
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா.
நீலகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `` என்னுடைய பேச்சால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் கலங்கினார் என்ற செய்தியை ஊடகங்களில் பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தேன். இடப் பொருத்தமற்று, சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடி மனதின் ஆழத்தில் இருந்து வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமானால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை. எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும் ஒப்பீடும் தான்.” என்றார்.
` எனது தாயைப் பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள்’ என்று முதலமைச்சர் கண்கலங்கி பரப்புரையில் பேசி வரும் நிலையில், ஆ.ராசவின் மன்னிப்பு இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.