ஸ்பெஷல் -1
Published:Updated:

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!
சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!
சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!
ப.திருமாவேலன்
படங்கள்:'ப்ரீத்தி' கார்த்திக்
சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

'திருப்புமுனை' என்ற அடைமொழியுடன்தான் திருச்சியைச் சொல்வார் தி.மு.க. தலைவர்

கருணாநிதி. கடந்த சனிக்கிழமை, திருச்சி மாநகரில் காங்கிரஸ் கட்சி நடத்திய கூட்டம், தி.மு.க-வுக்கு அதிர்ச்சி முனையின் ஆரம்பம்!

'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முதன்மைக் கட்சியாக மாற்றுவோம்!' - கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு இப்படிச் சொன்னார்!

'ராஜீவ் காந்தி ரத்தம் சிந்திய மண்ணில், காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த சூளுரைப்போம்!' - 40 ஆயிரம் தொண்டர்களுடன் கட்சியில் இணைந்து இருக்கும் எஸ்.திருநாவுக்கரசரின் முழக்கம்.

'யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டிவிட்டோம். பிற கட்சிகளின் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமான காங்கிரஸ், முதல் இயக்கமாக வேண்டும்!' - மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆசைப்படுகிறார்.

'மத்திய அரசின் திட்டங்கள் பல மாநிலங்களில் காங்கிரஸ் கையால் வழங்கப்படுகிறது. அந்த வாய்ப்பை தமிழகத்திலும் உருவாக்கித் தர வேண்டும்!' - சுற்றி வளைத்துத் தன் நோக்கத்தைச் சொன்னார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

'தான் இதுவரை தமிழ்நாட்டு மேடைகளில் எதைப் பேசி வந்தோமோ, அதையே இவர்கள் பேசுகிறார்களே' என்று ஆச்சர்யப்பட்டு, கை தட்டிக்கொண்டு இருந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இறுதியாகப் பேச வந்த சோனியா, "காங்கிரஸ் கட்சி தன்னுடைய தனித்துவத்தை இழக்கக் கூடாது. இந்தக் கட்சி முதன்மை யான இடத்தை மக்கள் மத்தியில் பெற வேண்டும். எதிர்காலத்தில் காங்கிரஸ் மட்டுமே ஒரே அரசியல் கட்சி என்ற நிலை ஏற்பட வேண்டும்!" என்றார். வழக்கமாக, சோனியா சொல்லும் 'தென் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி கருணாநிதி' என்றோ, 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தி.மு.க-வே தூண்' என்றோ சொல்லவில்லை. 'வரும் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தர வேண்டும்' என்றோ, 'ஆறாவது முறையாக கருணாநிதியை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைப்போம்' என்றோ... குரல்கள் இல்லை.

'இந்த முறையும் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணியில் தொடர்ந்தால், இன்னும் 40 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது!' என்று காங்கிரஸ்காரர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

சோனியா, ராகுல் உள்பட டெல்லி காங்கிரஸ் தலைமையை வலம் வரும் அகமது படேல், குலாம்நபி ஆசாத் போன்ற வட்டாரங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த பேச்சுக்கள் அதிகமாகவே இருக்கின்றன. இவர்கள் மூன்றுவிதமான செய்திகளைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

டெல்லி, ராஜஸ்தான், அஸ்ஸாம், ஆந்திரா, ஹரியானா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. காஷ்மீரிலும், மகாராஷ்டிராவிலும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தியாவை ஆளும் பொறுப்பில் காங்கிரஸ் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க் கட்சியாகவே இருப்பது நல்லது அல்ல. எனவே, ஆளும் கட்சியாகவோ, அல்லது அமைச்சரவையில் அங்கம் வகித்து கூட்டணி ஆட்சிப் பொறுப்பு ஏற்க, எங்கே எல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கு எல்லாம் முயன்று பார்க்க வேண்டும் என்பது ராகுலின் மனப்போக்கு. இந்த அடிப்படையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியை அமைப்பது, அல்லது தாங்கள் இடம்பெறும் அணியில் பாதி இடங்கள் வரை கேட்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்படி அமைத்தால் மட்டுமே, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தயவை நம்பி இருக்கும் ஆட்சியைத் தமிழகத்தில் உருவாக்க முடியும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க. மீது பட்டுக்கொள்ளாமல் சோனியா பேசுவதற்கு இதுதான் காரணம்!

இரண்டாவதாகக் கூறப்படும் செய்தி, பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. அங்கு அக்டோபர், நவம்பரில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் ஓர் அணியாகவும், லாலு பிரசாத் மற்றும் பஸ்வான் ஓர் அணியாகவும், இன்றைய முதல்வர் நிதீஷ், பாரதிய ஜனதாவுடன் இணைந்தும், மூன்று அணிகள் களத்தில் உள்ளன. காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை இல்லை என்றாலும், நிதீஷ்குமார் எவ்வளவு வெற்றி பெறுகிறார் என்பதைப் பார்த்து, காங்கிரஸ் - நிதீஷ்குமார் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான ரகசிய எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவைப் பொறுத்து, தமிழக நிலைமையில் காங்கிரஸின் எண்ணங்கள் மாறும்.

இரண்டுக்கும் என்ன தொடர்பு என்றால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு நாடாளுமன்றத்தில் 20 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். நிதீஷ் - காங்கிரஸ் உறவு ஏற்பட்டால், இந்த 20 உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும். அப்போது, தி.மு.க-வின் 18 எம்.பி-க்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும். அதன் பிறகு, சோனியா வட்டாரம் தி.மு.க. குறித்த தீர்க்கமான முடிவை எடுக்கும்!

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

மூன்றாவதாகச் சொல்லப்படுவது, ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

'விதிமுறைகளின்படி நான் நடந்துகொண்டேன்,' 'பிரதமர் அலுவலகத்துக்கு முன்னதாக அனைத்தையும் சொல்லிவிட்டேன்' என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திரும்பத் திரும்பச் சொல்லி வந்தாலும், விவகாரம் முடிவதாக இல்லை.

ஸ்பெக்ட்ரம் புகார் வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. ஒழுங்காக விசாரிக்கிறதா, இல்லையா என்ற கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. மத்திய விஜிலென்ஸ் கமிஷன், இது தொடர்பான ஆவணங்களைவைத்து கேள்விகளைத் தயாரித்துக்கொண்டு இருக்கிறது. முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான அக்கவுன்ட்டிங் கமிட்டி ஸ்பெக்ட்ரம் குறித்த தகவல்களைத் திரட்டி, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பக் காத்திருக்கிறது.

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!

இந்த நான்கு மூலைக்குள் இருந்தும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விடுபட்டு வெளியேறுவது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. எதிர்க் கட்சிகள் மீண்டும் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தை நடுங்கச் செய்யும் அளவுக்கு கிளப்பத் தயாராக இருக்கின்றன. "பிரதமர் மற்றும் காங்கிரஸ் மேலிடத்தால் வெளிப்படையாகப் பதில் அளிக்க முடியாத கேள்வியாக ஸ்பெக்ட்ரம் பூதம் உருவெடுத்துவிட்டது. அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசாவை நீக்கிவைக்கும் நிலையை அநேகமாக காங்கிரஸ் மேலிடம் எடுக்கத் திட்டமிட்டு உள்ளது!" என்கிறார்கள் டெல்லியில். அப்படி ஒரு நிபந்தனை வைக்கப்படுமானால், அதை கருணாநிதி எதிர்கொள்ளும்விதம் சிக்கலானது.

" 'தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததற்காக ஆ.ராசாவைப் பழிவாங்குவதா?' என்று கருணாநிதி சில மாதங்களுக்கு முன்னால் கேள்வி எழுப்பினார். இதே குற்றச்சாட்டு காங்கிரஸ் மேலிடத்தின் மீதே சொல்லப்படாதா?" என்று கேட்டால், "இப்போது பிரச்னை சாதி அல்ல. நல்லவரா, கெட்டவரா என்பதுதான். ஸ்பெக்ட்ரம் நடவடிக்கை மூலமாக, காங்கிரஸ் ஆட்சியின் தூய்மை நிரூபிக்கப்படும் பாருங்கள்!" என்பதே இந்த விவகாரங்களைக் கவனிப்பவர்களின் பதிலாக இருக்கிறது.

அதாவது, தமிழகத்தில் எப்படியாவது காங்கிரஸ் ஆட்சியை உருவாக்க வேண்டும் - அதற்கு முன்னதாக, தி.மு.க-வுக்கு மாற்றாக நிதீஷ்குமாரின் 20 எம்.பி-க்கள் ஆதரவைப் பெற வேண்டும் - ஸ்பெக்ட்ரம் விவகாரம் - இந்த மூன்றைச் சுற்றியே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி விஷயங்கள் வலம் வருகின்றன.

"ராகுலைப் பொறுத்தவரையில் தெளிவாக இருக்கிறார். சோனியாவுக்கு மட்டும்தான் சில குழப்பங்கள்!" என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். சோனியாவும் மகன் வழியில் செல்வதாகவே திருச்சிக் கூட்டத்தின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.

'இன்னும் தமிழர்கள் இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கிறார்களே!' என்று கருணாநிதி சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். 'மாநில சுயாட்சி' போன்ற கருத்துக்களையும் மீண்டும் கருணாநிதி பேச ஆரம்பித்தால், விவகாரம் முற்றிக்கொண்டு இருப்பதை ஊர்ஜிதப்படுத்திவிடலாம்!

சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!
சோனியா சொல்லிய மூன்று ரகசியங்கள்!