அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்த `நம்ம ஸ்கூல்' திட்டம் தன்னுடைய ஆட்சியில் கொண்டுவந்ததாகவும், அதற்கு மூடுவிழா நடத்த தற்போது 3 கோடி ரூபாயை தி.மு.க அரசு செலவழித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என் தலைமையிலான அம்மாவின் அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயின்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கும் இந்த செயல் திறனற்ற விடியா தி.மு.க அரசு, கடந்த 19.12.2022 அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதித் திட்டத்துக்கு தங்கிலீஷில் `நம்ம ஸ்கூல்' என்று நாமகரணம் சூட்டி இந்த விடியா அரசின் முதலமைச்சர் மீண்டும் அதை தொடங்கிவைத்திருக்கிறார்.

23.5.2017-ல் பள்ளிக்கல்வித்துறை துமைச்சராக இருந்த செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை சுமார் 82 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர் நிதியாக வரப்பெற்றது. இந்திய நிறுவனச் சட்டம் 2019-ன்படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு விழுக்காடு (2%) தொகையை சமூகப் பொறுப்புச் செயல்பாடுகளில் (Corporate Social Responsibilities) பயன்படுத்த வேண்டும் என்று முறை வகுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருந்த தொழில் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் எளிய, நம்பகத்தன்மைகொண்ட இணையவழித்தடமும் ஏற்படுத்தும்விதமாக, நான் 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், இணையவழி நிதி திரட்டும் இணையதளத்தைத் (https://contribute.tnschools.gov.in) தொடங்கும் விழாவை எளிமையாகத் தொடங்கிவைத்தேன்.

இணையவழியில் திரட்டப்படும் நிதி, அதற்கென தொடங்கப்பட்டிருக்கும் தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டது. இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாகச் செயல்படும் என்றும், அந்தக் கழகத்தின் பொருளாளரும், செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள் என்றும் அரசு செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டது. தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருந்த, சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த விடியா தி.மு.க அரசு, வெற்றிகரமாக செயல்பட்டுவந்த இந்தத் திட்டத்தையும், இந்தத் திட்டத்துக்காக தனியாக தொடங்கப்பட்ட இணையதளத்துக்கும் மூடுவிழா நடத்தியது.

எனினும், தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு, நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், அம்மாவின் அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்துக்கு தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, `நம்ம ஸ்கூல்' என்ற தங்கிலீஷில் பெயரைவைத்து திட்டத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார் விடியா தி.மு.க அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர். என் ஆட்சிக்காலத்தில் எளிமையாகத் தொடங்கிவைக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இந்தத் திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில் செய்தி வெளிவந்திருக்கிறது. அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் இருக்கிறது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்... சொல் ஒன்று, செயல் ஒன்று எனவும், சித்தம் போக்கு-சிவம் போக்கு என்றும் செயல்படும் இந்த விடியா அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு ரூ.3 கோடியை திமுக வீணடித்தது'' எனத் தெரிவித்திருக்கிறார்.