தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை, மின்கட்டணம், விலைவாசியை தி.மு.க அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ``தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை, மின்கட்டணம் உயர்ந்துள்ளது. அனைத்து விலைவாசியும் உயர்ந்துள்ளது. அ.தி.மு.க அரசு கொண்டு வந்ததுபோல் ஒரு திட்டத்தைக்கூட தி.மு.க அரசு கொண்டுவரவில்லை.

குஜராத்தை பொறுத்தவரை அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் சொந்த ஊர் உள்ள மாநிலம். எனவே அவர்களுக்கு அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அங்குள்ள தமிழர்களும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
எனினும், கூட்டணி அமைவதை பொறுத்துதான் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிற கட்சி. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்.

அது பா.ஜ.க கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கோவை செல்வராஜ் முன்பு காங்கிரஸில் இருந்தார். இப்போது தி.மு.க-வில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அது அவரது விருப்பம். அ.தி.மு.க-விலிருந்து கட்சி மாறியவர்கள்கூட, தி.மு.க-வில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதனால் கட்சி மாறியவர்கள் குறித்துப் பேச விரும்பவில்லை" என்றார்.