ``தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ.உ.சி-யும் , மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்? குடியரசு தின விழாவில் இதையெல்லாம் விடுத்துவிட்டு வேறெதை அனுமதிப்பீர்! கோட்சோக்களையும் - கோல்வார்க்கர்களையுமா?" என்று சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல, ``குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்" என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
``வ.உ.சி, வேலு நாச்சியார் பற்றி மேடையில் பிரதமர் புகழ்ந்து பேசிவிட்டு ஊர்திக்கு அனுமதி மறுப்பது எவ்விதத்தில் நியாயம்? ஒன்றிய அரசின் அணுகுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. இது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்" என்று சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க ஆளாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிய வேண்டிய ஒரு விஷயம் என்பதால் இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.