''தமிழன் நின்று வெல்வானே ஒழிய, மண்டியிட்டு மடிய மாட்டான்!'' - வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து உச்சரிக்கிறார் தா.பாண்டியன். உண்ணாவிர தம், மறியல், கல்லூரிகளில் வேலை நிறுத்தம், 'கண்ணீர் தூதுவன்' என்ற பெயரில் டெல்லிக்கு ரயிலில் சென்று போராட்டம் என்று ஈழத் தமிழர் நலனில் முன்னெப் போதையும்விட அதிக முனைப்புக்காட்டுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சொல்லப்போனால், தமிழகத்தின் தற்போதைய ஈழ ஆதரவு எழுச்சிக்கு முதல் அலையாக ஆர்ப்பரித்தவர் தா.பா!
தி.நகர், பாலன் இல்லத்தில் சிவப்புத் துண்டைச் சரிசெய்தபடி எதிரே அமரும் தா.பாவிடம், ''இலங்கை யுத்தம்...'' என்று ஆரம்பித்ததுமே, படபடவெனப் பதில் வருகிறது. ''இலங்கையில் நடப்பதைப் போர் என்று வர்ணிப்பதே அநீதியானது. ஒரு நாடு இன்னொரு நாட்டு டன் மேற்கொள்வதுதான் போர். இலங்கையில் தன் சொந்தக் குடிமக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு குண்டு போட்டுக் கொன்றொழிக்கிறது. உயிரைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வன்னிக் காடுகளில் அலைகின் றனர் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள். இது போர் அல்ல, தமிழன் என்ற இனத்தையே வேரோடு அழித்துவிட வேண்டும் என்ற இனவெறி. இந்த கால் நூற்றாண்டுக்கும் மேலான இன ஒழிப்பு யுத்தத்தில் இந்தியாவின் பங்கு என்ன? இலங்கைத் தீவில் அமைதி திரும்பவில்லை. மாறாக, தமிழர்களைக் கொலை செய்யும் சிங்கள அரசுக்கு ராணுவக் கருவிகளையும் ஆலோசகர் களையும் அனுப்பிவைத்து துரோகம் இழைக்கிறது இந்திய அரசு.
ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு 'விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், இந்தியா என நான்கு நாடுகளிடமும் ராணுவ உதவிகளைப் பெற்று, தமிழர்களின் உயிர் குடிக்கிறது இலங்கை இனவாத அரசு. அதே ராஜீவ் கொலை காரணத்தை முன்வைத்து, இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி வழங்குவதை நியாயப்படுத்துகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றை வசதியாக மறந்துவிட்டனர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது, 91-ம் ஆண்டு மே 21-ம் தேதி. ஆனால், ஈழத் தமிழர்களின் போராட்டம் அதற்கும் முன்பிருந்தே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கிறது.
ஈழப் போராட்டத்தின் நியாயங்களைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்க்கும் காங்கிரஸ் நண்பர்களே... ராஜீவ் கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இப்போதும் தமிழர்களை அழிக்க மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது ராஜபக்ஷே அரசு. அதே இலங்கை மண்ணில் ஒரு சிங்களப் படைவீரன், தனது துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ் காந்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்? இந்திரா காந்தியைக் கொன்றவன் ஒரு சீக்கியன் என்பதால், சீக்கிய இனத்தையே அழித்துவிட்டீர்களா? காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவின் இனத்தை கருவறுத்துவிட்டீர்களா? பயங்கரவாதிகளை, கொலையாளிகளைப் பிடிப்பதற்கான வழிமுறை இதுவல்ல. போர் அதற்கான தீர்வும் அல்ல!''
''இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்தபோது அமைதிப் படையை ஆதரித்தும், விடுதலைப் புலிகளை விமர்சித்தும் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தவர் நீங்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு 'ராஜீவ் சிந்திய கடைசித் துளிகள்' என்று புத்தகமும் எழுதினீர்கள். இப்போது தீவிரமாக ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது எப்படி?''
''ஆமாம்! பிரசாரம் செய்தேன், புத்தகம் எழுதினேன்! அது அப்போதைய நிலை. ராஜீவ் படுகொலையின்போது சம்பவ இடத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன். குண்டுத் துகள்கள் இப்போதும் என் உடம்பில் இருக்கின்றன. எல்லாம் உண்மை. வேறு சில உண்மைகளும் இருக்கின்றன. 1980 முதல் 2008 வரைக்கும் இலங்கையில் இருந்து வெளியேறியிருக்கும் 5 லட்சம் ஈழத் தமிழர்கள் உலகின் 42 நாடுகளில் அகதி வாழ்வு நடத்துகின்றனர். அவர்கள் என்ன உலகத்தைச் சுற்றிப் பார்க்கவா சொந்த மண்ணைவிட்டுப் போனார்கள்? 97-ம் ஆண்டிலிருந்து 2008 வரைக்கும் தமிழீழப் பகுதியில் போடப்பட்ட குண்டுகளின் அளவு 1.8 மில்லியன் டன் என்று வாக்குமூலம் அளிக்கிறார் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர். பல்வேறு காரணங்களால் யுத்தப் பகுதிகளைவிட்டு வெளியேற முடியாத 1.5 லட்சம் அப்பாவித் தமிழர்களை இதுவரைக்கும் படுகொலை செய்திருக்கிறது இலங்கை அரசு. இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளா? பயங்கர வாதிகளா? ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு இலங்கைத் தமிழர்கள் அத்தனை பேருமா படையெடுத்து வந்தனர்? இலங்கைத் தீவை வளம் கொழிக்கும் பசுமைப் பிரதேசமாக மாற்றிய தமிழர்களின் தியாகத்துக்கும் உழைப்புக்கும் அங்கு துப்பாக்கிக் குண்டுகள்தான் பரிசாகக் கிடைக்கின்றன. இந்த அநீதியான அழித்தொழிப்பைத் தட்டிக்கேட்கவும், போரின் வடுக்களுடன் கண்ணீர் சிந்துபவர்களுக்குக் கரம் நீட்டவும் தமிழன் என்பதைவிடவும் வேறெந்தத் தகுதியும் தேவை இல்லை. அப்படிக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்பவன் தமிழன் இல்லை!''
''இலங்கை கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு பற்றி...''
''இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் அந்த சின்னத் தீவு இரண்டாகப் பிரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனநாயகத்திலும் மொழியிலும் தமிழர்களுக்கு சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்ட தனி மாநிலத்தை அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது சரி, தவறு என்பது பற்றி இங்கிருந்து கருத்து சொல்ல முடியாது!''
''ஈழத் தமிழர் விஷயத்தில் கருணாநிதி அரசின் நடவடிக் கைகள் எப்படி?''
''முன்பு ஒருமுறை ஈழத் தமிழர் பிரச்னைக்காக கலைஞரும் அன்பழகனும் இன உணர்வுடன் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்கள். இப்போது அதைவிட மூர்க்கத்தனமாக அங்கு யுத்தம் நடக்கிறது. முன்பைவிட அதிகமாக தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அதே சமயம், முன்னெப்போதையும் விட அதிகமாக கலைஞருக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. தமிழகத்தின் சார்பாக மத்திய அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் இருக்கிறார்கள். மத்தியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருப்பவரும் கலைஞர்தான். ஆனால், அவரால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளைக்கூட நிறுத்த முடியவில்லை. மத்திய அரசிடமிருந்து ஓர் உறுதியான, இறுதியான பதிலைப் பெற முடியவில்லை. 'போரை நிறுத்துக!' என்று ஒரு வார்த்தையை மத்திய அரசைச் சொல்லவைக்க முடியவில்லை. கலைஞர் அரசு ஈழத் தமிழர் விஷயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.''
''அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்கள். கருணாநிதியை விட ஜெயலலிதா உங்களுக்குச் சிறந்த பொலிட்டிக்கல் பார்ட்னராக இருக்க முடியுமா?''
''யாருடைய தனிப்பட்ட குணநலன்களையும் மதிப்பிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தற்போதைய நிலையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுதங்கள் வழங்கும் இந்திய அரசுக்கு மன் மோகன்சிங் தலைமை வகிக்கிறார். அவரை அங்கிருந்து அகற்ற வேண்டும். அதற்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கிறோம்.''
''ஆனால், ஈழப் பிரச்னையில் உங்களுக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர் ஜெயலலிதா!''
''அவரை வேறு முடிவு எடுக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம். எங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வைப்போம். புலிகளையும் தமிழர்களையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது!''
|