"இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் வளர்ச்சி அடைந்து உள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"மாவோயிஸ்ட்டுகள் முதலில் இந்தியச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கு நிலவுவது முதலாளித்துவ ஜனநாயகம்தான். மத்திய அரசு முதலாளித் துவத்தைக் காப்பாற்றவே விரும்புகிறது. அதன் முடிவுகள் ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக, புதிய பொருளாதாரக் கொள்கை, இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஆகியவற்றால், ஆதிவாசி மக்கள் பாதிக்கவே செய்கின்றனர். ஆனால், இந்தியா சுதந்திர நாடு என்பதையும் அது பன்முகத்தன்மை கொண்டுள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல்களில் பணபலம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய எம்.பி-க்களில் 300-க்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள்தான். ஆனால், இந்திய மக்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கைவைத்து இருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இந்த விஷயத்தைத்தான் மாவோயிஸ்ட்டுகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். மாவோயிஸ்ட்டுகளின்
ஆள் கடத்தல், தனி நபர் கொலைகள், கடத்தல் கொலைகள் ஆகியவை வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை. இவை நிச்சயம் புரட்சிக்கான வழி இல்லை. மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுபவர்கள் அனைவரும் வர்க்க எதிரிகள் அல்ல; சாதாரண மக்களும் பரிதாபமாகப் பலியாகிறார்கள். ஒருபுறம் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை என்றால், இன்னொருபுறம் அரச பயங்கரவாதமும் உள்ளது. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் செயல் பாடுகளின் மூலம் மக்களை அரச பயங்கரவாதத்துக்குள் சிக்கவைக்கிறார்கள். தங்களது வன்முறை மூலம் மாவோயிஸ்ட்டுகள் அரசின் கரங்களையே பலப்படுத்து கிறார்கள்!"
" 'உலகமயமாக்கலை எதிர்க்கும் இடதுசாரிகள், தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்' என்பதும் மாவோயிஸ்ட்டுகளின் குற்றச் சாட்டுகளுள் ஒன்று..."
"இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசுதான் தீர்மானிக்கிறதே தவிர, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் அல்ல. ஒட்டுமொத்தமாக, இந்தியாவே உலகமயமாக்கலில் மூழ்கி இருக்கும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் சோஷலிசத்தை அமல்படுத்திவிட முடியாது. ஆனால், இடது முன்னணி அரசு, அடித்தள மக்கள் பயன் அடையும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், தொழிற்சாலையைக் கொண்டுவருவது, அதற்கான நிலங்களை மக்களிடம் இருந்து பெறுவது போன்றவற்றில், இடது முன்னணி அரசு சில தவறுகளைச் செய்து இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அரசின் விதிமுறைகள், காலனியக் காலத்தைச் சேர்ந்தவையாகவே இருப்பதும் பிரச்னைதான்!"
"மாவோயிஸ்ட்டுகள் பிரச்னைக்கான தீர்வாக எதை முன் வைக்கிறீர்கள்?"
"மாவோயிஸ்ட்டுகள் பிரச்னையைச் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. அது ஒரு சமூகப் பிரச்னை. போலீஸைக் குவிப்பதாலோ, ராணுவத்தை இறக்குவதாலோ பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. சமூக, அரசியல், பொருளாதாரரீதியில்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். மாவோயிஸ்ட்டுகளும் துப்பாக்கிகள் மீதான தங்கள் சாகசக் காதலை முறித்துக் கொண்டு, பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்!"
"தீவிரமாக காங்கிரஸை எதிர்க்கும் நீங்கள், தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறீர்கள். ஒருவேளை அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இங்கு அமைந்தால்?"
"நிச்சயமாக அங்கு இருக்க மாட்டோம். நடைபெற உள்ள பீகார் தேர்தல் தொடங்கி, இந்தியா முழுக்க எங்களது நிலைப்பாடு இதுதான். காங்கிரஸ் அரசும் அதன் பொருளாதாரக் கொள்கையும்தான் எங்கள் எதிரிகள்!"
"நீங்கள் இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறீர்கள். ஆனால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதைப்போல் தெரிகிறதே?"
|