அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், சட்டசபையிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படாததால், பழைய நடைமுறை தொடர்ந்தது. இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படாமல் பன்னீர்செல்வத்துக்கே வழங்கப்பட்டிருந்தது.

மேலும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி.உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் உட்கார்ந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தரப்பு எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று சட்டமன்றம் கூட்டம் கூடுவதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து, "அதிமுக-வின் எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி தரப்புக்கே ஆதரவு அளிப்பதால், எடப்பாடி தரப்பு முன்மொழிபவரே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க முடியும். எனவே ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு, ``சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்து விளக்கம் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனால் எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
கூட்டம் ஆரம்பித்ததும், எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர், ``கேள்வி நேரம் முடிந்ததும் அது குறித்து முடிவெடுக்கலாம். முதலில் மக்கள் பிரச்னையைப் பார்க்கலாம்” என்றார். ஆனால் எடப்பாடி தரப்பினர் தொடந்து கோஷம் எழுப்பினர்.
இதனால், அப்பாவு, ``நீங்கள் கலகம் செய்யவே வந்திருப்பதுபோல் தெரிகிறது” எனக் கூறியதுடன் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.