
“இன்னும் சிலநாள்களில், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றிச் சொல்கிறேன்” என்று தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அறிவித்தார் மு.க.அழகிரி. அதன் பின்பு சென்னையில் ஒரு பேரணி நடத்தினார். பெரியதாக எடுபடவில்லை. அழகிரியின் பிறந்தநாளான கடந்த ஜனவரி 30-க்குப் பிறகு, பிப்ரவரி புரட்சி வெடிக்கும் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்தார்கள். ம்ஹும்... வண்டி கிளம்பவே இல்லை. இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள்கள் எண்ணப்படும் நிலையிலும் அமைதி காக்கிறார் அழகிரி. இதனால், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள்!
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தே.மு.தி.க பற்றி அழகிரி விமர்சனம் செய்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போதும், அழகிரி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. கருணாநிதி இறந்தபின்னரும், மு.க.ஸ்டாலின் அழகிரியை உள்ளே விடவில்லை. இதற்கிடையே, ‘சிவகங்கையில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கு அழகிரி ஆதரவு தெரிவித்தார்’ என்றத் தகவலைக் கடந்தவாரம் பி.ஜே.பி-யினர் படத்துடன் பரப்பினர். இதுகுறித்துக் கேட்டதற்கு, ‘‘அது பழைய படம், நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. என் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன்’’ என்று நம்மிடம் தெரிவித்தார் அழகிரி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில், மதுரை மார்க் சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய மதுரை வந்த மு.க.ஸ்டாலினுடன், அழகிரி படம் போட்ட டீ ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் செஃல்பி எடுத்துக்கொண்டார். இது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து, அழகிரி ஆதர வாளர்கள் ஸ்டாலினை விரும்புவதாகப் பேச்சுகள் கிளம்பின. இதுபற்றியும் அழகிரி வாய் திறக்கவில்லை. இதுவும் அழகிரி ஆதரவாளர்களைக் குழப்பம் அடையச் செய்தது. இந்தநிலையில், மார்ச் 31-ம் தேதி தி.மு.க முன்னாள் கவுன்சிலர் எம்.எல்.ராஜின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய அழகிரி, ‘‘தி.மு.க-வில் சிறப்பாகப் பணியாற்றியதால், ராஜ் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார். ஆனால், இப்போதெல்லாம் அப்படி அல்ல. சம்பளத்துக்கு வேலை பார்க்கிற மாதிரி, நிர்வாகிகள் தி.மு.க-வில் இருக்கிறார்கள்’’ என்று தி.மு.க-வைக் குற்றம்சாட்டிவிட்டுக் கிளம்பினார்.
அழகிரி ஆதரவாளர்களிடம் கேட்டால், ‘அண்ணன் மனசுல என்ன இருக்குதுன்னே தெரியலை. அமைதியாவே இருக்காரு. முடிவு எடுக்கத் தயங்குறாருங்கிறது மட்டும் தெரியுது” என்கிறார்கள். அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னனோ, ‘‘தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதற்குள் அண்ணன் தன் நிலைப்பாட்டை அறிவிப்பார். பொறுத்திருங்கள்’’ என்றார்.
என்னதான் உங்க வியூகம்... சீக்கிரமாச் சொல்லுங்க பாஸ்.
- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்