
- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

பவன்காரர் எந்த நேரத்திலும் பாயக்கூடும் என நினைக்கிறது ஆளும் தரப்பு. காயம்பட்ட பாம்பாக இருக்கும் பவன் புள்ளி, அமைச்சர்கள் சிலர்மீதான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் குறித்து குடையத் தொடங்கியிருக்கிறாராம். குறிப்பாக, சபையைவிட்டு வெளியேறும்போது கையை உயர்த்திப் பேசிய சீனியர் அமைச்சர்மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாராம். காவிக் கட்சியின் மாஜி காக்கி மூலமாக அமைச்சர்களின் ஊழல் அட்ராசிட்டிகளைப் பெரிதாகப் பேசவைத்து, அதில் தலையிட நினைக்கிறாராம் பவன் புள்ளி. ‘சட்டத்தில் அதற்கான இடம் இருக்கிறது’ என பாயின்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள் பவன் அதிகாரிகள். # ‘அசோக்... இந்த நாள்... உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ...’ மொமன்ட்!

சமீபத்தில் நடந்த காக்கித்துறைக்கான டிரான்ஸ்ஃபரில், விவசாய மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட ‘முத்தான’ அதிகாரியும், குளுகுளு காற்றுக்குப் பெயர்போன மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட ‘தில்’லான அதிகாரியும் உரிய இடத்துக்குப் போய் பொறுப்பேற்காமல் போர்க்கொடி தூக்கினார்கள். காக்கி வட்டாரத்தில் இப்படி எதிர்ப்பு கிளம்பிய சரித்திரமே இதுவரை கிடையாது. அதனால், ‘இரு அதிகாரிகள்மீதும் கடுமையான நடவடிக்கை பாயப்போகிறது’ என நினைத்தார்கள் பலரும். அதற்கு முற்றிலும் மாறாக, இருவரின் கோரிக்கைக்கும் குனிந்து செவிசாய்த்து, அவர்கள் கேட்ட இடங்களுக்குப் புதிய நியமனத்தை அறிவித்திருக்கிறது அரசு. “டி.ஜி.பி-யையே தாண்டி அரசியல் செல்வாக்கு காட்டத் தொடங்கிவிட்டார்கள் காக்கி அதிகாரிகள்” எனக் குமுறுகிறது கோட்டை வட்டாரம். #என்னமோ போடா... மாதவா!

சின்ன தலைவியைக் காவிக் கட்சிக்கே அழைத்துவந்துவிடலாமா என யோசிக்கிறது டெல்லி தரப்பு. சின்ன தலைவி மீதான அதிருப்திகள் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், அவரைப் பிரசார பீரங்கியாகப் பயன்படுத்தி முக்குலத்து வாக்குகளை அள்ளுகிற ஐடியாவாம். இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் சின்ன தலைவி அசைந்து கொடுக்காத நிலையில், சர்ச்சையான சாமி புள்ளியையே தூது அனுப்பலாமா என நினைக்கிறார்களாம். ‘உத்தரவிடுங்கள்… எம்.பி தேர்தலில் 20 சீட் ஜெயிக்க நான் கியாரன்டி… அதில் ஒரு சீட் எனக்கு…’ என்கிறாராம் சர்ச்சை சாமி. ‘இது என்னடா புது குடைச்சலா இருக்கு…’ என யோசித்த டெல்லித் தரப்பு, தூதுக்கு வேறு ஆளைக் களமிறக்கத் தயாராகிவருகிறது. #இந்த ஏரியாவுல எப்பவும் ஒரே காமெடிதான்!

கோட்டையின் உச்ச அதிகாரி சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கிறார். ஆனாலும், அவரை அப்படியே விட்டுவிட விரும்பாத ஆளும் தரப்பு, இப்போதே அவரைச் சரியான பதவிக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறதாம். ஐந்து வருடங்களுக்கு அவர் அந்த சீட்டில் நீடிக்கும்விதமாக டி.என்.பி.எஸ்.சி அல்லது அதற்கு நிகரான பொறுப்பில் பணியமர்த்த நினைக்கிறார்களாம். உச்ச பொறுப்புக்கு வந்த பிறகு புத்தகங்களை வாசிக்கவோ, எழுதவோ நேரமின்றி வாடும் அந்த அதிகாரியோ ‘ஓய்வுக்குப் பிறகு அவற்றுக்கு நேரம் ஒதுக்கலாம்’ என நினைக்கிறாராம். ஆளும் தரப்பின் திட்டம் அவர் கவனத்துக்கு இன்னமும் போகவில்லையாம். #I am பாவம்..!

‘ஓடும்’ அமைச்சர் தஞ்சைப் பகுதிக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறாராம். அப்படிச் செல்லும்போது ஏரியா வி.ஐ.பி-க்கள் சிலரை ரகசியமாகச் சந்திக்கிறாராம். ‘எல்லை தாண்டி அரசியல் பண்றார்…’ என இது குறித்து அறிவாலயத்துக்குப் புகார் தட்டியிருக்கிறார்கள் தஞ்சையின் சீனியர் நிர்வாகிகள். எப்போதெல்லாம் தஞ்சைக்கு வந்தார்… யாரையெல்லாம் சந்தித்தார் என்கிற ஆதாரங்கள் வரை அனுப்பியிருக்கிறார்களாம். ‘துளியளவும் உண்மை இல்லாத குற்றச்சாட்டு’ என விளக்கம் கொடுத்திருக்கிறாராம் அந்த ஓடும் அமைச்சர். #ஓடி ஓடி விளக்கணும்... உண்மை இல்லைனு மறுக்கணும்..!