உத்தரப்பிரதேசத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், `சீனாதான் இந்தியாவின் உண்மையான எதிரி , பாகிஸ்தான் இந்தியாவின் அரசியல் எதிரிதான்’ என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய கருத்து, தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லக்னோவில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ``அகிலேஷ் யாதவ் பாகிஸ்தானின் ஆதரவாளர், ஜின்னாவின் ஆதரவாளர்” என்று அகிலேஷ் யாதவைக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், ``பாகிஸ்தானை உண்மையான எதிரி நாடாகக் கருதவில்லை என்று அகிலேஷ் கூறியுள்ளார். அப்படியென்றால், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகள் இந்தியர்கள் இல்லையா?” என்று கேள்வியெழுப்பினார்.

இந்தப் பேட்டியில் இறுதியாக சம்பித் பத்ரா, ``தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்கள் யார் என்று அகிலேஷ் யாதவ் அறிவிக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் நஹித் ஹசன் போன்றோரைத் தேர்தலில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். மேலும் யாகூப் மேமனை தூக்கில் போடாமல்விட்டிருந்தால் அவரையும் தேர்தலில் நிறுத்தி, அப்துல் கசாப்பையும் நட்சத்திரப் பேச்சாளராக அகிலேஷ் யாதவ் தேர்தலில் நிறுத்தியிருப்பார்” எனவும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
