நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பரபரக்கும் புதுச்சேரி கட்சிகள்... பதுங்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பரபரக்கும் புதுச்சேரி கட்சிகள்... பதுங்கும் காங்கிரஸ் தலைவர்கள்!
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜூரம் பற்றிக்கொண்டுவிட்டது. வேட்பாளர் தேர்வு, கூட்டணி வியூகங்கள் எனக் கட்சிகள் பரபரப்புடன் இயங்கத் தொடங்கிவிட்டன. மத்தியில் பி.ஜே.பி-யை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது காங்கிரஸ் தலைமை. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலமான புதுச்சேரியில், தேர்தல் செலவுகளுக்குப் பயந்து, போட்டியிடுவது யார் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

இதுகுறித்துப் பேசிய முக்கிய நிர்வாகிகள் சிலர், “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் மூன்று பேர் பட்டியலை ஐந்து மாதங்களுக்கு முன்பே கட்சித் தலைமை கேட்டு விட்டது. மாநிலக் கட்சி பரிந்துரைத்த பட்டியலில் தற்போதைய சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், காங்கிரஸ் சார்பில் முதல்வராக அறிவிக்கப்பட்ட நாராயணசாமி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் வைத்திலிங்கத்தின் பெயரை டிக் செய்த கட்சி மேலிடம், ‘ஆளுங் கட்சியாக இருப்பதால் தேர்தல் செலவுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களிடம் எதுவும் எதிர்பார்க் காதீர்கள்’ என்று சொல்லிவிட்டது.
ஓட்டு ஒன்றுக்கு 300 ரூபாய் என்றாலும், சுமார் 30 கோடி ரூபாய் வருகிறது. பூத் உள்ளிட்ட செலவுகள் சுமார் 40 கோடி ரூபாயைத் தொடும். எனவே, ‘கட்சி செலவு செய்தால் நிற்கிறேன்’ என்று சொல்லிவிட்டது வைத்திலிங்கம் தரப்பு. இந்தத் தகவல் முதல்வர் நாராயணசாமியிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரோ, ‘ஒருவேளை வைத்திலிங்கம் வெற்றிபெற்று, மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துவிட்டால், அவருக்கு அமைச்சரவையில் இடம்கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம். தைரியமாகச் செலவுசெய்யச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போதும் வைத்திலிங்கம் தரப்பு பிடிகொடுக்காததால், ‘ஜான்குமார் பெயரைப் பரிசீலனை செய்ய முடியுமா?’ என்று மேலிடத்தில் மாநிலத் தலைமை கேட்க, அதுவும் நிராகரிப்பட்டது. தொடர்ந்து, ‘முதல்வர் நாராயணசாமியே போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்’ என்று தெரிவித்திருக்கிறார் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம். நாராயணசாமி வெற்றிபெற்று டெல்லி சென்றுவிட்டால், முதல்வர் பதவி தமக்குக் கிடைக்கும் என்பது அவர் போடும் கணக்கு.

இன்னொரு பக்கம் தி.மு.க., ‘எங்களுக்கு சீட் கொடுங்கள். ஜெகத்ரட்சகனை நிற்கவைத்து வெற்றிபெற வைக்கிறோம். செலவு பிரச்னை இல்லை” என்று கேட்கிறது. ஆனால், ‘தி.மு.க வெற்றிபெற்றால் சட்டமன்றத் தேர்தலில் பாதி தொகுதிகளைக் கேட்பார்கள். இந்தத் தொகுதியில் ஒன்பது முறை வெற்றிபெற்றிருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு கூட்டணிக் கட்சிக்குத் தொகுதியை விட்டுக்கொடுத்தால் கட்சியின் பெயர் கெட்டுவிடும்’ என்று மறுத்துவிட்டது கட்சி மேலிடம். இன்னும் முடிவு செய்யப்படாமல் குழப்பம் நீடிக்கிறது” என்றார்கள். வைத்திலிங்கத் திடம் பேசினோம். “கொஞ்சம் பொறுங்கள். விரைவில் சொல்கிறேன்” என்று மட்டும் சொன்னார்.

எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் பேசியவர்கள், “தற்போதைய எம்.பி ராதாகிருஷ்ணனை மீண்டும் நிறுத்த முடிவு செய்தார் தலைவர் ரங்கசாமி. ஆனால் அவரோ, ‘தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை’ என்று மறுத்துவிட்டார். அதனால் இப்போது, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கேசவனின் மகனும், ஸ்ரீ மணக்குள விநாயகர் குழுமக் கல்லூரிகளின் செயலருமான நாராயணசாமி பெயர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. கூட்டணி வைக்கலாம் என்று ரங்கசாமியை அணுகியது பி.ஜே.பி தரப்பு. ஆனால், ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டார் ரங்கசாமி. அதேசமயம், அ.தி.மு.க-வுடன் சீரியஸாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்து, என்.ஆர்.காங்கிரஸ் வாங்கிய வாக்குகள் 2,55,826. தனித்துப் போட்டியிட்டு மூன்றாம் இடம்பெற்ற அ.தி.மு.க-வின் வாக்குகள் 1,32,657. அதனால், பி.ஜே.பி-யைக் கழற்றிவிட்டுவிட்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறார் ரங்கசாமி” என்றார்கள்.
சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!
- ஜெ.முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்
பி.ஜே.பி-யின் கணக்கு
தமிழகத்தில் தடுமாறிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி., புதுச்சேரியை கைப்பற்றவேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைக் கைக்குள் வைத்துக் கொண்டு, எம்.பி தொகுதியைக் கைப்பற்றுவதற்கான வேலைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பி.ஜே.பி செய்துவருகிறது. அதற்காகத்தான் கிரண் பேடியை இங்கே துணைநிலை ஆளுநராக நியமிக்க ஏற்பாடு செய்தது பி.ஜே.பி. அதற்கேற்பத்தான், எதிர்க்கட்சித் தலைவர்போலச் செயல்பட்டு, பி.ஜே.பி-க்குச் சாதகமானச் சூழலை ஏற்படுத்த தீவிர கவனம் செலுத்துகிறார் கிரண் பேடி. பி.ஜே.பி-யைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாகச் சட்டமன்றத்துக்குள் அவர் நுழையவைத்ததும், அந்த வகையில்தான். இதனால்தான், கிரண் பேடியைக் கடுமையாக எதிர்த்துவருகிறார் நாராயணசாமி.
தற்போது, அ.தி.மு.க பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார் ரங்கசாமி என்று கூறப்பட்டாலும், பி.ஜே.பி-யுடனும் தனி டிராக்கில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.