
ஆர்.பி.உதயகுமார் Vs செல்லூர் ராஜு... உச்சத்தில் மதுரை கலாட்டா!
ஒரே மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தால் ஈகோ மோதல் தவிர்க்க முடியாததாகிவிடும். அவர்கள் செல்வாக்கானவர்களாக இருந்தால், மோதல் இன்னும் கடுமையாக இருக்கும். அவர்கள், மைக்கைப் பார்த்தாலே பேச ஆரம்பித்துவிடும் ஆர்.பி.உதயகுமாரும் செல்லூர் ராஜுவாகவும் இருந்தால்? மதுரை மாவட்டத்தில் இவர்களுக்கு இடையிலான உள்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு செல்லூர் ராஜுவின் ஆதரவாளரான ‘போஸ்டர் புகழ்’ கிரம்மர் சுரேஷுக்குக் கொடுக்கப்பட்ட மாவட்ட அளவிலான பதவியைப் பறித்தார் ஆர்.பி.உதயகுமார். இப்போது கிரம்மர் சுரேஷுக்கு மாநிலப் பொறுப்பைப் பெற்றுக்கொடுத்து தன் செல்வாக்கை நிரூபித்துள்ளார் செல்லூர் ராஜு. இது, உதயகுமாருக்கு செம ‘நோஸ்கட்’ என்று சொல்கிறார்கள் மதுரை அ.தி.மு.க-வினர்.

செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கிடையே யார் செல்வாக்கானவர் என்பதில் பயங்கரப் போட்டி நடந்துவருவது மதுரைக்கே தெரிந்த விஷயம். மதுரை மாநகருக்குள் கட்சிரீதியாக ஆர்.பி.உதயகுமாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதற்குக் காரணம், செல்லூர் ராஜு அமைச்சர் பொறுப்புடன் மாநகரச் செயலாளர் பதவியையும் வைத்திருக்கிறார் என்பதுதான். புறநகர் மாவட்டத்தில் மட்டுமே ஆர்.பி.உதயகுமாரின் பவர் செல்லுபடியாகும். அதுவும்கூட, புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா மனது வைத்தால்தான்.
இந்த நிலையில்தான், ஆர்.பி.உதயகுமார் கொஞ்சம் கொஞ்சமாக செல்லூர் ராஜுவைத் தனிமைப்படுத்தும் வகையில் சில வேலைகளைச் செய்தார். மதுரை மாநகர் பகுதி எம்.எல்.ஏ-க்களான ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், எஸ்.எஸ்.சரவணன் ஆகியோரை செல்லூர் ராஜு நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிடாமல் செய்தார். புறநகர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளத் தொடங்கினர். மேலும், ஆர்.பி.உதயகுமாரின் துறைசார்ந்த அரசு நிகழ்ச்சிகளையும், அவர் பொறுப்பு வகிக்கும் ஜெ. பேரவை நிகழ்ச்சிகளையும் மதுரையில் நடத்தி, செல்லூர் ராஜுவைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். கடந்த மாதம் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனுக்கு சௌராஷ்டிர சமூக மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்படக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால், செல்லூர் ராஜுவை அழைக்கவில்லை.

இந்த நிலையில்தான், செல்லூர் ராஜு தன் ஆதரவாளரான கிரம்மர் சுரேஷுக்கு ஜெ. பேரவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார். ஆனால், ஜெ. பேரவையின் மாநிலச்செயலாளராக இருக்கும் ஆர்.பி.உதயகுமார், ஒரே நாளில் அந்தப் பதவியைப் பறித்துவிட்டார். அப்செட்டான செல்லூர் ராஜு, ‘‘நான் வகிக்கும் அமைச்சர், மாநகரச் செயலாளர் போன்ற பதவிகளுக்கு மரியாதை இல்லை. என்னை எல்லோரும் புறக்கணிக்கின்றனர். என் ஆதரவாளர் பதவியையும் பிடுங்கினால் எப்படி?’’ என்று எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரிடம் குமுறினார். இதைத் தொடர்ந்து, கிரம்மர் சுரேஷுக்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டது.
இப்போது செல்லூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் கலக்குகின்றன. கிரம்மர் சுரேஷிடம் பேசியபோது, ‘‘பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வுக்கு வந்த என்மீது தி.மு.க-வினர் அப்போது பொய் வழக்குகளைப் போட்டார்கள். அவற்றையெல்லாம் கடந்துதான் அ.தி.மு.க-வில் பணியாற்றிவருகிறேன். அண்ணன் செல்லூர் ராஜு என்மீது தாயளவு பாசம் வைத்துள்ளார்’’ என்றார்.
ஆர்.பி.உதயகுமார் - செல்லூர் ராஜு இடையேயான கேமில் இப்போது ஹெவியான கோல் அடித்துள்ளார் செல்லூர் ராஜு.
- செ.சல்மான், படங்கள்: வி.சதீஷ்குமார்