'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசுகள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றன. ஆனால், அந்த உதவிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று அடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியாவால் செயல்பட முடியாது!' என்று இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர். தமிழர் பிரதேசங்களில் ராணுவ முகாம்கள் முளைத்து வருவதுபற்றி கேட்டால், 'பசில் ராஜபக்ஷேவிடமே நான் கேட்டுவிட்டேன். அவரே இல்லை என்று கூறிவிட்டார்' என்கிறார் 'வேலிக்கு ஓணான்'போல!
ஆதரவற்றோர் இல்லத்துக்கு சிறு உதவி செய்பவர்கூட, உரியவர்கள் பயன் அடைந்தார்களா என்று பார்த்தறிவதற்காக, அந்த இல்லத்துக்கு விஜயம் செய்யலாம். அதை அந்த இல்லம், தட்டவோ, தவிர்க்கவோ முடியாது.
இலங்கையிலோ, ஆதரவின்றித் தவிப்போர் பல லட்சம் பேர், அவர்களுக்கு நாம் அளிக்கும் உதவிகளும் பலப் பல கோடி! அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதாகச் சொல்லும் இலங்கை அரசின் கறுப்பு உள்ளம் எத்தகையது என்பதற்கான எண்ணற்ற ஆதாரங்களை ஏற்கெனவே உலகம் அறியும்தானே!
இதோ, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார். அவரை எங்கெல்லாம் கூட்டிச் சென்று, எந்த உண்மைகளை எல்லாம் அவர் நேரில் பார்த்தறியும்படி இலங்கை அரசு காட்டியது என்பது மர்மத்திலும் மர்மம்தான். 'நானே நேரில் பார்த்தேன். எல்லாம் சரியாக இருக்கிறது' என்று இவரும் இந்தியா வந்து சொல்லிவிட்டால், அடுத்து விஜயம் செய்யப் போகும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் அதையே ஒப்பிப்பது சுலபமாகிவிடும்!
தப்பித் தவறி 'போலீஸ்காரன்' வேலையைப் பார்க்க மத்திய அரசே தயாரானாலும்கூட, தமிழ்நாட்டில் இருக்கும் 'இலங்கையின் நண்பர்கள்' சிலர், அதற்கு வழிவிட மாட்டார்கள் போலிருக்கிறதே!
|