
எஸ்.ஈஸ்வரி சுப்பையன், தொட்டே பாளையம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தினால் யாருக்குச் சாதகம்? யாருக்கு பாதகம்?
சமச்சீர்க் கல்விக் கொள்கை, தனியார் பள்ளிக் கொள்ளைக்கு பாதகம். மற்றபடி பெரும்பான்மைக்கு அது சாதகம்தான்!
இ.சிகாமணி, அத்தனூர்.

புரட்சியாளர்களில் சே குவேரா அளவுக்கு காஸ்ட்ரோ புகழ் பெறவில்லையே. ஏன்?
வாழ்க்கையின் நீட்சிதான் காரணம்!

காந்தி அடைந்த புகழை நேரு பெறவில்லை. லெனின் அடைந்த பெருமை ஸ்டாலினுக்கு கிடைக்கவில்லை. முன்னவர்கள் இருவரும் விடுதலையை வாங்கிக் கொடுத்த பெருமையோடு (விமர்சனங்கள் வருவதற்குள்!) தங்களது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் கடமை பின்னவர்கள் இருவருக்கும் வாய்த்தது. பொது வாழ்க்கையின் பொறுப்புகளை நேரடியாக பதவியில் அமர்ந்து செய்யும்போது விமர்சனங்களும் சேர்வதால், புகழ் குறைவது யதார்த்தம்தான்.
என்.சோமசுந்தரம், வண்ணார்பேட்டை.

டெல்லி சென்று கனிமொழியைச் சந்தித்திருக்கிறாரே குஷ்பு?
##~## |
என்னே குஷ்புவின் பெருந்தன்மை! அவரைத் தி.மு.க-வில் சேர்ப்பதற்கு எதிர்ப்பாக இருந்தது முதல், அவரை வைத்துக் கூட்டம் போடவிடாமல் தடுத்தது வரை சி.ஐ.டி. காலனி கொடுத்த இடைஞ்சல்கள் அதிகம். இருந்தாலும், ஆறுதல் படலத்துக்காக அடுத்தடுத்து திகார் நோக்கி செலுத்தப்படும் வரிசையில் குஷ்புவும் இருக்க வேண்டும் என்று தலைமை நினைத்திருக்கலாம். அல்லது, இவரேகூட 'மறப்போம்... மன்னிப்போம்’ கொள்கையை இப்படி நிறைவேற்றினோரோ என்னவோ..?
லட்சுமி செங்குட்டுவன்,வேலூர் (நாமக்கல்).

ராஜீவ் கொலையில் தி.மு.க. மறைமுகமாகச் செயல்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறுகிறாரே?
அவ்வப்போது ஜெயலலிதா ஒலிபரப்பும் தேய்ந்து போன ரெக்கார்டுகளில் ஒன்று இந்தப் பல்லவி. ராஜபக்ஷேவின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலிகளின் மாஜி ஆயுத வியாபாரி குமரன் பத்மநாபன், 'திராவிட இயக்கக் கொள்கைகளின் தாக்கம்தான் ராஜீவ் கொலைக்குக் காரணம்’ என்று இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார். 'தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்துதான் ராஜீவைக் கொன்றுவிட்டார்கள்’ என்று ஜெயின் கமிஷன் சொன்னதே... அதைவிட ஜெ. சொல்வதில் காமெடி கம்மிதான்.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கருணாநிதி அரசின் திட்டங்களில், ஜெயலலிதா எவற்றைத் தொடர்வார்?
ஜெயலலிதா மனநிலை எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார் எனது நண்பர்!
சென்னை மக்களை விழிபிதுங்க வைத்திருப்பது போக்குவரத்து நெரிசல்தான். அதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் ஜப்பான் நிதி உதவியுடன் செயல்படுத்தப் போகிறார்கள். கோடிக்கணக்கான பணம் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி கொண்டுவந்த திட்டம் என்பதால் அதை எப்படியாவது நிறுத்தும் யோசனை இருக்கிறதாம் இந்த அரசுக்கு. 'நிதி நெருக்கடி இருப்பதால் இந்த திட்டத்தை நிறுத்திவிடலாம்’ என்று ஃபைல் தயாரிக்கச் சொன்னதாகவும், அதற்கு அரசு அதிகாரிகள் கவலையோடு மாற்றுக் கருத்து சொல்லி வருவதாகவும்கூட தகவல். இதுபோன்ற நீண்ட கால நன்மை பயக்கும் திட்டங்களை விரைந்து முடித்து, அதனால் வரும் நல்ல பெயரை அறுவடை செய்வதை விட்டுவிட்டு, வீம்பு செய்வது வீணான காரியம் என்பதை ஜெயலலிதாவுக்கு யார் எடுத்துச் சொல்வது?
தங்கராசு, ஆறுமுகநேரி.

தவறு செய்தவர்கள் எந்த தண்டனையிலும் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியுமா..?
1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தி இந்திய உயிர்களைக் குடித்த ஜெனரல் டையர், இதுபோன்ற இறுமாப்புடன்தான் இருந்தான். சட்டம் அவனுக்கு எந்த தண்டனையும் தரவில்லை. 'பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காக சிறிதளவும் வருந்தவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் செய்ததை, வாய்ப்பு கிடைத்தால் ஆப்பிரிக்காவில் அரங்கேற்றவும் தயார்’ என்று மேடைகளில் பேசிவந்தான். 20 வருடங்கள் காத்திருந்து, 1940-ம் ஆண்டு இங்கிலாந்துக்குள் நுழைந்து, காத்திருந்து அவனை சுட்டுக் கொன்றார் இந்திய தீரர் உத்தம்சிங். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. அது யார் மூலம், எப்படி என்பதுதான் காலம் வைத்திருக்கும் கணக்கு!
மதுப்பித்தன், சென்னை.

ராகுல்காந்தி தமிழக மக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருப்பார்?
தங்கபாலுவை வைத்து இனியும் கட்சி நடத்த ராகுல் நினைப்பது முதல் தவறு. நான்கைந்து வட இந்திய இளைஞர்களை லேப் டாப்புடன் தமிழ் மண்ணில் இறக்கிவிட்டால் மக்கள் மனதை அறிந்துவிட முடியும் என்று நினைப்பது அடுத்த தவறு. ஆண்டுக்கு ஒருமுறை அரைநாள், தமிழ்நாட்டுக்கு வந்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புவது மூன்றாவது தவறு.
நேரு குடும்பத்துக்கான மயக்கம் உத்தரப்பிரதேசத்திலேயே கரைந்து போனபிறகும், தமிழகத்தில் அதை தொடர்ந்து எதிர்பார்ப்பது பெரும் தவறு!
ஆர்.அஸ்லம், ஏழுகிணறு.

குபீர் உண்ணாவிரதப் பரபரப்பைக் கிளப்பி இருக்கும் யோகா குரு பாபா ராம்தேவ் தேறுவாரா?
எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களை எல்லாம் யோகா மூலம் குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று அதிரடி கிளப்பிப் பேர் வாங்கியவர். இப்போது, ஊழல் அதிகாரிகளை தண்டிக்கக் கோரியும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து இருக்கிறார்.
'அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவுக்காக நடத்தி வரும் தர்ம யுத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக அரசு சார்பில் தூண்டிவிடப்படுபவர்’ என்றும் இப்போது டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது. அதை நிரூபிப்பது போலவே, 'லோக்பால் விசாரணைக்குள் பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்டுவர வேண்டியது இல்லை’ என்றும் ராம்தேவ் அருள்வாக்கு சொல்லி இருக்கிறார். அரசு அதிகாரிகள் இவரை நேரடியாக சந்தித்து உண்ணா விரதத்தைக் கைவிடச் சொல்லி கெஞ்சியதை எல்லாம் பார்த்தால்... என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது.
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி

தமிழகத்துக்கு சட்ட மேலவை தேவையா?
இருக்கும் சட்டசபையை ஒழுங்காக நடத்தினால் போதாதா!
மேலவையை அறிஞர்கள் அவை என்பார்கள். காலப்போக்கில் அது ஜால்ராக்களின் அவையாக மாறியது. தேர்தலில் தோற்றுப்போனவர்களின் புறவாசலாகவும் மாறியது. தேர்ந்த திறமையான, அரசியல் சார்பற்ற மனிதர்களை அங்கு அழைத்து வந்து உட்கார வைத்து அறிவுரை கேட்கும் பக்குவம் குறைந்த முதலமைச்சர்கள் இருப்பதாலேயே மேலவை என்பது வீண் அவை!
