சன் டிவி-யில் கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல், `அக்னி நட்சத்திரம்'. இந்த சீரியல் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், கணவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதனையடுத்து அந்த சீரியலிலிருந்து விலகினார் நடிகை விநோதினி. அதன் பிறகு வேறெந்த சீரியல்களிலும், சினிமாவிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தினகரனின் அ.ம.மு.க கட்சியில் இணைந்துவிட்டார். தற்போது அதை உறுதி செய்யும் படமும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை விநோதினியிடம் பேசினோம்.
``சமீபத்தில் என் கணவர் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டார். அந்த விபத்தினால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தவரை, தற்போதுதான் வீட்டுக்கு அழைந்து வந்தோம். என்னதான் அவர் கஷ்டத்தில் இருந்தாலும் எனக்கு அவர் கொடுக்கும் ஊக்கம் மிகப் பெரியது. கூடிய விரைவில் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றவர் தினகரன் கட்சியில் சேர்ந்ததற்கான காரணத்தையும் பகிர்ந்தார்.

``அரசியல் தளத்தில் இயங்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவு. நீண்ட நாள் ஆசை மட்டுமே இருந்தாலும், எந்தக் கட்சியில் சேர்வது என்கிற தயக்கமும் குழப்பமும் இருந்தது. அதற்குச் சரியான தருணம் எப்போது வரும் எனக் காத்திருந்தேன். இப்போது இருக்கும் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர், டி.டி.வி. தினகரன். நானாகத்தான் கட்சியைத் தொடர்புகொண்டு என்னை இணைத்துக் கொள்வதாகச் சொன்னேன். அதன் பேரில்தான் அவர்கள் அழைத்திருந்தார்கள். அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. அரசியல் தளம் தடுமாற்றம் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் அ.ம.மு.க கட்சி எனக்குச் சரியானதாகத் தெரிந்தது. அதனால்தான் சேர்ந்தேன்.
அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை எப்போதும் சந்திக்க முடியும். மிக எளிமையான நபர். தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவுக்கு என் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். கட்சிக்காக வேலை செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய சேவை அந்தக் கட்சிக்குத் தேவைப்படும்போது நிச்சயம் இறங்கி வேலை செய்வேன். இன்னும் எனக்கான உறுப்பினர் அட்டை இதுவரை வழங்கப்படவில்லை.

இன்னும் ஒரு வாரத்தில் உறுப்பினர் அட்டை தயாராகிவிடும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இப்போது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு உடனடியாக என்னால் கட்சி வேலைகளில் இறங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பிப்பேன். கட்சியுடன் சேர்த்து, மக்களின் ஆதரவும் ஆசியும் எனக்குத் தேவை'' எனப் பேசி முடித்தார் விநோதினி.