Published:Updated:

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!
மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

காட்டுத்தனமான 'ராக்' மியூசிக் கேட்டது முதலில்! பின்னாடியே, ''வேர் ஈஸ் த பார்ட்டி... அட, எங்க வூட்ல பார்ட்டி..!'' எ

ன்று பாட்டுச் சத்தம் காதை உலுக்கியது. மியூஸிக் உபயம் கழுகாரின் புதிய செல்போன் ரிங்டோன், பாட்டு - அவரே!

''வேர் ஈஸ் த பார்ட்டி என்றீரே... அப்படி எந்தக் கட்சி காணாமல் போச்சு?'' என்றோம்.

முறைத்தவர், ''முதல்வர் குடும்பத்து சமாதானப் படலத்தைத் தொடர்ந்து திங்கட்கிழமை இரவு ஆர்.ஏ.புரம், தயாநிதி மாறன் வீடு என்று மாறி மாறித் தொடர்ந்தது பார்ட்டி என்பதையல்லவா சொல்ல வந்தேன்! ஆனால், பார்ட்டி கோலாகலம் ஓய்வதற் குள்ளேயே சி.ஐ.டி. நகரிலிருந்து சீறிப் பாய்ந்துவிட்டதாம் சிவகாசி ராக்கெட்!'' என்று ஜோராகவே சுவாரஸ்யம் கூட்டி னார். நாம் நிமிர்ந்தோம்.

''பத்து குடும்பங்கள் மொத்தமாகச் சேர்ந்து ஒற்றுமைத் திருவிழா கொண்டாடியபோதே விவரம் அறிந்தோர் மனதில் இருந்த கேள்வி, ராசாத்தி யம்மாள் மற்றும் கனிமொழியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதுதான்! ஸ்டாலின், அழகிரி மற்றும் மாறன் சகோதரர்களை அந்த வீட்டுக்குப் போய் ஆசி வாங்கும்படி முதல்வர் சொல்லியனுப்பிய காரணமும் அந்தக் கேள்வியோடு ஊடாடிக்கொண்டு இருந்தது. ஆசி என்னவோ அப்போதைக்கு வழங்கப்பட்டதாம். ஆனால், அடுத்த இருபத்துநாலு மணி நேரத்துக்குள் 'கடந்த சில மாதங்கள் போல், கனிமொழியே தொடர்ந்து டெல்லியில் முக்கியத்துவம் பெறவேண்டும். தயாநிதி மாறனின் வருகை எந்த வகையிலும் டெல்லி ஃபோகஸ் விளக்குகளைத் திருப்பிவிடக் கூடாது!' என்று அழுத்தமான அன்புக் கட்டளை பிறந்ததாம்!''

''அடடே...''

''டிசம்பர் இரண்டாம் தேதி தமிழக எம்.பி-க்கள் இலங்கைப் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்த போது, கனிமொழி முக்கியத்துவம் பெற்றிருந்தார். அதே சமயம், 'டிசம்பர் நாலாம் தேதி தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதமரை சந்திக்கும்போது நீயும் இருக்க வேண்டும்' என்று டிசம்பர் முதல் தேதி பேரனிடம் சொல்லி வைத்திருந்தார் தாத்தா. அதுவே இரண்டாம் தேதி மாலைக்கு மேல், 'நீயும் டெல்லிக்கு வருவதாக இருந்தால் வா' என்ற வார்த் தைகளாக லேசாக மாற்றம் பெற்றதாம். மூன்றாம் தேதி, வழக்கம் போல் மதியம் சி.ஐ.டி. நகர் வீட்டுக்குச் சென்றார் முதல்வர். அங்கிருந்து கோபாலபுரம் இல்லம் வந்து, சில முக்கிய அலுவல்களை முடித்துக்கொண்டு அதன் பிறகே விமான நிலையம் செல்வதாக ஏற்பாடு. தயாநிதி மாறன் தனக்கான டிக்கெட் டையும் தயார் செய்து வைத்திருந்தாராம். என்ன ஆனதோ... சி.ஐ.டி. நகரிலிருந்து சீறிக் கிளம்பிய கார் நேராகப் போனது விமான நிலையத்துக்கு. முதல்வரின் கூடவே அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, துரைமுருகன் ஆகியோர் இருந்ததை சிலர் ஆச்சர்யமாக உற்று நோக்குகிறார்கள்!''

''அப்படியா! அப்புறம்?''

''வேறென்ன... தயாநிதி மாறன் இல்லாமலே விமானம் பறந்தது. 'தாத்தாவின் சங்கடங்கள் தயாநிதி சாருக்குப் புரியும். அதனால்தான் அவராகவே டெல்லிக்குப் போகாமல் தவிர்த்துவிட்டார்!' என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டு இருக்க, டிசம்பர் நான்காம் தேதி தயாநிதி மாறன் இல்லாமலே பிரதமர் சந்திப்பு நடந்தது.

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

பிரதமரை தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசியபோது, சந்திப்பு ஸ்தலம்வரை சென்றது கனிமொழிதான். மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசியபோதும் முன்பெல்லாம் சிரித்த முகத்தோடு தயாநிதி மாறன் நிற்பது போல, அந்த இடத்தில் கனிமொழிதான் நின்றிருந்தார். இந்த டெல்லி விசிட்டின்போது கூர்ந்து கவனிக்கப்பட்ட இன்னொரு விஷயம், இடைப்பட்ட காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த ஆ.ராசா மெள்ள பின்னே போய், டி.ஆர்.பாலு மட்டும் உற்சாகமாக முதல்வரோடு வலம் வந்த காட்சிதான்! டெல்லி வி.வி.ஐ.பி. சந்திப்புகள் தொடர்பாக சி.ஐ.டி. நகரின் சாய்ஸான டி.ஆர்.பாலுதான் கனிமொழிக்கு அறிவுரைகள் அளிக்கத் தொடங்கியிருக்கிறார் என்றும் பேச்சு!''

''என்ன அர்த்தம் இதற்கெல்லாம்?''

''டெல்லியில் முதல்வரிடம் மறக்காமல் ஸ்பெக்ட்ரம் பற்றி கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். 'அதெல்லாம் முடிந்த விவகாரம்... எல்லாமே முடிந்த விவகாரம்' என்று முதல்வர் கறுப்புக் கண்ணாடியை தாண்டி புருவம் நெளியச் சொன்னபோது, ஆ.ராசா பக்கத்தில் இருந்தார். இருந்தும், அதைப் பற்றி கொஞ்சமும் கவலையே படாமல் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றியே கேட்க, அருகில் இருந்த கனிமொழி குறுக்கிட்டு, ''தயவு செய்து வேறு கேள்வி கேளுங்களேன்...'' என்று சொல்லி பத்திரி கையாளர்களை அடுத்த கேள்விக்குத் திருப்பி விட்டாராம்...''

''சரி, ஆ.ராசாவின் நிலைமை என்னாகும்?''

''அவர் பிறந்த பயன் முடிந்தது என்கிறார்கள் தி.மு.க-வின் ஹைலெவலில்.

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

அதேசமயம் தயாநிதி மாறனை மறுபடி உயர்த்தி வைப்பதற்காக ஆ.ராசாவை உடனே இறக்குவது நடக்காதென்றும் நம்புகிறார்கள். ராசாவைச் சார்ந்தவர்களோ, 'இப்படி நடக்கும் என்று நாங்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் அப்படி என்ன பெரிய பயன் அடைந்துவிட்டோம்? வெல்லம் தின்றது ஒருத்தர்... விரல் சூப்புவது வேறொருத்தரா?' என்று கொதிப்பும் வருத்தமும் கலந்து பேசுகிறார்கள். அதேசமயம், ராசாவின் பலத்தைக் குறைத்து மறுபடி அவரை சிப்பாயாக்கத் துடிக்கும் சிலரோ, 'தேன் எடுத்தவர்கள் புறங்கையை நக்காமல் இருந்ததுண்டோ?' என்று அதே அளவு கொதிப்போடு கேட்பதும் காதில் விழுகிறது!''

''கழுகாரே, அடிப்படைக் கேள்வி ஒன்று... தயாளு அம்மாளின் ஆதங்கத்தை உணர்ந்து அந்தக் குடும்பம் ஒன்றுபட்டபோது உருவான ஒப்பந்தங்கள் அத்தனையும், ராசாத்தியம்மாளுக்கும் தெரிவிக்கப்படாமலா இருந்திருக் கும்?''

''அது எனக்குத் தெரியாது! ஆனால், 'ஒப்பந்தம் எதுவானாலும் அது அந்தக் குடும்பம் சம்பந்தப்பட்ட உறவினர்களின் விவகாரம். வியாபாரம், அரசியல் என்று அவர்களுக்குள் எதையும் பரிமாறிக்கொள்ளட்டும். அழகிரியின் கேபிள் கம்பெனி மீது போட்ட வழக்கு, பத்திரிகை விளம்பர விஷயமாக அரசின் மீது போட்ட வழக்கு ஆகியவற்றையெல்லாம் மாறன் சகோதரர்கள் இப்போது வாபஸ் வாங்கியிருப்பதுகூட எந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் இருந்துகொள்ளட்டும். ஆனால், கனிமொழியின் சமீபகால வளர்ச்சிக்கு அதெல்லாம் எந்த வகையிலும் தங்குதடையாக இருந்து விடக்கூடாது' என்பதில் மட்டும் ராசாத்தியம்மாள் உறுதியோடு இருந்தார் என்கிறார்கள். தாயுள்ளம் அப்படித்தானே நினைக்கும்? மாறன் சகோதரர்களோடு முறிவு ஏற்படுவதற்கு முந்தைய நிமிடம்வரை, நேரடி அரசியல் என்பது கனிமொழியே நினைத்துப் பார்க்காத ஒன்று! இனி தயாநிதிக்கு இடம் இல்லை என்றான பிறகுதான் ஸ்டாலினும் அழகிரியும் கலகலவென ஒன்றுபட்டார்கள். அண்ணன்களோடு கனிமொழி அன்போடு உறவாடிய திருப்பங்களும் அதன் பிறகே அரங்கேறின. 'கட்சிக்கு அழகிரி; ஆட்சிக்கு ஸ்டாலின்; டெல்லிக்குக் கனிமொழி' என்று நீரேகூட அவர்களின் அழகான பங்குகளை கவர் ஸ்டோரியாகப் போட்டீர். இப்போது, மறுபடியும் தயாநிதி வருகிறார் என்கிறபோது, ஸ்டாலினுக்கும் அழகிரிக்குமான பங்குகளில் பாதிப்பு எதுவும் இல்லை. கனிமொழி இடத்துக்கு மட்டும் கஷ்டம் வரும் என்றால் அதையட்டி அவர் வீட்டில் கேள்விகள் எழத்தானே செய்யும்?''

''லாஜிக்... லாஜிக்... லாஜிக்..!''

''சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நேரடியாக ராசாத்தியம்மாள் தொடர்புடைய ஃபர்னிச்சர் கடைக்கு வந்து போனது செய்தியாகவே வெளியானது. தி.மு.க. தரப்பி லிருந்து யாரும் அதை மறுக்கவில்லை. இப்போது அந்த சந்திப்பு பற்றியும்கூட சுடச்சுடப் பேசுகிறார்கள்

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

தி.மு.க. வட்டாரத்தில்! அதேநேரத்தில், ஒற்றுமை விழா நடப்பதற்கு முன்னால் வரை 'ஸ்பெக்ட்ரம்' உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி அ.தி.மு.க. தலைவி வெளியிட்ட அனல்பறக்கும் அறிக்கைகளுக்குப் பின்னால் 'சன்' தரப்பின் உற்சாக ஈடுபாடு இருந்ததா என்றும் விவாதங்கள் உண்டு. நிலைமை இப்போது மொத்தமாக உல்டாவாகி, தனக்குப் பெரும் அளவில் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்ட 'சன்' சகோதரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக அறிக்கைவிட்டு ஜெயலலிதா தாளிப்பது, அரசியலில் ஒரு ஆச்சர்யமான திருப்பம்தான்!''

''ஓஹோ!''

''தயாநிதி மாறன் தரப்பைப் பொறுத்தவரை, 'அவர் கனிமொழிக்குப் போட்டியில்லை. அதேவேளை, டெல்லியில் அவர் பதவி அலங்காரத்தோடு வளைய வருவதும் முக்கியம். அதற்காக அவசரப்பட வேண்டிய தில்லை. சுமார் ஒன்றேகால் வருடமாக ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தும் கனிமொழியால் டெல்லியில் என்ன 'தனி முத்திரை' பதிக்க முடிந்தது? அவர் தமிழ்நாட்டுக்குள்ளேயே அல்லவா வலம் வந்து கொண்டிருந்தார்! மாறாக, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, சோனியா குடும்பத்தின் தனி அன்பை தயாநிதி பெற்றாரே... ராகுல் காந்தி யின் மரியாதைக்குரிய கவனிப்பை ஈர்த்தாரே... இப்போதுகூட, சமாதானச் செய்திகள் வந்ததுமே டெல்லியிலிருந்து ஏராளமான வாழ்த்துகள் அவருக்கு வந்ததே...' என்றெல்லாம் அடுக்குகிறார்கள். 'நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. காங்கிரஸோடு சேர்ந்து செயலாற்றத் துடிப்பான தி.மு.க-வின் டெல்லி பிரதிநிதியாக சோனியா வரையில் நினைப்பது தயாநிதியைத்தான். குடும்பத்துக்குள் என்ன பிரஷர் இருந்தாலும், கூட்டணித் தலைவியின் பாஸிட்டிவான பிரஷரில் தயாநிதியை தி.மு.க. தலைமை சீக்கிரமே மேளதாளத்தோடு டெல்லிக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைமை வரும்!' என்றும் சொல்ல ஆரம்பித் திருக்கிறார்கள் தயாநிதி தரப்பினர்!'' என்ற கழுகார்,

மிஸ்டர் கழுகு: பனிமலை... அழகிரி... எரிமலை கனிமொழி!

''ஒற்றுமை விழாவில் மிஸ்ஸான மற்றொரு குடும்பம் முதல்வரின் மகனான மு.க.முத்துவுடையது. அவருடைய புதல்வரும் தலைவரின் பேரனுமான டாக்டர் அறிவுநிதி நேரில் வந்து பிறகு வருத்தப்பட்டாராம். 'முன்கூட்டியே சொல்லியிருந்தால் கோலாகல சந்திப்பில் நாங்களும் இடம் பெற்றிருப்போமே' என்றாராம். பதிலுக்கு கோபால புரம் இல்லத்தில், 'இது இங்கிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. குடும்பத்தின் சிண்டு சிறுசுகள் எல்லாம் கூடி நடத்திய சங்கமம். அவர்களோடு நீங்களும் தொடர்பில் இருந்திருந்தால் தானாகவே இங்கே வந்து சேர்ந்திருப்பீர்கள்' என்று சொல்லப்பட்டதாம்'' என்றவரி டம், ''குடும்பம் ஒரு கதம்பம்!'' என்று நாம் சொல்ல,

''உறவுகள் பிரிந்திருந்தபோது முழுக்க முழுக்க 'கலைஞர் தொலைக்காட்சி'யின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார், சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன். லட்டு லட்டாக திரைப்படங்களை 'கலைஞர்' பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு இப்போது பெருத்த சந்தேகம். இதே ரூட்டில் போகலாமா அல்லது 'சன்' டி.வி. பக்கமும் பார்வையைத் திருப்பலாமா? இதுவரை சிக்னல் கிடைக்கவில்லையாம்!''

''கேயாஸ் தியரி எப்படியெல்லாம் வேலை செய்கிறது..!''

''பேஷாகச் சொன்னீர்... தனிமைப் படுத்தப்பட்ட சோதனையான கால கட்டத்தில் தயாநிதி மாறனுக்குத் துணை யாக இருந்த நம்பிக்கைப் படையில் முக்கியமானவர், வீனஸ் வீரஅரசு! யாரையெல்லாம் தயாநிதி அருகில் சேர்க்கலாம் என்பதை மோப்பம் பிடித்து முன்கூட்டியே ரிப்போர்ட் கொடுத்துக்கொண்டு இருந்தவரும் அவரே. 'மாறன் பேரவை' என்ற பெயரில் தனி இயக்கம் தொடங்கும் திட்டத்தோடு தயாநிதியை நேரடியாக சிலர் சுழலுக்குள் இழுக்கப் பார்த்தபோதும், 'அவர்கள் ஆர்வத்தை அணைக்க வேண்டாம். அவசரப்பட்டு நீங்கள் நேராகக் கால் வைக்கவும் வேண்டாம்' என்று நடுவாந்திரமாகச் சொல்லித் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில், 'மாறன் பேரவை' என்று பேனர் வைத்து பரபரப்பு நடத்திய தி.மு.க. 'தைரியசாலி'கள், தற்போதைய ஒற்றுமைப்படலத்தில் வெலவெலத்துப் போயிருக்கிறார்களாம். தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலினோடு மு.க.அழகிரியின் படத் தையும் அட்டகாசமாக சேர்த்து அச்சிட்டு 'நாளை நமதே... நாற்பதும் நமதே' என்று அவசர அவசரமாக போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி, ஒரு குடையின் கீழ் தங்களையும் அடையாளம் காட்டிக்கொள்ள ஆரம்பித் திருக்கிறார்கள்!'' என்று சொல்லிக்கொண்டே,

தன் செல்போனில் நம்பர்களை ஒற்றி காதில் வைத்துக் கொண்ட கழுகார், ''டிசம்பர் ஐந்தாம் தேதிதானே தயாநிதி மாறனின் பிறந்தநாள்? என்னவெல்லாம் ஏற்பாடு அதற்கு?'' என்று கேட்டுக்கொண்டார். அதுபற்றி நம்மிடம் பேசாமல் அப்போலோ பக்கம் வண்டியைத் திருப்பினார்.

''சிகிச்சையில் இருக்கும் வீரபாண்டியாரைப் பார்க்க வந்த முதல்வர், திரும்பிச் சென்றதுமே அவருடைய விவசாய இலாகாவை நேருவிடம் கொடுக்கும் அறிவிப்பு வந்தது. வீரபாண்டியாரின் வாரிசுகள் இதை ரசிக்க வில்லையாம். 'கூடிய சீக்கிரம் அப்பா டிஸ்சார்ஜ் ஆவார். பயப்பட ஏதுமில்லை!' என்று முதல்வரிடம் சொன்ன பிறகும் இந்தப் பறிப்பு தேவையா? அமைச்சர் தா.மோ.அன்பரசன் செயல்படவே முடியாமல் மூன்று மாதத்துக்கும் மேலாக வீட்டிலேயே அடங்கியிருக்க வேண்டிய நிலை வந்தபோது, அவருடைய தொழிலாளர் நல இலாகாவைப் பறித்து யார் வசமாவது ஒப்படைத்தார்களா?' என்று புலம்புகிறார்களாம் இந்த வாரிசுகள்!''

''கழுகாரே... சமீப காலங்களில் ஸ்டாலினுக்குக்கூட வீரபாண்டியார் ரொம்பவே ராசியாகியிருந்தாரே...''

''அது நிஜம்! அதேநேரம், சமீபத்தில் நடந்த தொழிற் சங்கத் தேர்தலில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு வீரபாண்டியார் தரப்பு ஆப்பு வைத்ததும் நிஜம்!'' என்ற கழுகார் ஒரு சல்யூட் வைத்து விட்டுக் கிளம்பியபோது, தாவிச் சென்று கட்டிப் பிடித்து தட்டிக் கொடுத்தோம். திகைப்போடு அவர் பார்க்க...

'கடமையைச் செய்; பலனை எதிர் பார்' என்று சூப்பர் ஸ்டாரே சொல்கிறார். செய்திகளின் சூப்பர் ஸ்டாரான உமக்கு ஏன்தான் இவ்வளவு அடக்கமோ..? விமான நிலையத்தின் எதிரே அமைந்திருக்கும் பறக்கும் மேம் பாலம், தீவிரவாதிகளின் 'ராக்கெட் லாஞ்சர்' இலக்குக்குத் தோதான தளமாக மாறக்கூடும் என்று நீர் கொடுத்த எச்சரிக்கை வெளியான ஒரு சில மணிநேரத்திலேயே 'பாலத்தின் மீது பலமான பாதுகாப்புப் பார்வை படிந்தது' என்று நாளிதழ், சேனலில் எல்லாம் பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறதே...'' என்றோம் பிரமிப்பாக.

''அடியேன் பங்கு அணில் பங்கு!'' என்றபடி அந்தரத் தில் மிதந்தார் கழுகார்.

மொட்டைக் கடுதாசி போட்டேகூட உட்கட்சி எதிரிகளை முச்சூடும் காலி பண்ணிவிடலாம் என்றொரு ஸ்டைல் அ.தி.மு.க-வில் உண்டு. வேண்டாதவர்களைப் பற்றி ஏடாகூடமான புகார்களை எடுத்துவிட்டால், சரிவர விசாரிக்காமலே கட்சித் தலைமை சிரத்தை சீவிவிடும் என்று துடிப்பாகச் செயல்படுபவர்கள் நிறையவே அங்கு உண்டு. 'இத்தனைக்கும் காரணம், ஆராய்ந்து அறியாமல் முடிவெடுக்கும் தலைவிதான்' என்றே கட்சிக்குள் பலர் புலம்பிக்கொண்டிருக்க, அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்துப் பேசும்போது, 'ஜோடனையாக புகார் கொடுத்து அடுத்தவர் வாய்ப்பைக் கெடுக்காதீர்' என்று கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்திருப்பதைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

.தி.மு.க-வின் இன்னொரு பரபரப்பு... தோட்டத்தில் செல்வாக்காக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு திடீர் இறங்குமுகம் என்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தோட்டத்துக்கு சம்மன் செய்யப்பட்டவரிடம் வெகுநேரம் விசாரணை நடந்ததாம். அதன் பிறகுதான், அவருக்கு இந்த இறங்குமுகம் என்கிறார்கள். விசாரணைப் படலத்தின் உள்விவகாரங்களை அறிய அவருடைய எதிர்ப்பாளர்கள் ஆர்வமோடு காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறார்களாம்.