நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வாரமாகக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி என்பவர், 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ராஜ்ய சபாவில் இன்று ஜீரோ ஹவரில் (Zero-hour) பேசிய பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி, ``நாட்டிலிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகள் காணாமல்போய்விட்டன. மேலும் அவை விரைவில் செல்லாது என்ற வதந்திகளும் வெளிவருகின்றன. இது குறித்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

அதோடு, 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டு, போதைப்பொருள், பண மோசடி போன்ற சட்டவிரோத வர்த்தகங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நாட்டிலேயே அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டு, கறுப்புப் பணத்துக்கு ஈடானதாக மாறிவிட்டது. எனவே 2,000 ரூபாய் நோட்டை அரசு படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும். மேலும், மக்கள் தங்களிடமிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று கோரிக்கைவைத்தார்.