நாடு முழுவதும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த 'ஜெய் ஶ்ரீராம்' என்னும் கடவுளின் மந்திரம், அண்மைக்காலமாக வன்முறைச் சம்வங்களுக்கு வித்திடுகிறதா என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
சம்பவம் 1:
கடந்த மே மாதம் 25-ம் தேதி அன்று டெல்லி அருகேயுள்ள குர்கான் மாவட்டத்தில் முகமது பரக்கத் என்னும் இளைஞர் மாலை நேரத்தில் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, அவரின் தலையில் இருந்த குல்லாவை பறித்தனர். பின்னர், அவரை 'ஜெய் ஶ்ரீராம்' எனக் கோஷமிடச் சொல்கிறார்கள்.
அதற்கு முகமது பரக்கத் மறுத்துள்ளார். உடனே அந்த ஐந்து பேர் கும்பலால் அவர் தாக்கப்படுகிறார். மேலும், அவர் அணிந்திருந்த குர்தாவையும் அந்தக் கும்பல் கிழித்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து, தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார் முகமது.
சம்பவம் 2:
மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் ஓடும் ரயிலில் ஒரு தரப்பினர் 'ஜெய் ஶ்ரீராம்' என முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர். அவர்களுடன் அதே ரயிலில் ஹஃபீஸ் முகமது ஷாருக் என்பவரும் பயணம் செய்தார். தலையில் குல்லா அணிந்திருந்த அவரிடம், 'ஏன் குல்லா அணிந்திருக்கிறாய்?' என்று அந்தக் கும்பல் கேட்டுள்ளது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஹஃபீஸ் அமைதியாக இருந்துள்ளார். அந்தக் கும்பல், அவரைத் தாக்கத் தொடங்கினர்.

தாக்கிக் கொண்டே, ஹஃபீஸை 'ஜெய் ஶ்ரீராம்' என முழக்கமிடச் சொல்லி, அந்தக் கும்பல் வற்புறுத்தி இருக்கிறது. அதற்கு மறுத்த ஹஃபீஸை ஓடும் ரயிலிலிருந்து அந்தக் கும்பல் கீழே தள்ளிவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஹஃபீஸ் உயிர் பிழைத்தார்.
சம்பவம் 3:
கடந்த 18-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது இளைஞர் அன்சாரியை, திருடன் என்று கருதி அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்குகிறது ஒரு கும்பல். அந்த இளைஞரை 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. அன்சாரி மயங்கிச் சரியும்வரை, சுமார் ஏழு மணி நேரம் பலமாகத் தாக்கியுள்ளனர் அந்தக் கும்பலலைச் சேர்ந்தவர்கள்.

தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 24-ம் தேதி உயிரிழந்தார்.
முந்தைய இரண்டு சம்பவங்களைவிடவும் அன்சாரியின் இழப்பு, நாடு தழுவிய அளவில் பேசுபொருளானதற்குக் காரணம், அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்ததுதான். ஒருவேளை இவரும் உயிரிழக்காமல் இருந்திருந்தால் மற்ற இரு சம்பவங்களைப்போன்று இதுவும் அனைவராலும் ஒரு சாதாரண சம்பவமாகவே பார்க்கப்பட்டிருக்கும்.
ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதில் அன்சாரி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தன் கருத்தை பின்வருமாறு பதிவு செய்தார். "ஒருவரை அடித்து அல்ல; அன்பால் அணைத்து 'ஜெய் ஶ்ரீராம்' சொல்லச் சொல்லுங்கள். வன்முறையால் 'ஜெய் ஶ்ரீராம்' சொல்ல வற்புறுத்துபவர்கள், அரசின் நற்பெயரைக் குலைக்கிறார்கள்" என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

"தவறு செய்தவர்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்காமல், மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், சம்பந்தப்பட்டவர்களை மயிலிறகால் வருடும் வகையிலான அவரின் இந்தக் கருத்து, யாரைக் குளிர்விக்க?" என அவரை நோக்கிக் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
ஜெய் ஶ்ரீராம் என்பது சொல்லத்தகாத கோஷம் அல்ல. ஆனால், ஒருவர் இஸ்லாமியர் என்று தெரிந்தும், அவர் அதைச் சொல்லியே ஆக வேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்தி, ஓடஓட விரட்டியடிக்கும் அளவுக்கும் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடும் அளவுக்கும், உயிர்போகும்வரை அடித்துத் துன்புறுத்தும் அளவுக்கும் வெறி அந்தக் கும்பலிடம் எங்கிருந்து வருகிறது? அதை யார் ஊட்டுகிறார்கள்? 'இது என்னுடைய நாடு, இங்கே நாங்கள் சொல்வதுதான் சட்டம்' என்கிற ஆணவத்தால்தான் அது எழுகிறது எனில், இந்த நாடு இந்துக்களுக்கு மட்டும்தான் என்கிற மனநிலை காரணமாகத்தானே. இதுபோன்ற மனநிலை தொடருமானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னாவாக இருக்குமென்று யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஜெய் ஶ்ரீராம் என்கிற மந்திரம் கோயில் வளாகங்களில் ஒலித்த காலம்போய், அதை ஒரு கொலைக்கருவியாக மாற்றும் காலத்துக்கு வந்து நிற்கிறோமா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
இவ்வளவு காலமும், மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை நேசித்து வந்த நம்மிடையே, பிரிவினைவாதத்தை யார் எந்தெந்த வழியில் தூண்டுகிறார்கள் என்கிற தெளிவு, அதிகம் தேவைப்படக்கூடிய ஒரு சூழல் எழுந்துள்ளது. இந்தியா எல்லா மதத்தினருக்கும் பொதுவான நாடு என்கிற நம்பிக்கையை, உத்தரவாதத்தை முன்னெப்போதையும்விட நாட்டு மக்களுக்கு சற்றே அதிகமாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டிய பொறுப்பு, இந்தியாவை ஆளும் மோடி அரசாங்கத்துக்கு, தற்போது எழுந்து இருக்கிறது. வன்முறையின் மோசமான வடிவம் என்றால், அது பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் காக்கும் கள்ள மவுனம்தான். நாட்டின் சௌக்கிதாரான பிரதமர் மோடி, இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து நடக்காதவாறு நம்மைப் பாதுகாக்கப்போகிறாரா, கள்ள மௌனம் காக்கப்போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.