சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் நேற்று வெளியானது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு தி.மு.க அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அதே வேளையில் இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தி.மு.க-வின் சகாப்தம் முடிகிறது என விமர்சித்திருக்கிறார்.
சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``தி.மு.க-வை பொறுத்தவரை கழக குடும்பம் போய், குடும்பமே ஒரு கழகம் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதால் இனிமேல் தி.மு.க-வுடைய ஹெச்.ஆராக (HR) உதயநிதி இருப்பார். எல்லாத்துக்கும் கவர்னர் தேவையில்ல, இப்போ அவங்க பிள்ளைக்கு இளவரசரா முடிசூட்டுறதுக்கு மட்டும் ஆளுநர் தேவையா. இனிமேல் தி.மு.க-வை பொறுத்தவரையில் ஒரு முடிந்த சகாப்தமாகத்தான் நிச்சயமாக எடுத்துக்கொள்ள முடியும்.

கட்சியில் எவ்வளவோ பேர் இருக்காங்க. எவ்வளவோ பேர் தியாகம் பண்ணவங்க இருக்காங்க. ஆனால் வாழையடி வாழையாக அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வராங்க. மு.க.ஸ்டாலினின் கனவு நனவாகி இருக்கு. அதனால தமிழ்நாடு அமெரிக்கா மாதிரி ஆகப்போறதில்ல. தமிழ்நாடு லண்டன் மாதிரி ஆகப்போறதில்ல. ஒன்னும் நடக்க போறதில்ல. கிராமத்துல ஒரு பழமொழி உண்டு, `அறியாப்பிள்ளை விளைத்த பயிர் வீடு வந்து சேராது'. அந்த மாதிரி அரசியல் அனுபவம் இல்லை. அரசியல்ல ஒரு கத்துக்குட்டி. திரைப்படத்திலும் ஒரு கத்துக்குட்டி. உதயநிதி ஸ்டாலினை கொண்டு வந்ததுனால மூத்த அமைச்சர்களுக்கு வருத்தம். அதை வெளியே சொல்ல முடியல.
நாளைக்கு அமைச்சராக்கிட்டா உள்ளாட்சித் துறை கொடுக்கிறதா சொல்றாங்க. எதுவேணா கொடுத்துட்டு போகட்டும். உள்ளாட்சி துறை கொடுத்த உடனே தமிழ்நாட்டுல இருக்கிற 13,000 கிராமங்கள்லயும் தேனும், பாலும் ஆறா ஓடப்போறது கிடையாது. அவங்க குடும்பத்துக்குள்ளேயே நிச்சயம் பிரச்னை இருக்கு. அது அவங்க குடும்ப விஷயம் வெளியே சொல்ல முடியாது. அதே நேரத்துல இது கட்சிக்குள்ளேயும் பெரிய பிரச்சினையாகி இதோட தி.மு.க-வுக்கு ஒரு சகாப்தம் முடிகின்ற ஒரு நிகழ்வாகத்தான் முடிசூட்டு விழாவை நிச்சயமாக பார்க்க முடியும்" என்று கூறினார்.