மூன்று வருடங்களுக்கு முன்பு, துருக்கி கடற்கரை மணலில் முகம் கவிழ்ந்து இறந்துகிடந்த சிரியா நாட்டின் குழந்தை ஆலனை நினைவிருக்கிறதா. 2015 செப்டம்பர் 2-ம் தேதி... கடலின் அலையும் நுரையும், மூச்சடங்கிய அந்தப் பிஞ்சு முகத்தைக் குற்ற உணர்ச்சியுடன் தடவிக்கொண்டிருந்த அந்தப் புகைப்படம், நம் ஆழ் மனதைவிட்டு என்றும் அகலாது. சிரியா அகதிகளின் கையறு நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்து உயிர்நீத்திருந்தான் ஆலன்.
அந்தக் குழந்தையின் சிவப்பு சட்டையும் நீல நிற டிரவுசரும் இனிவரும் தலைமுறைகளுக்குப் போரின் கொடூரங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். செய்தியாகப் பார்க்கவே இதயத்தை நொறுக்கிய இந்தச் சம்பவத்தின் வலிகளை ரத்த உறவாக அனுபவித்திருந்தால்... ஆலனுக்காக அந்த உடையை அத்தை டிமா குர்தி ஆசை ஆசையாக வாங்கும்போது, இந்த ஆடை இத்தகைய கறுப்பு வரலாறாக மாறும் என்பதை நினைத்திருப்பாரா... தன் வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டிய இந்த மனச்சுமையைச் சற்றே இறக்கி வைத்திருக்கிறார் டிமா குர்தி (Tima Kurdi). இந்தச் சம்பவம் குறித்து, 'தி பாய் ஆன் த பீச்' (The Boy on the Beach) என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார்.
அதில், இளமையில் தான் சிரியாவில் வாழ்க்கையைக் கழித்தது, திருமணத்துக்குப் பிறகு கனடா சென்றது, சிரிய அகதிகளின் நிலைமை, தன் சகோதரனின் குடும்பம் உயிர் தப்பிக்க கடத்தல்காரர்களின் படகில் ஏறியது, லைஃப் ஜாக்கெட் வாங்கப் பணம் போதாமல் மனைவியையும் மகன்களையும் கண்ணெதிரே பறிகொடுத்த தன் சகோதரனின் நிலைமை எனக் கண்ணீரைத் தொட்டு எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பக்கமும் அத்தனை வலி.
Photo Courtesy: twitter.com/mutludc
`சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்திலிருந்து என் சகோதரன் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றி, என்னுடன் கனடாவில் வைத்துக்கொள்ள நினைத்தேன். அதற்காக, நான்தான் அவருக்கு 5,000 டாலர் அனுப்பி வைத்தேன். முறைப்படி வருவதற்கான வழிகள் தடைப்பட்டுவிட்டதால், கடத்தல்காரர்களின் படகிலாவது என் அண்ணன் குடும்பத்தைத் தப்பிக்கவைக்க முயன்றேன். சிரியாவிலிருந்து அவர் தப்பித்து படகில் ஏறிய நொடியிலிருந்து, நானும் சகோதரனும் வாட்ஸ்அப்பில் தகவல்களைப் பரிமாறிக்கொண்டே இருந்தோம்.
`படகில் ஏறிவிட்டோம்; மிகவும் இருட்டாக இருக்கிறது. அண்ணியும் குழந்தைகளும் தண்ணீரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். படகு மோசமான கண்டிஷனில் இருக்கிறது' எனத் தொடர்ந்து தகவல் வந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் குறுந்தகவல்கள் வருவது நின்றுவிட்டது. அப்போதே என் மனதுக்குத் தவறாகப்பட்டது. விடியற்காலை 4 மணிக்கு, என் கணவர் அவருடைய போனை நீட்டி, 'இந்தப் புகைப் படத்தைப் பார்க்கிறாயா' என்றார். நான் அதைப் பாய்ந்து பிடுங்கிப் பார்த்தேன். துருக்கி கடற்கரையில் ஒரு குழந்தை தலைக்குப்புற கிடக்கிறான். குழந்தையின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தேன். அந்தக் குழந்தை அணிந்திருந்த ஆடையை எங்கோ பார்த்த நினைவு. ஆமாம்... ஒரு வருடத்துக்கு முன்பு என் சகோதரன் மகன் ஆலனுக்குப் பார்த்துப் பார்த்து நான் வாங்கிக் கொடுத்த அதே ஆடை. அய்யோ கடவுளே...'' எனத் தன்னுடைய எழுத்துகளின் வழி கதறுகிறார் டிமா. அந்தக் கதறல், அவர் புத்தகத்தைப் படிக்கும் எல்லோரையும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.
தன் சகோதரன் குடும்பம் உள்நாட்டுக் கலவரத்தால் மாண்டுவிடுமோ என்ற அச்சத்திலும் காப்பாற்றும் அக்கறையிலும் எடுத்த முயற்சிகளே, அந்தக் குடும்பத்தைச் சின்னாபின்னாமாக்கிவிட்ட குற்றவுணர்ச்சியில் இருக்கிறார் டிமா.
Photo Courtesy: twitter.com/timakurdi
''அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் பணம் அனுப்பினேன். படகு ஏற்பாடு செய்தேன். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. என் ஆலன் இறந்து இரண்டு நாள்கள் கழித்து, அரசியல் அழுத்தங்கள் காரணமாக, மற்ற நாடுகள் தன் எல்லைகளைத் திறந்துவிட்டன. அதற்கு என் மருமகனின் சின்னஞ்சிறு உயிர் தேவைப்பட்டிருக்கிறது. ஆலன் இறந்த நாளிலிருந்து தினமும் விடியற்காலை 4 மணிக்கு எனக்கு விழிப்பு வந்துவிடுகிறது. யாரோ என் கால்களைப் பிடித்து இழுப்பதுபோல; நான் தண்ணீருக்குள் மூழ்குவதுபோல இருக்கிறது. நான் என்ன குற்றம் செய்தேன்? எல்லா சகோதரிகளைப்போல என் சகோதரனை காப்பாற்றவே முயன்றேன். உங்கள் சகோதரனுக்கு இப்படியோர் ஆபத்து வந்தால் நீங்களும் என்னைப் போலத்தானே செய்திருப்பீர்கள்?'' என்கிற டிமாவின் கேள்விக்கு, உலகின் அத்தனை சகோதரிகளின் பதிலும் 'ஆம்' என்பதாகவே இருக்கும்.
தற்போது, 'குர்தி ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அகதிகளின் குழந்தைகளுக்கு உதவி செய்துவருகிறார் டிமா குர்தி. இதாவது ஆலனின் அத்தைக்கு மன அமைதியைத் தரட்டும்!