மிஸ்டர் கழுகு: கடைசிநேரக் காட்சிகள்: மந்திரி பதவி... அ.தி.மு.க-வை அலறவிட்ட பி.ஜே.பி!

மிஸ்டர் கழுகு: கடைசிநேரக் காட்சிகள்: மந்திரி பதவி... அ.தி.மு.க-வை அலறவிட்ட பி.ஜே.பி!

“குடியரசு மாளிகையில் கோலாகலமாக அரங்கேறியது பிரதமர் பதவியேற்பு விழா. என்னதான் தமிழகம் பி.ஜே.பி-யை புறக்கணித்தாலும்... இரண்டு தமிழர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்து, பெருந்தன்மையைக் காட்டியுள்ளார் மோடி” என்று டெல்லி அப்டேட்களைச் சுடச்சுட நமக்கு தர ஆரம்பித்த கழுகாரிடம் “புரிகிறது... புரிகிறது... நன்றாகவே நக்கல் அடிக்கிறீர்கள். எல்லாம் சரி... மத்திய அமைச்சரவைப் பட்டியல் அறிவிப்பதில் எதற்காக இவ்வளவு தாமதம் ஏற்பட்டது?” என்றோம்.
“மனிதருக்கு கொஞ்ச நஞ்ச டென்ஷனா... மோடி பதவி ஏற்பதற்கு ஆறு மணி நேரத்துக்கு முன்புவரை அமைச்சர்கள் யார் என்ற விவரம் தெரியாமல், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களே பரபரத்துக்கிடந்தார்கள். அறிவிப்பு வரும் கடைசி நிமிடம்வரை மோடி - அமித் ஷா இருவரைத் தவிர வேறு யாருக்கும் அமைச்சரவைப் பட்டியல் விவரம் தெரியாது. அந்தளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது. இதனால், பி.ஜே.பி எம்.பி-க்கள் மட்டுமல்ல... அதன் கூட்டணிக் கட்சியினரும் கடைசி நிமிடம்வரை தவித்துப்போய் விட்டார்களாம்!”
“எதற்காக இப்படி ரகசியம் காத்தார்களாம்?”
“தேவை இல்லாத நெருக்கடிகளையும் பரிந்துரைகளையும் தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்கிறார்கள். இன்னொன்றும் சொல்கிறார்கள்... ‘முன்பெல்லாம் ஆர்.எஸ்.எஸ் சார்பிலும் அமைச்சரவைப் பட்டியல் சரி பார்க்கப்பட்டு, இறுதி செய்யப்படும். இந்த முறை பி.ஜே.பி கட்சியை ஆர்.எஸ்.எஸ் என்கிற லாபியைத் தாண்டி மொத்தமாக தங்கள் கைகளுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது மோடி - அமித் ஷா கூட்டணி. இதன் மூலம் கட்சியில் தங்களுக்கு எதிராகக் காய் நகர்த்துபவர்களுக்கும் பவர்ஃபுல்லான ஆர்.எஸ்.எஸ் நபர்களுக்குமே தங்கள் அதிகார எல்லையை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியுள்ளார்கள்’ என்றும் கூறுகிறார்கள்.”
“ஓஹோ!”
“புதிய அமைச்சரவை குறித்து மே 29-ம் தேதி காலை மூன்று மணி நேரம் மோடியும் அமித் ஷாவும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அமித் ஷா கையில் ஒரு பட்டியல் இருந்துள்ளது. அந்தப் பட்டியலில் இருந்தவர்களின் பெயர்கள் சிலவற்றை பென்சிலால் திருத்தியுள்ளார் மோடி. சொல்லப் போனால், அமித் ஷாவைவிட மோடிக்குத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து வந்தவர்கள் நன்கு பரிச்சயம். அதனால், அமித் ஷா ஒவ்வொருவராகப் பெயர்களைச் சொல்லும்போதே, அவரவர் செயல்பாடுகள் குறித்து மோடி மனப்பாடமாக விளக்கம் அளித்துள்ளார். இப்படியாகத்தான் பி.ஜே.பி ஆட்களின் பட்டியல் தயாராகியிருக்கிறது. இந்த மூன்று மணி நேர ஆலோசனைக்குப் பிறகுதான், கூட்டணிக் கட்சிகளின் தலைமைகளைத் தொடர்பு கொண்டு, ‘உங்கள் சார்பில் அமைச்சரவைக்கு யாரைப் பரிந்துரை செய்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்கள்.

“அப்படி என்றால் அ.தி.மு.க-வில் ஏன் யாருக்கும் பதவி கிடைக்கவில்லை?”
“பதவியேற்பு நாள் அன்று காலைவரை அ.தி.மு.க குறித்து எந்த முடிவையும் பி.ஜே.பி எடுக்கவில்லை. அதன் பின்பே பியூஷ் கோயல் மூலம், அ.தி.மு.க-வுக்கு ஒரு பதவி மட்டுமே என்று தகவல் பாஸ் செய்யப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் டெல்லியில் முகாமிட்டிருந்தார்கள். ஒரு பதவி மட்டும்தான் என்று சொல்லப்பட்டதும் பன்னீர்செல்வம்தான் முதலில் அப்செட் ஆனாராம்.”
“ஏனாம்?”
“அமைச்சர் பதவி குறித்து பேச்சு அ.தி.மு.க-வில் எழுந்தபோதே வைத்தியலிங்கம் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல்போனால் எந்த எல்லைக்கும் போய்விடுவேன் என்று வெளிப்படையாகவே எச்சரித்திருந்தாராம். ஏற்கெனவே, பி.ஜே.பி-யின் ‘ஒரு கூட்டணிக் கட்சிக்கு ஒரு பதவி’ திட்டத்தை ஸ்மெல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, ‘மத்திய அரசிடம் இரண்டு பதவிகளைக் கேட்டுப் பார்க்கலாம்’ என்று சமாதானம் செய்துள்ளது. அப்போதே பியூஷ் கோயலிடம் விஷயத்தை பக்குவமாக எடுத்துச் சொல்லி, ‘இரண்டு பதவிகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்டுள்ளார்கள். அவர், ‘எந்த முடிவும் என் கையில் இல்லை’ என்று சொல்லிவிட்டார்.
“ம்!”
“மீண்டும் பதவியேற்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்தியலிங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ‘ஒரு பதவி என்றால் நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்க ‘சரி, அந்தப் பதவி யாருக்கு என்பதை நீங்கள் முடிவுசெய்ய வேண்டாம். செயற்குழுவைக் கூட்டி, அதில் முடிவு செய்யுங்கள்’ என்று கறார் காட்டியிருக்கிறார் வைத்தி. அதனால்தான், பன்னீர்செல்வம் பரிதவிப்புடன் டெல்லிக்குப் புறப்பட்டார். டெல்லியில் சமாதானம் செய்து இரண்டு பதவிகளைப் பெறலாம் என்று அவர் நினைத்தார்.”
“ஓ! இத்தனை சிக்கல்களுடன்தான் இருவரும் டெல்லிக்குச் சென்றனரா?”
“ம்... ஆனால், டெல்லியில் நிலைமை தலைகீழாக இருந்துள்ளது. ‘சொன்னது சொன்னதுதான். தனது கூட்டணியில் அதிக இடங்களை வென்ற சிவசேனா கட்சிக்கே ஓர் இடம்தான்’ என்று கறார் காட்டியது பி.ஜே.பி. அப்படி இருக்கும்போது ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஜெயித்த அ.தி.மு.க-வின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா... ஆனாலும், கடைசி நிமிடம் வரை எந்தத் தகவலையும் சொல்லாமல், அ.தி.மு.க-வை அலறவிட்டிருக்கிறது பி.ஜே.பி. கடைசி நிமிடங்களில் அ.தி.மு.க தரப்பினர் நகம் கடித்துக்கொண்டு பதற்றமாக போன் போட்டு தகவல் கேட்டபோது, ஒருகட்டத்தில் கடுமையாக பதில் வர எடப்பாடி தரப்பு கப்சிப் ஆகிவிட்டதாம். இப்படியாக இவர்களும் ஏதாவது தகவல் வரும்... வரும்... வரும்... என்று கடைசிவரை காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். இதே நிலைதான் பீகாரில் நிதிஷ்குமார் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.”
“வைத்தியலிங்கம் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கக் காரணம் என்ன?”
“ ‘என்னை நம்பியவர்களுக்கு என்னால் என்ன செய்ய முடிந்தது? மத்திய அமைச்சராக இருந்தாவது என்னை நம்பியவர்களுக்கு ஏதாவது செய்கிறேன்’ என்று ஆசைப்பட்டதன் விளைவு தான் அ.தி.மு.க-வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள். ஆனால், வைத்தியலிங்கத்தைத் தூண்டிவிட்டதே எடப்பாடி பழனிசாமி தரப்புதானா என்கிற சந்தேகமும் பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இருக்கிறதாம். தவிர, தனி ஒருவராக பன்னீர்செல்வத்தின் மகன் பெற்றிருக்கும் வெற்றியால், மீண்டும் கட்சியில் பன்னீர்செல்வத் தின் கை ஓங்கிவிடுமோ என்று அச்சப்படுகிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.”

“இருக்காதா பின்னே?”
“ஆமாம்! ‘ஏற்கெனவே பி.ஜே.பி-க்கு விசுவாசியாக இருக்கிறார் பன்னீர்செல்வம். நாளை அவரின் மகனும் மத்திய அமைச்சராகி விட்டால், தனக்குப் பாதுகாப்பு இருக்காது’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு இப்படி செய்திருக்கலாம் என்கிறார்கள். ஏனெனில், கடந்த முறை பன்னீர்செல்வம் வாரணாசிக்கு சென்றிருந்தபோதே, மகனின் அமைச்சர் பதவி குறித்த கோரிக்கையை வைத்துவிட்டார். அப்போது பி.ஜே.பி தரப்பில், ‘முதலில் வெற்றி பெற்று வாருங்கள், பார்க்கலாம்’ என்று சொன்னார்களாம். கடைசியில் மகனுக்கு பதவி கிடைக்காமல் போனபின்பு, ‘இவ்வளவு பெரிய எதிர்ப்பலையிலும் யாரும் சாதிக்க முடியாததை என் மகன் சாதித்தான். நாங்கள்தான் எல்லாம் என்று கட்சியில் கோலோச்சிய கொங்கு அமைச்சர்கள் அத்தனை பேரும் சேர்ந்து ஒருவரைக்கூட வெற்றிபெற வைக்க முடியவில்லை. கடைசியில் கட்சியின் மானத்தைக் காப்பாற்றியதே என் மகன்தான். அவனுக்கு இந்தக் கட்சி காட்டும் மரியாதை இதுதானா...’ என்று அழாத குறையாகப் புலம்பித் தீர்த்து விட்டாராம் பன்னீர்செல்வம்.”
“பி.ஜே.பி கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிலை பரிதாபம் என்று சொல்லும்.”
“ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கூட்டணி தர்மத்தை சரியாகக் கடைப்பிடித்தோம். ஒவ்வொரு கட்சியாகக் கேட்டுக் கேட்டு பதவி கொடுத்தோம். உங்கள் உள்கட்சி பூசலால் நீங்கள் அடித்துக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நினைத்தால் உங்களிடம் கேட்காமலேயே அமைச்சரவையை நாங்கள் முடிவு செய்திருக்க முடியும்... எங்களிடமே தனி மெஜாரிட்டி இருக்கிறது’ என்கிறார்கள். அதன்படி சிவசேனா, இந்திய குடியரசு கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளில் தலா ஒருவர் என மூன்று அமைச்சர் மட்டும் பதவி ஏற்றுள்ளார்கள்.”
“தமிழ்நாட்டுக்கு என்று மத்திய அமைச்சரே இல்லையா?”
‘‘ஆரம்பத்திலேயே சொன்னேனே. இரண்டு தமிழர்களை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார் மோடி. தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் இருக்கிறார். தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் இருக்கிறார்.”

“ரொம்பதான் வாருகிறீர்கள்... அது சரி, ஜெய்சங்கருக்கு எப்படி அமைச்சர் பதவி கிடைத்ததாம்?’’
“கடந்த முறை மோடி பிரதமர் ஆனபோது வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர். குஜராத் கலவரத்தை முன்வைத்து அமெரிக்காவுக்கு மோடி செல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தன. அதை எல்லாம் உடைத்து, ஜெய்சங்கர்தான் மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைத்தாராம். அப்போதே மோடியின் குட்புக்கில் இடம்பெற்றுவிட்டார் ஜெய்சங்கர். அதற்கு நன்றிக் கடனாகவே கேபினட் அந்தஸ்தில் அவரை அமர வைத்துள்ளார் மோடி.”
“அமித் ஷா?”
“அவர் தேர்தல் களத்தில் நின்றதே அமைச்சர் ஆவதற்குத்தான். முதலில் நிதித்துறையை அவர்வசம் ஒப்படைக்க நினைத்தார் மோடி. ஆனால், உள்துறை தன்னிடம் இருந்தால்தான், மாநில அரசுகளுக்கு செக் வைக்க முடியும் என்று அத்துறையைக் கேட்டு வாங்கியிருக்கிறார் அமித் ஷா.”
“ஓஹோ!”
“அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும், தகவல் சம்பந்தபட்ட வர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர்களாக பதவியேற்கும் நபர்களுடன் கலந்துரையாட விரும்பினார் பிரதமர். அன்று மாலையே பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குப் பின்பு எம்.பி-க்கள், பி.ஜே.பி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அமித் ஷா, மோடி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டமும் முடிந்த பிறகே, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார் மோடி.”
ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதில் கால தாமதம் ஏன்?”
“அழைப்பு கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் பி.ஜே.பி-க்கு கிடையாது என்கிறார்கள். அதனால்தான், முதலில் அழைப்பு கொடுக்கவில்லையாம். ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரியக் கட்சியாக தி.மு.க இருப்பதால், அந்தக் கட்சிக்கு அழைப்பு கொடுத்துவிட லாம் என்று கடைசியாக முடிவு எடுத்தார்கள். இதனால், கடுப்பான ஸ்டாலின் விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டாராம்” என்ற கழுகார், “நான் நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கிறது... நீரும் டெல்லி மீது ஒரு கண் வைத்திரும்” என்றபடி சிறகுகளை விரித்தார்.
படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கு.ஜெரோம்