
கழுகார் பதில்கள்!
மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலேயே இருக்கிறதே... யார் காரணம்?
உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தைரியம் இல்லாத மாநில அரசுதான் காரணம்!
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
தமிழ்நாட்டில் இப்போதும் காமராஜர், ஜீவா போன்றவர்கள் இருக்கிறார்களா?
இன்னமும் இருக்கிறார்கள். இன்று நல்லவர்கள் தலைமறைவாக வாழ்கிறார்கள். அவர்களை இந்தச் சமூகத்தின் கண்களுக்குத்தான் அடையாளம் தெரிவ தில்லை. சமூகத்தின் நோக்கமும் லட்சியமும் மாறிவிட்டதால், தாங்கள் மறைந்து வாழ்வதுதான் நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
தேச நலன் கருதி அந்தக் காலத்தில் சிறை சென்றவர்களுக்கும் இன்று சிறை செல்லும் அரசியல்வாதிகளுக்கும் வேறுபாடு என்ன?
அன்று தேசபக்திதான் அரசியல்வாதிகளுக்குப் பிரதானம். அன்றைய சித்ரவதைச் சிறைகள் அல்ல இன்றைய சிறைகள். கட்டுமஸ்தான உடம்புடன் உள்ளே போன சுப்பிரமணிய சிவா, நோய்கள் தாக்கி நைந்த உடலோடுதான் வெளியே வந்தார். ஆரோக்கியமற்ற சூழல், உணவு ஆகியவற்றால் அவர்களின் தேசியச் சிந்தனையையே கொன்றது பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால், இன்றைய சிறைகள், சொகுசான இடங்களாக மாறிவிட்டன.
அன்றைய தலைவர்களுக்கு அரசியல் நோக்கங்கள் இல்லை, ‘தேர்தலில் நிற்போம்; சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்வோம்’ என்ற கற்பனைகள் இல்லை. ஆனால், கணக்கு காட்டுவதற்காக இன்றைக்குச் சிறைகளுக்குச் செல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் போராட்டம் நடத்தினால் எப்போது வெளியே வருவோம் என்றே தெரியாது. எந்த ஊர் சிறையில் வைப்பார்கள் என்றும் தெரியாது. ஆனால், இன்றைய போராட்டங்களின் சிறைவாசம் காலையில் தொடங்கி மாலையில் நிச்சயம் முடிந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்டே பலரும் செல்கிறார்கள்.

காயல் எஸ்.ஏ.நெய்னா, காயல்பட்டினம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன்முதலாகக் குரல்கொடுத்து வழக்கு தொடுத்த வைகோவுக்குப் போராட்டக் குழு அழைப்புக் கொடுக்காதது சரியா?
இப்போது நடக்கும் போராட்டம் என்பது சுற்றுவட்டாரத்து மக்கள் அவர்களாகவே நடத்துவது. இதில், அரசியல் கட்சிகள் பங்கெடுக்க வேண்டாம் என அவர்களாகவே சொல்லியிருக்கிறார்கள். பிரச்னை திசை மாறிவிடும் என நினைத்திருக்கலாம். எனவே, அவர்கள் எடுத்த முடிவு சரியானதுதான்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும் என்று உச்ச நீதிமன்றம் உறுதியுடன் கூறுவது?
நம்பிக்கைதான். கட்டளையாக, உத்தரவாக இல்லையே... என்ன செய்ய?
தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
அ.தி.மு.க தற்போது யார் கையில் உள்ளது?
அது அவர்களுக்கே தெரியவில்லை.
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
‘ஜீன்ஸ் அணியும் பெண்களுக்குத் திருநங்கை குழந்தைதான் பிறக்கும்’ என்று கேரள பேராசிரியர் ரஜித் குமார் சொன்னது சர்ச்சையாகியுள்ளதே?
இவர்கள் எல்லாம் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. திருநங்கை என்பது ஜீன்ஸ் பிரச்னை அல்ல. ஜீன் பிரச்னை. அவ்வளவுதான்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், கவர்னர் டெல்லிக்கு அழைக்கப்பட்டது ஏன்?
தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்துச் சில விளக்கங்களைக் கேட்பதற்குத்தான் கவர்னர் அழைக்கப் பட்டார். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டித் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களைத் தமிழக அரசு முறையாகக் கட்டுப்படுத்துகிறதா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடந்ததா, இந்தச் சூழ்நிலையில் பிரதமர் தமிழகம் வரலாமா, ஆளும்கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் நிலைமை ஆகிய விவகாரங்கள் குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. முடிவில், கர்நாடகத் தேர்தல் முடியும் வரை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்க்குமாறு அவரிடம் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிட்டுமா?
அப்படிச் சொல்ல முடியாது. காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்ட அளவு தண்ணீரை ஓர் ஆண்டுகூட கர்நாடக அரசு தரவில்லை. இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்றால், கர்நாடக அரசு ஒழுங்காக முறைப்படி செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்குத்தான். அதுமட்டுமல்ல, அணைகள் அனைத்தும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில் போய்விடும் என்பதால், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு நிலவரம் தெளிவாகத் தெரியும்.
போலீஸ் ஸ்டேஷன் இருந்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அதற்காக போலீஸ் ஸ்டேஷன் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
உண்ணாவிரதம் என்ன செய்துவிட்டது?
லேசான செரிமானப் பிரச்னைகளைச் சரி செய்திருக்கும். தினமும் ஒரு மணிநேரம் கண்மூடி அமர்ந்திருப்பதும், வாரத்துக்கு ஒருநாள் பேசாமல் இருப்பதும், மாதம் ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பதும் ஆரோக்கியமானது. நீங்கள் எதிர்பார்த்த பதில் இதுதானே? சரியாகச் சொல்லியிருக்கிறேனா?
எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்கை வரலாறு புத்தகத்தைப் படித்தீர்களா?
கொஞ்சம் மனத்தைத் திடப்படுத்திய பிறகுதான் அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும்.
படங்கள்: ஏ.சிதம்பரம், தே.தீட்ஷித்
எழுத்தாளர், கவிஞர் கலாப்ரியா

தமிழக நிர்வாகத்தில் சமீபகாலமாக கவர்னரின் தலையீடு அதிகரித்துள்ளது. உண்மையில் கவர்னரின் எல்லை என்ன? இப்படி அவர் அதிகாரத்தைக் கையில் எடுப்பது நல்லதா?
பன்வாரிலால் புரோஹித், தன்னை சுப்ரீம் முதலமைச்சராக நினைத்துக்கொண்டு செயல்படுகிறார். இப்படித்தான், அசாம் கவர்னராக இருந்தபோதும் பல பிரச்னைகளில் தலையிட்டார். அங்கு பி.ஜே.பி அரசாங்கம். ‘கவர்னர் அதிகமாகத் தலையிடுகிறார்’ என்று டெல்லியில் புகார் செய்தார்கள். ‘இப்படி ஒருவரைத்தானே தேடிக்கொண்டிருந்தோம்’ என்று பிடித்துத் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இங்கே இப்போது இருப்பது மத்திய அரசாங்கத்துக்கு பயந்து நடுங்கும் ஓர் அரசாங்கம். அதை பயமுறுத்துவதற்கு பன்வாரிலாலைப் பயன்படுத்துகிறார்கள். அவரும் ஆய்வு செய்கிறேன் என்று பயணம் போய்க்கொண்டிருக்கிறார். கவர்னர் ஆய்வு செய்யட்டும். அந்த ஆய்வு, ஆட்சி நிர்வாகத்தை நகர்த்துவதாக அமைய வேண்டும். ‘நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்புகளில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறீர்கள்’ என்று கேட்டால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும். அதைவிட்டு, சும்மா குப்பை கூட்டுவதால் என்ன பயன்?
துணைவேந்தர்களை நியமிப்பது கவர்னரின் பொறுப்புதான். அதைத் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. மாநில அரசின் ஆலோசனையுடன் துணைவேந்தரை அறிவிக்க வேண்டும். மாநில அரசுக்குச் சம்பந்தமில்லாமல் துணைவேந்தரை அறிவிப்பதும், கவர்னர் மாளிகையில் வைத்து நேர்முகத்தேர்வு நடத்துவதும் யு.ஜி.சி நெறிமுறைகளுக்கு மாறானது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தால், கவர்னர் மாளிகையில் நேர்முகத்தேர்வு நடக்குமா?
மாநில நிர்வாகத்தைப் பொறுத்தவரை கவர்னர் ஒரு பார்வையாளர். அவருக்கு முக்கியமான நிர்வாக முடிவுகளைத் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவர் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்று இல்லை. அப்படியே ஒருவர் தலையிட்டாலும் அந்தத் தலையீடு மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது.
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!