மறைந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடைய ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கொறடாவாகவும், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் இருந்தவர் மனோகரன். 2011-16 காலக்கட்டத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த மனோகரன், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தீவிர கழகப் பணியாற்றி, ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெறும் வகையில் பணியாற்றினார். அதற்கு பரிசாக மனோகரனுக்கு அரசு கொறடா பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த மனோகரன், இறுதியில் தினகரன் பக்கம் சாய்ந்தார்.

அதையடுத்து அ.ம.மு.க-வில் மாநில அமைப்புச் செயலாளர், கூடுதல் பொறுப்பாக வடக்கு மாவட்டச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் என பல்வேறு பதவிகள் மனோகரனுக்கு கொடுக்கப்பட்டன. அ.ம.மு.க-வின் வெற்றிவேல் மறைவுக்குப் பின்னர் அவர் வகித்த பொருளாளர் பதவியும் மனோகரனுக்குக் கிடைத்தது. அதையடுத்து அ.ம.மு.க பொருளாளர், மத்திய மண்டல பொறுப்பாளர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் என தினகரனுக்கு நெருக்கமாக அவரின் வலது கரத்தைப்போல வலம் வந்தார்.
மனோகரன் நம்பிய ஓ.பி.எஸ், தினகரன் ஆகிய இருவருமே காலப்போக்கில் பெரிதாக சோபிக்காமல் போயினர். இப்படியான நிலையில், அரசியல் எதிர்காலம் கருதி, இன்று காலை சென்னையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்த மனோகரன், தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அ.தி.மு.க-வினுடைய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில், எதிர் முகாமுக்குச் சென்ற பலரும் மறுபடியும் எடப்பாடி அணியில் ஐக்கியமாகி வருகின்றனர். 'அ.தி.மு.க-வில் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்' என டி.டி.வி.தினகரன் சொல்லிவந்த நிலையில், அ.ம.மு.க-வின் பொருளாளரையே தங்கள் அணிக்கு தூக்கி எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.