
எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி
அ.தி.மு.க-வின் பொருளாளராக இருந்த டி.டி.வி.தினகரனின் பதவி பறிக்கப்பட்ட தினம், 2007 ஆகஸ்ட் 28-ம் தேதி. அ.தி.மு.க-வில் பதவி பறிப்பும் நியமனமும் வழக்கமான சம்பிரதாயம் என்பதால், தினகரனின் பொருளாளர் பதவியைப் பறித்துவிட்டு அதைப் பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதா கொடுத்தபோதும் அப்படித்தான் பேசப்பட்டது. ‘தினகரனின் பதவியை ஜெயலலிதா எதற்காக காலி செய்தார்’ என்கிற விஷயம் ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் வெளிச்சத்துக்கு வந்தது. எதற்காக நடந்தது அந்தப் பதவிப் பறிப்பு?

சசிகலா குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால், கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன்தான் தினகரன். 1999 தேர்தலில் பெரியகுளம் எம்.பி, ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர், 2004 எம்.பி. தேர்தலில் பெரியகுளம் வேட்பாளர், தோற்றதுமே ராஜ்ய சபா எம்.பி., கட்சியின் பொருளாளர் என அ.தி.மு.க-வில் உச்சத்துக்குப் போனவர் தினகரன். அதனாலேயே அவர் பின்னால் கட்சிக்காரர்கள் திரண்டார்கள். அப்படி உயரத்துக்குப் போனவர் திடீரென கீழே சரிந்தார். இதற்குக் காரணம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டிருந்தது. லண்டனில் தினகரன், ஹோட்டல் ஒன்றை வாங்கியதாகப் புகார் எழுந்தது. அந்த ஹோட்டல் வழக்கு கர்நாடகாவில்தான் நடைபெற்றுவந்தது. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரி துக்கையாண்டியும் அரசு வழக்கறிஞரும் வெளிநாடுகளுக்குச் சென்று ஆவணங்களைத் திரட்டிவந்து, தனியாக லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றைப் போட்டார்கள். இதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி எதிர்ப்பு தெரிவித்தார். ‘சொத்துக் குவிப்பு வழக்குப் புலன் விசாரணையின் தொடர்ச்சிதான் இது. தனியாக லண்டன் ஹோட்டல் வழக்கைப் போடக்கூடாது. இரண்டையும் ஒன்றாகத்தான் விசாரிக்க வேண்டும்’ என கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் மனு போட்டார் ஜோதி. இப்படி அவர் சொன்னதற்குப் பின்னால் ஒரு சூட்சுமம் உண்டு.

சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி, தீர்ப்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. 272 சாட்சிகள் விசாரிக்கப் பட்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கையும் சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்தால், மீண்டும் சாட்சிகள் விசாரணை நடைபெறும். பொதுவாக ஒரு வழக்கில் வேறொரு வழக்கை சேர்த்தாலோ, புதிதாக ஒன்றை இணைத்தாலோ அந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்பது நடைமுறை. இந்த அடிப்படையில்தான் சொத்துக் குவிப்பை வழக்கை முதலில் இருந்து ஆரம்பிக்க பிளான் போட்டார் ஜோதி. போதாக்குறைக்கு லண்டன் ஹோட்டல் வழக்கில் இருக்கிற சாட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் இருப்பவர்கள். அவர்களை அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு அழைத்து வந்து சாட்சி சொல்ல வைக்க முடியாது. ‘லண்டன் ஹோட்டல் வழக்கையும் சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்து விசாரிக்கச் சொல்லிவிட்டால், இன்னும் சில வருடங்களுக்கு வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கும். அதுவரையில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பிரச்னை ஏற்படாது’ என்பதுதான் ஜோதியின் திட்டம். ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் இந்த யோசனையைச் சொல்லி, அவர்களின் அனுமதியோடுதான் இப்படியான ஏற்பாட்டைச் செய்தார் ஜோதி. ஆனால், லண்டன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தினகரனுக்கோ ஜோதி மீது கோபம். லண்டன் வழக்கால் தனக்கு எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படும் என நினைத்தார் அவர்.
‘வழக்கை ஒன்றாக விசாரிக்க வேண்டும்’ என்கிற ஜோதியின் மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கைப் போட்டது தி.மு.க அரசுதான். அந்த நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. சில காலம் கழித்து, ‘இரண்டு வழக்குகளும் ஒன்றாக நடந்தால் வழக்கு இன்னும் இழுத்தடிக்கப்படும்’ என்பதை உணர்ந்த தி.மு.க அரசு, ‘லண்டன் ஹோட்டல் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்’ என உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டது. நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டதால், லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தி.மு.க-வால் தினகரன் தப்பித்தார். ஆனால், ஜெயலலிதாவும் சசிகலாவும் இளவரசியும் சுதாகரனும் வழக்கில் மாட்டிக்கொண்டார்கள். எப்படித் தெரியுமா? லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதனால், ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டு சிறைக்குப் போனார். அதன்பிறகு குமாரசாமி தீர்ப்பால் விடுதலை ஆனார். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சசிகலா சிறைக்குள் போவதற்கு தினகரனும் ஒருவகையில் காரணம்தான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்... சொத்துக் குவிப்பு வழக்கையும் லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாகச் சேர்த்த ஜோதி மீது கடும் கோபமானார் தினகரன். ஜோதிக்கும் அதை எதிர்த்த தினகரனால் ஏற்பட்ட பிரச்னை என்ன தெரியுமா? தினகரனின் பொருளாளர் பதவி பறி போனதற்குக் காரணம் என்ன?
‘‘என்னைக் கொலை செய்துவிடுவேன் என தினகரன் மிரட்டினார். மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். என் பெற்றோரைக் கேவலமாக விமர்சித்தார்’’ எனக் கொதித்தார் ஜோதி. அவர் கொளுத்திய தீ தினகரனின் பதவியைக் காவு வாங்கியது.
தினகரன் என்ன சொல்லித் திட்டினார்? அதனால் ஜோதி எடுத்த முடிவு என்ன?
(தொடரும்)