Published:Updated:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எல்லா விதமான தகவல்களையும் பெற முடியுமா? | Doubt of Common Man

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை நாம் சந்தேகங்களை கேட்டு தகவல் பெறலாம். ஒருவர் இந்தியாவின் எந்த மாநில மொழியிலும் தகவல் பெறுவதற்கான விண்ணப்பதை அனுப்ப முடியும்.

Published:Updated:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எல்லா விதமான தகவல்களையும் பெற முடியுமா? | Doubt of Common Man

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை நாம் சந்தேகங்களை கேட்டு தகவல் பெறலாம். ஒருவர் இந்தியாவின் எந்த மாநில மொழியிலும் தகவல் பெறுவதற்கான விண்ணப்பதை அனுப்ப முடியும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கோபிநாதன் என்ற வாசகர், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கெல்லாம் பொருந்தும்? அனைத்துத் துறைகளிலிருந்தும் தகவல்களைக் கேட்டுப் பெறலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவில் குடிமக்களின் உரிமையை நிலைநிறுத்துவது தொடர்பாக பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நிர்வாகத் திறன், இந்திய அரசு மற்றும் அரசு அலுவல்கள் மீது ஒரு தனி மனிதனுக்கு சந்தேகம் எழும்போது, அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் வெளிப்படையாக விளக்கங்களைக் கொடுப்பதற்கு எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று ஒரு சட்டத்தை இயற்றி செயல்படுத்தி வருகிறது இந்திய அரசு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சிலருக்கு இந்தச் சட்டத்தைப் பற்றியும், அதன் மூலம் எப்படி விளக்கங்களைப் பெறுவது என்பது பற்றியும் முன்பே தெரிந்திருந்தாலும் பலருக்கு இந்தச் சட்டம் பற்றியான விவரங்கள் குறைவாகவே தெரிந்திருக்கின்றன. மேலும் பலருக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்ன விதமான தகவல்களைப் பெறலாம், எப்படித் தகவல்களைப் பெறலாம் போன்ற சந்தேகங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு சந்தேகம் நம்முடைய வாசகர் ஒருவருக்கும் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

நம் வாசகரின் கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்வதற்காக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த சிவ.இளங்கோ அவர்களை அணுகினோம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அவர் கூறியதாவது, "2005-ம் இயற்றப்பட்ட இந்தத் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அரசிடமோ, அல்லது அரசு உதவி பெரும் நிறுவனங்களிடமிருந்து நம்மால் தகவல் கேட்டுப் பெற முடியும். ஆனால் சில துறைகளில் இருந்து நம்மால் தகவல் பெற முடியாது, குறிப்பாக ராணுவம், காவல்துறையில் சில பிரிவுகளில் நம்மால் தகவல் பெற முடியாது. அதேபோன்று தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள் குறித்தும் நம்மால் சந்தேகங்களைக் கேட்க முடியாது. அனால் அதற்கும் மறைமுகமாகக் கேட்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை குறித்து சந்தேகம் எழுப்பும் பட்சத்தில் அந்தக் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தால் நாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் கேள்வி கேட்கலாம்.

RTI
RTI

அது தவிர்த்து மக்களின் வரிப் பணம் எங்கெங்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ செலவழிக்கப்படுகிறதோ அங்கு எல்லாம் நாம் நம் கேள்விகளைக் கேட்டு தகவல்களை பெற முடியும். இந்தச் சட்டத்தின் நோக்கமே விரிவான, வெளிப்படையான லஞ்சம் ஊழலற்ற அரசு நிர்வாகத்தினை கொண்டு வருவதே. அதனால் எந்தத் துறையை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்.

தகவல் அறிவதற்கான முறை குறித்து அவர் கூறியதாவது, தகவல் அறிவதற்காக நாம் தனியாக எந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டியது இல்லை. சாதரணமாக ஒரு வெள்ளை தாளில் அனுப்புநர் முகவரியில் நம் தகவல்களை குறிப்பிட்டு, பெறுநரில்,

பொது தகவல் அலுவலர்,

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005,

சம்பந்தப்பட்ட துறையின் முகவரி

ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நம்முடைய சந்தேகங்களைக் கேட்டு தகவல் பெறலாம். இதற்கு பத்து ரூபாய் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை நாம் அஞ்சல் தலையின் மூலமாகச் செலுத்தலாம்.

நாம் கடிதம் அனுப்பி முப்பது நாள்களுக்குள் தகவல் அனுப்பப்படும். ஒருவேளை அப்படி முப்பது நாள்களுக்குள் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால், முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படியும் பதில் கிடைக்காத பட்சத்தில், சென்னையிலுள்ள மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையத்திலும், டெல்லியிலுள்ள மத்திய ஆணையத்திலும் மேல் முறையீடு செய்யலாம். ஆணையத்தில் தங்களின் விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்துவார்கள். சில சமயங்களில் நம்முடைய கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளப. அதற்கான காரணங்களையும் ஆணையம் நமக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 8-ன் கீழ் எப்படியான தகவல்கள் எல்லாம் அளிக்கப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
For Representation

அதன்படி, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும்படியான தகவல்கள், இந்தியாவின் படைத்திறன், விஞ்ஞான மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கும்படியாக அமையும் தகவல்கள், அயல்நாடுகளுடனான உறவைப் பாதிக்கும் வகையிலான தகவல்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையிலான தகவல்கள், பொதுமக்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கும் தகவல்கள், வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து ரகசியமாகப் பெறப்படும் தகவல்கள், ஒருவரின் உயிருக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய அல்லது ஒருவரின் ரகசியங்களை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய தகவல்கள் மற்றும் புலனாய்வு செய்முறை அல்லது குற்றவாளியைக் கைது செய்தலுக்குத் தடை செய்யும் வகையில் இருக்கும் தகவல்கள் போன்றவற்றைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற முடியாது.

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை நாம் சந்தேகங்களை கேட்டு தகவல் பெறலாம். ஒருவர் இந்தியாவின் எந்த மாநில மொழியிலும் தகவல் பெறுவதற்கான விண்ணப்பதை அனுப்ப முடியும். தற்போது இணைய வழியிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்ப முடிவதால் இன்னும் எளிதாக நம்மால் தகவல்களை கேட்டுப் பெற முடிகிறது.

இதேபோல உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man