சென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் இன்று மயக்கமடைந்தனர்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம், இன்றும் தொடர்கிறது. போராட்டம் நடக்கும் இடத்திலேயே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் டெய்சி, திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மோசஸ் என்பவரும் மயக்கமடைந்தார். அவரும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில் ஜாக்டோ-ஜியோவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்றார். போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கிய தகவல்கள் குறித்து விவாதம் நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் கூறுகையில், ``புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். இந்தப் போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட 214 பேர் பங்கேற்றுள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகின்றன.
நேற்று காலை தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், விடிய விடிய தொடர்ந்தது. இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடந்துவருகிறது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். தொடர் உண்ணாவிரதத்தால் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டெய்சி, ஒருங்கிணைப்பாளர் மோசஸ் ஆகியோர் மயக்கமடைந்துள்ளனர்.
ஏற்கெனவே காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த புள்ளி விவரங்களை அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல முரண்பாடான தகவல்கள் உள்ளன. அதுதொடர்பாக நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசு தரப்பில் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இதனால், எங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆலோசித்துவருகிறோம்" என்றார்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், ``எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், இந்த அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவதால் எந்தவித பயனும் இல்லை. தி.மு.க ஆட்சி வந்ததும் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திதான் ஜனநாயக முறையில் போராடிவருகிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதனால்தான் போராட்டம் தொடர்கிறது" என்றனர்.