வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? சரிபார்க்க கருணாநிதி வேண்டுகோள்!


சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை உடனடியாக பார்க்க வேண்டும் என்று திமுகவினரை அக்கட்சித் தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெற்றிருந்த சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதாக செய்தி வந்துள்ளதே?
ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரே நீக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த முறை தேர்தலில் நிற்க இயலாமல் செய்யவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு அவரது பெயரை நீக்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோல கழகத்தின் சார்பில் போட்டியிடக்கூடுமென்று அவர்களே யூகித்து, அவர்களின் பெயர்களையெல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றிடுவதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. எனவே கழகத்தின் முன்னோடிகள் அனைவரும் கவனமாகவும், உடனடியாகவும் வாக்காளர் பட்டியலில் கழகத்தினரின் பெயர்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கிறதா என்பதை பார்த்திட வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய ஆட்சியில் மணல் கொள்ளையை தடுத்து விட்டாரா?
பதில்:-திருவள்ளூர் மாவட்டம், மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் 16-10-2012 இரவு சுமார் 50 லாரிகள் மற்றும் 3 பொக்லைன் இயந்திரத்தில் மணல் அள்ளப்படுவதாக கிராம மக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் சந்திரன் என்பவர் பத்து பேருடன் அங்கே சென்றபோது, வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன் உட்பட பத்து பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியிருக்கிறது. அவர்களை கைது செய்ய வேண்டுமென்று கிராம மக்கள் மறியல் நடத்திய பின் போலீசார் ஆறு பேர்களை கைது செய்துள்ளனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக என்று கூறி, அரசு எடுத்துக்கொள்வதை பற்றி தமிழறிஞர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்களே?
##~~## |