கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அப்படிப் புதிதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றிருந்தார்.

உச்ச நட்சத்திரத்திலிருந்து இன்று ஆந்திரா அமைச்சரவையில் இடம் வரை, ரோஜாவின் அரசியல் பயணத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
ரோஜா... 90-களில் இந்தப் பெயரை ஆந்திராவிலும் தமிழகத்திலும் கேள்விப்படாத ஆட்களே இருக்க முடியாது. ஆர்.கே.செல்வமணியின் `செம்பருத்தி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான ரோஜா, முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து, அவர்கள் மனதில் முத்திரை பதித்துவிட்டார். அந்தத் திரைப்படத்தின் இயக்குநரான ஆர்.கே.செல்வமணியை பின்னாள்களில் மணந்து இல்லற வாழ்வில் அடியெடுத்துவைத்தார். இதற்கிடையே சரத்குமார், பிரபுதேவா, மம்முட்டி, ரஜினிகாந்த் என்று பெரிய ஹீரோக்களுடன் இணைது நடித்த ரோஜாவின் கிராஃப் சினிமாவில் உயர்ந்துகொண்டேபோனது.

சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆகிவிட்டால் உடனடியாக வரும் அந்தக் கேள்வி ரோஜாவை நோக்கியும் வந்தது.
'எப்போ அரசியலுக்கு வருவீங்க?'
1999-ல் தனது அரசியல் பயணத்தை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தொடங்குகிறார் ரோஜா. கட்சியில் சேர்ந்தவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணியான தெலுங்கு மகிளாவுக்குத் தலைவராக நியமிக்கப்படுகிறார். கட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் பதவிகள் கொடுத்தாலும், தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் ரோஜாவுக்கு ஏதாவது ஒருவிதத்தில் இடைஞ்சல் வந்துகொண்டேயிருந்தது. அவரை பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பது, கட்சிப் பணிகளைச் செய்யவிடாமல் குறுக்கிடுவது, தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வது என்பன போன்ற பல குற்றசாட்டுகளை கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் முன்வைத்தார் ரோஜா. ஆனால் அது குறித்து அவர் எந்தவொரு பெரிய நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ரோஜா தோல்வியைத் தழுவினார். அதன் பிறகு, இருக்கும் இடத்தில் மரியாதை ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கேயும் ரோஜாவால் பெரிய அளவில் பங்காற்ற முடியவில்லை. அரசியலிலிருந்து விலகிவிடலாம் என்று ரோஜா நினைத்துக்கொண்டிருக்கும்போது, 2011-ல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுகிறது. உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைகிறார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு ரோஜாவின் அரசியல் கிராஃப் வேகமாக உயர ஆரம்பித்தது. 2014 சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். தனது அனல் பறக்கும் பிரசாரம் மூலம் எதிர்த்து நின்ற வேட்பாளர்களைத் தோற்கடித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார் ரோஜா.

அதுவரை சட்டமன்றத்தின் வெளியில் ஒலித்த ரோஜாவின் குரல், அன்று முதல் சட்டப்பேரவையின் உள்ளேயும் ஒலிக்க ஆரம்பித்தது. பேரவை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்திய ரோஜா, சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் பேசினார் என்று குற்றம்சாட்டப்பட்டு 2015-ல் ஒரு வருடத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அதை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். பின் 2019 தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா, மீண்டும் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். ஆனால் இம்முறை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, ஆளுங்கட்சி உறுப்பினராக.

ரோஜாவுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் எந்த அளவுக்கு முரண் இருந்ததோ, அதே அளவுக்கு ரோஜாவுக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்குமிடையே நட்பு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே ரோஜாவுக்குப் பல பதவிகள் அளித்து ஊக்குவித்துவந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. ரோஜாவின் ஆரம்பகாலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மகளிர் அணித் தலைவர் பதவி, பின்னர் 2019-ல் ஆந்திரப்பிரதேசம் தொழிற்சாலை உற்பத்தி நிறுவனத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் பதவி. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, "அவர் எனக்கு இன்னோர் அம்மா, அரசியலில் நான் ஈடுபடக் காரணமாக அமைந்தவர் அம்மாதான்" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அவரது பாணியிலேயே சினிமாவிலிருந்து அரசியலிலும் கால்தடம் பதித்துக்கொண்டிருக்கிறார் ரோஜா!